Friday, October 13, 2017

நான்.... நான் ஆனேன்...!*

நான்.... நான் ஆனேன்...!*
நிதர்சனத்தில் நீந்துகின்ற
நிழல் ஆனேன்
நிம்மதியை தேடுகின்ற
நிஜம் ஆனேன்
மனிதத்தை மரணிக்கவிட்ட
பதர் ஆனேன்
மாற்றத்தை மாற்றிவிட்ட
புதிர் ஆனேன்
ஆணவமே ஆளுமையென்று
திமிர் ஆனேன்
ஆசையை துரத்துகின்ற
ஆன்மா ஆனேன்
சூழ்சிகளே சூத்திரமென
துதிக்கல் ஆனேன்

துன்பங்களை துரத்திவிட
விருப்பம் ஆனேன்
சாத்திரங்களை சதுராடிட
அறிவிலி ஆனேன்
சத்தியங்கள் சாய்ந்துவிட
சதுரங்கம் ஆனேன்
விமோட்சனம் எட்டிவிட
பக்தன் ஆனேன்
பராபரனை துதித்திட
தாமதம் ஆனேன்
மாயமாயங்களை கண்டவுடன்
மயக்கம் ஆனேன்
மந்திரங்களின் ஆக்கிரமிப்பில்
கலக்கம் ஆனேன்
மக்களவை தேர்ந்தெடுப்பில்
மந்தி ஆனேன்
ஆட்சியாளர்களின் அராஜகத்தில்
ஆண்டி ஆனேன்
உலகமயமாக்கலில் தனித்தன்மையிழந்து
ஓட்டாண்டி ஆனேன்
செயற்கையின்பத்தில் மூழ்கி
முடம் ஆனேன்
செய்வதறியாது திகைத்து
உன்மத்தம் ஆனேன்
அத்தனையும் கண்டுதெளிந்ததும்
நான்.... நான் ஆனேன்!

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails