Monday, November 30, 2015

உண்மை எங்கேயும் எப்போதும் கைகொடுக்கும்

ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் ஈராக்கின் ஆளுநராக இருந்தான்.
பெரிய கொடுங்கோலன்.
பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றவன்.

அவனுக்கும் இப்னு கிர்ரிய்யா அல் ஹிலாலி என்ற அறிஞருக்கும் திருவிளையாடல் பட பாணியில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேள்விகளை ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் கேட்க இப்னு கிர்ரிய்யா பதில் சொன்னார்.

அழிவுக்குக் காரணம் என்ன ?
கோபம் !

அறிவின் அழிவுக்குக் காரணம் ?
தற்புகழ்ச்சி !

சாதாரண அறிவுக்கு அழிவு எது ?
மறதி !

தாராளத்தன்மையின் அழிவுக்குக் காரணம் ?
ஒருவருக்கு உதவி செய்து அதைப் பெறுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று கூறுவது !

வீரத்தின் அழிவு எதில் இருக்கிறது ?
கொடுமை செய்வதில் இருக்கிறது !

இறை நம்பிக்கையின் அழிவு எதில் இருக்கிறது ?
பொடுபோக்கில் இருக்கிறது !

மேதைகளின் அழிவு எதில் ?
பேராசையில் !

சொத்தின் அழிவுக்கு ?
ஒழுங்கில்லா நிர்வாகம் !

பரிபூரண மனிதனின் அழிவு எதில் இருக்கிறது ?
வறுமையில் இருக்கிறது !

இறுதியாக ...
ஹஜ்ஜாஜின் அழிவு எதில் இருக்கிறது என்று கேட்டான் ஹஜ்ஜாஜ்.
இறைவன் அவரை காக்கட்டும்.
அவர் உயர்ந்த குடும்பத்திலுள்ளவர்.
அவர் செல்வம் வளரக்கூடியது .
அவற்றை அழிக்க யாராலும் முடியாது என்றார் இப்னு கிர்ரிய்யா.

நீர் பொய்யுரைத்தீர் என்று கூறி கிர்ரிய்யாவை கொலை செய்தான் ஹஜ்ஜாஜ்.

ஹஜ்ஜாஜ் கொடியவனாக இருந்தாலும் உயிருக்கு பயந்து கிர்ரிய்யா சொன்ன கடைசி பதிலை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் எல்லாம் அழியக்கூடியவை என்பதில் நம்பிக்கை உள்ளவன் ஹஜ்ஜாஜ்.

அதனால் ...
உண்மை எங்கேயும் எப்போதும் கைகொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
  Abu Haashima

No comments:

Post a Comment