Saturday, October 6, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-6)


அன்புடன் புகாரி

 படித்தேன் பிடித்தேன் 016


இஸ்லாம் பெண்களுக்குச் சம உரிமை தரும் மார்க்கம்.

இஸ்லாம் பெண்களை அடிமைகளாக வைத்திருக்கக் கூறவில்லை.

சிலர் இஸ்லாம் பெண்களுக்குச் சம உரிமை வழங்குகிறது என்று ஒருபக்கம் கூறிக்கொண்டு மறுபக்கம் அவர்களை அடிமைகளாய்க் காண்பது இரட்டை நிலைப்பாடு. அதை இறைவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்.

ஆண்களின் ஆளுமை விருப்பம் அல்ல இஸ்லாம்

இறைவனின் அறிவுரைகள்தாம் இஸ்லாம்.

பெண்கள் முன்னேறாமல் எந்த சமுதாயமும் முன்னேறியதாய்ச் சரித்திரம் இல்லை.

முஸ்லிம் பெண்கள் புர்க்காவுக்கும் பிரியாணிக்கும்தான் என்ற வக்கிரத்தை அழிக்கப் பாடுபடுவோம்.

அதுதான் உண்மையான இஸ்லாமியப் பாதை.



 படித்தேன் பிடித்தேன் 017


பெண்களின் பலவீனம் என்று கூறப்படுவது
பெண்களின் பலவீனம் அல்ல
அது ஆண்களின் பலவீனம்

ஒரு பெண்ணுக்கு ஆபத்து ஆண்களின் வழியாக மட்டுமே வருகிறது.

நடு இரவில் ஒரு பெண் தனியாகச் செல்ல முடியாது.

ஏன் தெரியுமா?

சிங்கமோ புலியோ கரடியோ ஓநாயோ அவளை வேட்டியாடி விடும் என்பதற்காக அல்ல.

வெறிபிடித்த ஆண்கள் வேட்டையாடிவிடுவார்கள் என்பதால்தான்.

வெறிபிடித்த ஆண் என்பவன் மிகவும் பலவீனமானவன்.

பலவீனம் இல்லாமல் இருப்பது என்பது மனவீரத்தோடு இருப்பதுதான்.

மனவீரம் இருந்தால் ஓர் ஆண் தனியே செல்லும் பெண்ணை வன்புணர்ச்சி செய்யமாட்டான்.

ஆகவே
பலவீனமாக இருப்பவர்கள்
பெண்கள் அல்ல
ஆண்கள்தாம்

ஆண்கள் காட்டு விலங்குகளைப் போல மனக் கட்டுப்பாடுகள் இல்லாதவர்களாக இருப்பதால்தான் பெண்களுக்குப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது.

ஆணுக்கு விரோதி பெண் அல்ல.
ஆனால் ஒரு பெண்ணுக்கு விரோதி ஆண்தான்.

அப்படி பெண் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் ஒரு பெண்ணுடன் சகோதரன், தகப்பன், மகன் என்று எவராவது உடன் செல்கின்றனர்.

அவர்கள் உடன் செல்வதற்குக் காரணம் என்ன?

அது ஆண்களுக்கு வெட்கக்கேடு அல்லவா?

வெறிபிடித்த ஆண் ஒரு பெண்ணைத் தீண்டிவிடக் கூடாது என்பதற்காகவே இன்னொரு ஆண் துணைக்குப் போனான்.

அன்றைய நாளின் இந்த நிலையை ஒழுங்குபடுத்தவே குர்-ஆன் வசனங்கள் வந்தன. மற்றபடி பெண்களின் உரிமையைப் பறிக்கவோ அவர்கள் பலவீனமானவர்கள் என்று அறிவிக்கவோ அல்ல.

இன்றெல்லாம் முன்னேறிய நாடுகளில் ஆண்களின் பலவீனங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் சுதந்திரமாக வெளியில் செல்கிறார்கள்.

ஆகவே ஆண்களுக்கே இந்த விசயத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் தேவை பெண்களுக்கு அல்ல.


 படித்தேன் பிடித்தேன் 018

பலவீனங்கள் பெண்களுக்கு இல்லை
ஆண்களுக்குத்தான் இருக்கிறது

ஆண்கள்தாம் மார்க்கத்தின் வழி சென்று தங்களின் மிருக குணத்தை மாற்றிக்கொண்டு மனிதர்களாய் உலாவரவேண்டும்.

தனியே செல்லும் பெண்ணை வன்புணர்ச்சி செய்வது இஸ்லாத்தில் ஹலாலா ஹராமா?

ஆண்கள் ஹலால் வழியில் நடந்தால் பெண்களுக்கு என்ன பிரிச்சினை?

ஆண்கள் தங்கள் மிருக குணத்தை மாற்றிக்கொண்டால், பின் பெண்கள் சுதந்திரமாக நடு இரவிலும் தெருவில் நடக்கலாம்.

ஓர் ஆணின் குறையை பெண்மீது சுமத்துவது தவறான கண்ணோட்டம்.

வளர்ந்த நாடுகளில் இந்த நிலை வெகுவாக மாறிவிட்டது.

பெண்கள் சுதந்திரமாக எங்கும் செல்கிறார்கள். முஸ்லிம் பெண்கள் எங்கும் எதிலும் கலந்து கொள்கிறார்கள். எவரின் துணை இன்றியே செயல்படுகிறார்கள்.
Source : http://anbudanislam

No comments:

Post a Comment