Sunday, June 30, 2013

ரமளானை வரவேற்போம்


மகத்துவமிக்க இரட்சகனாகிய  அல்லாஹ் தன் திருமறையில்  கூறுகின்றான்...

இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

மனித குல  மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நம்பிக்கைக்  கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து  ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்:

அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

Tuesday, June 25, 2013

கத்தார் நாட்டின் அடுத்த மன்னராக சேக் தமீம் பின் ஹமத் அல்தானி பொறுப்பேற்கிறார்.


கத்தாரின் மன்னர் சேக் ஹமத் பின் கலீபா அல்தானி உடல்நலக்குறைவு காரணமாக இன்று பதவியை விட்டு விலகுகிறார். கத்தார் நாட்டின் அடுத்த மன்னராக தற்போதைய இளவரசன் சேக் தமீம் பின் ஹமத் அல்தானி பொறுப்பேற்கிறார். தற்போது சேக் தமீமிற்கு வயது 33 ஆகிறது.

கத்தாரின் அபார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமான சேக் ஹமத் அல்தானி இதுவரை ஆட்சிசெய்த மன்னர்களில் மிகவும் திறமையானவர்.அதுமட்டுமல்லாது பாலஸ்தீன்,சிரியா,லிபியா ஆப்பரிக்க நாடுகளில் நடைப்பெறும் உள்நாட்டு பிரச்சனைகளை அரபுலகின் கவனத்திற்கு கொண்டுசென்று அங்கு இஸ்லாமிய மக்கள் படும் இன்னல்களை நீக்க பல முயற்ச்சிகளை மேற்கொண்டவர்.

வளைகுடா நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனைகளை விட்டும் கத்தாரை பாதுகாத்தது மட்டுமல்லாமல் இங்குள்ள குடிமக்களின் வாழ்வாதார விகிதத்தை உலக தரத்தில் உயர்த்தவும் பல முயற்சிகளை செய்தவர்.அதன்காரணமாகவே இன்று உலக பணக்கார நாடுகளில் வரிசையில் கத்தார் முதலிடத்தில் திகழ்கிறது.

கத்தார் மக்களின் பாசத்திற்குரிய இந்த மன்னரின் நல்வாழ்விற்க்காக பிரார்த்திப்பதோடு புதிய மன்னரின் திறமையான நல்லாட்சிக்காகவும் வாழ்த்துக்களை தெரிவிப்போம்…
Source : http://muthupet.org/?p=6707

Monday, June 24, 2013

ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்;


முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். குர்ஆன் 9:71

The believing men and believing women are allies of one another. They enjoin what is right and forbid what is wrong and establish prayer and give zakah and obey Allah and His Messenger. Those - Allah will have mercy upon them. Indeed, Allah is Exalted in Might and Wise. Quran 9:71

"ஜகாத்" என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.

பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க "ஜகா அஜ்ஜரஉ" (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.

செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் "ஜகா" எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
"தூய்மைப் படுத்துதல்" என்ற அர்த்தமும் அதற்கு உண்டு. 
ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள சொத்திலிருந்து ஏழை, எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படி செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ்வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு ஆண் பெண்மீது கடமையாகும். ஜகாத் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வசனங்கள் சில 2:43,83110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5

Sunday, June 23, 2013

வெற்றி மீது வெற்றி வந்து

வாழ்க்கையில் வெற்றி

வெற்றி! வெற்றி! எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி! எல்லாம் வெற்றி! வாழ்க்கையின் தாரக மந்திரமே வெற்றி. உலகமே வெற்றியை நோக்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. வென்றவர்களை மட்டுமே வரலாறு வரவு வைக்கிறது. வெற்றியின் சூட்சுமம் தெரிந்தவர்கள் ஜெயிக்கிறார்கள்.


ஒரு வியாபாரி தன்னுடைய கடையைத் திறந்து வியாபாரம் செய்கிறார். அவரின் கனிவான பேச்சால் கவரப்பட்ட வாடிக்கையாளர்கள் மனமகிழ்வோடு பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். அதிகமான வியாபாரம்; நிறைவான லாபம்; இது வியாபாரி காணும் வெற்றி.

நுகர்வேர் தரமான பொருளைச் சரியான விலை கொடுத்து, ஏமாறாமல் வாங்கிச் சென்றால் அது நுகர்வோரின் வெற்றி.

தரமான பொருளைத் தயாரித்து நியாயமான விலை வைத்து பொய் சொல்லாமல் விளம்பரம் செய்து விற்பனை செய்தால் அது தயாரிப்பாளரின் வெற்றி.

விற்பனையாகும் பொருளுக்கு நியாயமான வரிவிதித்து நேர்மையாக வசூலித்து அரசின் கஜனாவில் சேர்த்தால் அது அதிகாரியின் வெற்றி.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி நீதியான நேர்மையான ஆட்சியை வழங்கினால், அது ஆட்சியாளர்களின் வெற்றி.

நல்வழிக்கு அழைப்போர், மெய்யான நல்வழிக்கு அழைத்தால் அது அவர்களின் வெற்றி.

அழைப்பை ஏற்று, உண்மையை உணர்ந்து இறைவனை மட்டும் ஏற்றால் அது நம்பிக்கையின் வெற்றி.

ஆக ஒவ்வொரின் செயலுக்கேற்ற வெற்றிகள் கிடைத்தாக வேண்டும்.

யார் எதைச் செய்தால் வெற்றி பெறலாமா? வெற்றி என்றால் என்ன என்பதை திருக்குர்ஆன் பின்வருமாறு சொல்கிறது.

''(இறைக் கட்டளைகளை) நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தைக் கொடுத்து (அல்லாஹ்வுக்குப்) பணிகிறவர்களே வெற்றியாளர்கள்.' (திருக்குர்ஆன் 5:55)

Friday, June 21, 2013

நீடூரில் புதிய உதயம் ‘‘அல்கயிபு ’’ மாற்றுத்திறனாளிகள் பயிற்சிப்பள்ளி..!


 நீடூர் நெய்வாசல் பொதுமக்களுக்கு ஒரு நற்செய்தி!   மாற்றுத்திறனாளிகள் (மன வளர்ச்சியில் குறைபாடு உள்ள குழந்தைகள்) இருக்கிறார்கள் .அவர்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு சேவை மையம் நீடூரில்.

 இதில் பல வகை உள்ளது நடக்க முடியாத குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள், பெற்றோர்களை பார்த்து உணர்ந்துகொள்ள முடியாத குழந்தைகள்  என பலவிதமான இருக்கிறார்கள். இன்னும் தங்களின் சுய தேவைகளான உணவு அருந்துவது, மலம், ஜலம் கழிப்பது போன்ற தங்களின் சுய தேவைகளை கூட செய்துகொள்ள முடியாத நிலையில் பல குழந்தைகள் இருக்கிறார்கள்.



நமது சமுதாய மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும் வெகு தூரம் சென்று அதற்கான வைத்தியம் செய்யவேண்டிய நிலை இருந்ததாலும் இதற்கு சிறப்பான பயிற்சி முறைகள் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததினால் இதுபோன்ற குழந்தைகள் சரியாக கவனிக்கப்படாமல் அந்த குழந்தைகள் வாழ்கை பாதிக்கப்படுவதோடு அவர்களின் பெற்றோர்களுக்கும் அந்த குழந்தைகள் பாரமாக அமைந்துவிடுவதை பார்க்கிறோம்.

நீண்ட நாளாக நமது ஊரில் இருந்த இந்த குறையை போக்க நமது ஊரில் கல்வி தொடர்பான பல சேவைகளை செய்துவரும் T.S.R குடும்பத்தை சேர்ந்த ஒரு சகோதரியின் பெரும் முயற்சியால் ஒரு சிறப்பு பள்ளிக்கூடம் மஜீது காலனியில் துவங்கப்பட்டுள்ளது. அங்கு இதுபோன்ற குழந்தைகளின் குறைகளை அறிந்து அவர்களுக்கு தகுந்த ஆசிரியர்களின் துணை கொண்டு குறைவான கட்டனத்தில் முறையான பயிற்சி அளித்து வருகிறார்கள்.

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 150 வது ஆண்டு நிறைவு விழா
இன்ஷா அல்லாஹ் ...வரும் ஜூன் மாதம் 22,23-ஆம் தேதிகளில் சனி , ஞாயிற்றுக்  கிழமைகளில் சரித்திர பிரசித்திப்பெற்ற லால்பேட்டையில் நடை பெறவிருக்கிறது
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150-வது ஆண்டு விழாவை வரவேற்க லால்பேட்டை நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது..

லால்பேட்டையின் நுழைவு வாயிலாக கருதப்படும் காயிதேமில்லத் சாலையின் முகப்பிலிருந்து வண்ண விளக்குகளும்,அலங்கார பந்தல்களும் காண்போரின் கண்களை கவருகின்றன.
------------------

Wednesday, June 19, 2013

"முஸ்லீம்களுக்கு பண்பு இருக்காதுன்னு யாருடா உங்கிட்ட சொன்னது?"

 நேற்று இரவு நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் விருந்திற்காகச் சென்றிருந்தேன்.

 அங்கு எனது நீண்டநாள் நண்பர் ஒருவர் தனது 4 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தியுடன் நின்று பஃபேயில் உணவருந்திக்கொண்டு இருந்தார். பல நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவர் அருகில் சென்று நலம் விசாரிக்கத் துவங்கினேன்.

 அருகில் இருந்த பேத்தியிடம் "இவரு அப்துல்லா அங்கிள். தாத்தாவோட ஃபிரண்டு." என்று அவளிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவள் படிப்பு உள்ளிட்ட விசயங்களை அவளிடம் விசாரித்துவிட்டு அவரிடம் , "நீங்க மட்டும் வந்து இருக்கீங்க? அண்ணி வரலையாண்ணா?" என்று கேட்டேன்.
அருகில் இருந்த பேத்தி அவரிடம் இவர் அண்ணின்னு யாரைச் சொல்றார்? என்று கேட்டாள். அவர் 'உங்க பாட்டியைச் சொல்றார்டா குட்டி! இவர் எப்பவும் என்னைய அண்ணான்னும்,பாட்டியை அண்ணின்னும்தான் கூப்பிடுவார்!' என்று மகிழ்வோடும்,பெருமையோடும் சொன்னார்.

 பட்டென்று அந்த சிறுபெண் "பரவாயில்லையே!! முஸ்லீம்ஸ்கெல்லாம் கூட பண்பு இருக்கே!!" என்றாள். அவர் உடனடியாக தனது பேத்தியைத் திட்டத் துவங்கிவிட்டார்.

  நான் அவரைப் பொறுமைப்படுத்தி அவளிடம் "முஸ்லீம்களுக்கு பண்பு இருக்காதுன்னு யாருடா உங்கிட்ட சொன்னது?" என்று சிரித்தபடி கேட்டேன்.

  அவளுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. நண்பரின் அப்செட் மூடை மாற்றும் விதமாக நானும் அதோடு அந்தப் பேச்சை நிறுத்திவிட்டு வேறு பேச்சுகளுக்கு மாறிவிட்டேன்.

  4 வது படிக்கும் சிறுமி எனும்போது 9 அல்லது 10 வயதுதான் இருக்கும். இந்த வயதில் பண்பு என்ற வார்த்தையையும், அதன் அர்தத்தையும் பள்ளியோ,வீடோ போதித்து இருக்கும். ஆனால் இஸ்லாமியர்களுக்கு பண்பு இருக்காது என்ற நஞ்சை இந்த வயதில் அவளுக்கு போதித்தது யார்??

  பொதுவாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் எனக்கு துணிச்சல்காரன் என்ற பெயர் உண்டு. மிகவும் பயப்படுகிறேன் இந்த தேசம் போகும் திசை கண்டு.


                                                   புதுகை அப்துல்லா

Saturday, June 15, 2013

”யார்?”

 
அந்தரத் தோரணம் வானவில்

.. அழகை இறைத்தவன் யார்? - பிறைச்

சந்திரன் கூடவே தாரகை

.. சமைத்து மறைத்தவன் யார்?


வண்ணத்துப்  பூச்சிகளில் வரிகளை

.. வகையாய் நெய்தவன் யார்? - எழில்

எண்ணற்றப் பூவினங்கள் மணங்களை

.. எழுப்பச் செய்தவன் யார்?


பகலும் இரவும்  மாறிவர

.. பூமியைச் சுழற்றுபவன் யார்? - வாழ்வில்

சுகமும் துயரும் மாறிவரச்

.. சோதனை வழங்குபவன் யார்?


மாமறையை வழங்கி போதனைக்கு

.. மாநபியைத் தந்தவன் யார்? - அதனை

தேமதுர நடையில் ஓதுவோர்க்குத்

.. தேர்ச்சிகளைத் தந்தவன் யார்?


ஓடை களில்நீர் உருண்டெழுந்தால்

.. ஓசைகளை அமைத்தவன் யார்? - சிறு

காடைக் குருவிச் சிறகடிக்கக்

.. காற்றைச் சமைத்தவன் யார்?


சொற்களிட்  பொருளைப் புகுத்திச்

..  சுவையறிவுப் படைப்பவன் யார்? - பசும்

புற்களில் உறங்கும் பனியை

.. பகலவனால் துடைப்பவன் யார்?

Wednesday, June 12, 2013

பொறுமை கடலினும் பெரிது.


பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது ! இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம்.

பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.

Thursday, June 6, 2013

மன அழுத்தத்தைப் போக்க புதிய வழிகள் !


எவ்வளவுதான் வேலைச் சுமை , கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்பிக்கையும் இருந்தால் மன அழுத்தத்தில் இருந்து விரைவில் விடுபடலாம் என  விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுப்பிடுதுள்ளனர்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வழிகள் பற்றி கனடாவின் " டோ" நகரில் உள்ள " ஸ்கார்பேரோ பல்கலைக்கழக " விஞ்ஞானிகள் சமிபத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு,அவர்களை தவறு செய்தவர்கள்,தவறு செய்யாதவர்கள் என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆய்வை மேற்கொண்டனர். இரு தரப்பினது மூளையின் செயல்பாடுகளும் ஆராயப்பட்டன.

தவறு செய்யாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருந்தது.இதுவே தங்களை நல்லபடியாக வழி நடத்தும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் அதிகம் இருந்தது. அவர்களது வெற்றிக்கு இந்த நம்பிக்கையே காரணமாக இருக்கிறது.

Wednesday, June 5, 2013

மிஹ்ராஜ்


மிஹ்ராஜ்

*************

அகத்தில் ஆண்டவனை

வழுத்தி வாழ்ந்த வள்ளல் நபிகளுக்கு

அர்ஷின் நாயகன்

அழைப்பொன்றை அனுப்பி வைத்தான் !



பாவிகளிடமும் ஈனர்களிடமும்

அவதிப்பட்ட அண்ணலுக்கு

அன்பிறைவன் அனுப்பிவைத்த

அர்த்தமுள்ள அழைப்பதனை

அமரர்கோன் ஜிப்ரீல் கொண்டு வந்தார் !



ரஜப் மாதத்தின் இருபத்தேழாம் இரவில்

ஊருறங்கும் நேரத்தில்

சொர்க்கத்தின் வாகனம் புராக்

அண்ணல் வீட்டு வாசலில் வந்து நின்றது !

Sunday, June 2, 2013

ஒன்றாகப் படித்து ஒரே மேடையில் பட்டம் பெற்ற தாய் மகன்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உலகப்புகழ் பெற்ற கன்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சவுதியைச் சேர்ந்த தாயும் மகனும் ஒரே விழா மேடையில் பட்டம் பெற்ற சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதில், பாத்திமா அல் கப்லி (46) கணிதவியல் இளங்கலை பட்டமும் அவரது மகன் சலாம் (22) பெட்ரோலிய பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றனர்.

தனது கணவரைப் போல் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்று முனைவர் ஆவது தான் தனது வாழ்நாள் லட்சியம் என்று கூறினார். தாயாரின் கல்வி வேட்கையைப் பற்றி கருத்து கூறிய சலாம், "என்னை விட எனது தாயார் நல்ல அறிவு கூர்மையுடன் உள்ளார். எனது பாடங்களிலும் அவர் உதவியாக இருக்கிறார். அவருடன் சக மாணவனாக ஒரே பல்கலைக்கழகத்தில் பயின்றதும், பட்டம் பெற்றதும் மறக்க முடியாத அனுபவம்" என்றார்.

அரபு நாட்டு ஊடகங்களும், மேற்கத்திய நாட்டு ஊடகங்களும் வியக்க வைக்கும் இப் பட்டமளிப்பு சம்பவத்தைக் குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- ஹமீத் சுல்தான்

Source : http://www.satyamargam.com/

Saturday, June 1, 2013

“கலைமாமணி” கவிஞர் நாகூர் சலீம் காலமானார்.

தமிழக அரசின் “கலைமாமணி” விருது பெற்ற, பிரபல இஸ்லாமியப் பாடலாசிரியர் கவிஞர் நாகூர் சலீம் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, 01-06-2013 அன்று இறைவனடி சேர்ந்தார். இன்று மாலை 4.30  மணியளவில் அவரது உடல் நாகூரில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

வண்ணக் களஞ்சியப் புலவர்களின் பரம்பரையில் பிறந்த கவிஞர் நாகூர் சலீமுக்கு வயது 77. இவர் எழுதிய 7,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடல்கள், நாகூர் ஈ.எம்.ஹனீபா உட்பட அனைத்து இஸ்லாமியப் பாடகர்களும் பாடி பிரசித்திப் பெற்றவை.

LinkWithin

Related Posts with Thumbnails