Friday, February 26, 2010

மனவியலும் இலக்கியமும்- கடைசியாக

by Dr.Rudhran
மனவியலும் இலக்கியமும் பரிமாறிப் பயன்பெறும் துறைகள். இரண்டுமே கதைகேட்கும், கதை சொல்லும். இரண்டுமே மனதை உரித்துப்பார்க்கும். ஒன்றின் நோக்கம் பாதித்து யோசிக்க வைப்பது, இன்னொன்றின் நோக்கம் யோசித்து பாதிப்பிலிருந்து மீள்வது. இரண்டையும் நான் நெருக்கமாய் நேசிப்பதால்தான் அன்று பேசவும் இன்று எழுதவும் துணிகிறேன்.

மனவியல் ஓர் அறிவியல். அறிவு பூர்வமாக எதையாவது தெளிய விரும்பினால் அந்த விஷயத்தை முதலில் வரையறுக்க வேண்டும், பிறகு விவரிக்க வேண்டும், பின் விவாதிக்கவேண்டும், முடிவில் வளங்கியதை வடிகாட்ட வேண்டும், இறுதியில் வடிகட்டியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஓரிடத்தின் முடிவுகள் அதே பரிசோதனையின் போது வேறிடத்திலும் அதே முடிவுகள் தந்தால் அப்போது தான் அது அறிவியல்ரீதியாக ஏற்கக்கூடிய உண்மை.

மனவியல் மேதையாகவும், சிலரால் தந்தையாகவும் வர்ணிக்கப்படும் ஃப்ராய்ட் இலக்கியங்களிலிருந்தே தான் கோட்பாடுகளை உருவாக்கினார். அவரது பிரபலமான மனவியல் நூல்களின் பாதிப்பால் பல எழுத்தாளர்கள் இலக்கியங்களை உருவாக்கினார்கள். மிகவும் பிரபலமான ஈடிபஸ் நாடகமும் அதற்கு ஃப்ராய்ட் உருவாக்கிய மனவியல் விளக்கமும் பலருக்கும் அறிமுகம். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. அன்றிருந்த இலக்கியங்கள் பலவும் அவரது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கருத்துக்களாக கோட்பாடுகளாக உருவாயின.

ஒரு நாடகம் பார்க்கிறோம் (இதை இன்று திரைப்படமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்) உடனே அங்கிருக்கும் பாத்திரங்களுடன் ஒரு நெருக்கம், ஓர் அன்னியோனியம் தோன்றுகிறது. அப்படித் தோன்றினால்தான் அங்கே நிகழும் அந்தக் கதையில் மனம் ஒன்றுகிறது. பாத்திரங்களின் உணர்ச்சிகள் நம்முடையதாகின்றன. நாம் அழ முடியாதவற்றுக்கெல்லாம் அங்கே அந்தக் கதையின் மூலம் அழுகிறோம். நம்மை நாம் இந்தக் கதாபாத்திரங்களில்(identification )அடையாளம் காண்கிறோம், நாம் பல நிலைகளை அவர்கள் மீது (projection) பரப்பிப்பார்க்கிறோம், நாம் உள்ளே தேக்கி வைத்திருந்த உணர்ச்சிக்குப்பைகளை அந்தக் கதையில் கொட்டுகிறோம் (catharsis) , வெளி வரும்போது மனம் லேசாகிறது. இது கண்முன் பெரிதாய் விரியும் காட்சியாய் நாடகமாய் திரைப்படமாய் எப்படி அமைகிறதோ அதே போல்தான் படிக்கும்போது அமைகிறது.

களத்தோடும் பாத்திரங்களோடும் நமக்கு அடையாளப் படுத்திக்கொள்ள முடிந்தால்தான் இலக்கியம் ரசிக்கப்படும் என்பது ஒரு கருத்து. இங்கே இரண்டு கதைகளை மிகவும் மலினப்படுத்திச் சொல்கிறேன். 
1.சின்ன வயதில் ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அதற்காக அடித்து விரட்டப்படுகிறான். வேறூர் ஒன்றில் வளர்ந்து, சம்பாதித்து, வயதானபின் தான் பழைய காதலியைப் பார்க்கப் போகிறான். அவளைப்போலவே உருவ ஒற்றுமை உள்ள அவளது மகளைக் கண்டதும் அவள் மீதும் மையல் கொள்கிறான்.
2. அந்தப் பையன் படிக்க தான் தந்தையின் நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறான். அவர்களும் அவனை ஒரு மகனாகவே நடத்துகின்றனர். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு தந்தையின் நண்பரின் மனைவியை, தன்னிடம் ஒரு தாயாகப் பழகிய அவளிடம் பாலுணர்வுத்தூண்டுதலால் நெருக்கமாகிறான்.

மேலே சொன்ன இரு கதைகளும் இவ்வளவு கொச்சையானவை அல்ல. அவை அடர்த்தியாக உள் கிளப்பும் அதிர்வுகள் வேறு பல. ஆனால் இவற்றை ரசிப்பவன் இதில் எந்தப் பாத்திரத்தோடு தன்னை அடையாளம் காண்கிறான்? தன்னை, தன் சூழலை அடையாளம் கண்டு கொள்ள முடியாத இவை எப்படி இலக்கியமாகப் போற்றப்படுகின்றன? இவ்விடத்தில் தான் நினைக்கமுடியாததும், பேச முடியாததும், ஆனாலும் நிஜம் என்று தோன்றுவதும் இலக்கியமாக ரசிப்புத்தன்மையைத் தூண்டிவிடும். 



இதன் இன்னொரு நீட்சியாகத்தான் சமுதாய-பகுதிநேரப் பொறுப்புணர்வு! கதை சொல்லப்படுகிறது. அதைக் கேட்க ஆவல் ஏன் வருகிறது?  அதில் ஒரு மர்மம் இருப்பதால். இது கொலை, கொள்ளை துப்பறியும் வகைகளில் மட்டுமல்ல எல்லா கதைகளிலும் உள்ளது. மார்க்ஸீய நூலிலும் விவரிக்கப்பட்ட வேதனைகளுக்கு என்ன விடிவு என்றொரு மர்மக் கேள்வி தொக்கி நிற்பதால்தான் விடை கண்டு அதைப் பரிசீலிக்கவும் பயன்படுத்தவும் மனம் தொடர்ந்து படிக்கிறது.


மேலும் படிக்க.மனவியலும் இலக்கியமும்- கடைசியாக
மிக்க நன்றி : http://rudhrantamil.blogspot.com/2010/01/blog-post_06.html

ஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்!



கல்லீரல்
 பேசுகிறது
நீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர்கள்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு நாம் அளிக்கும் பதில் என்னவாக இருக்கும்?

கல்லீரலை நேசிக்க வேண்டுமா? எதற்காக? முழுமையாக அறியாத ஒன்றை எவ்வாறு நேசிக்க இயலும்? என்பது போன்ற பதிலே பெரும்பாலும் பெறப்படும்.



ஒரு நபர் ஒன்றை நேசிக்க வேண்டும் எனில் அதனால் ஏதாவது உபயோகம் அவருக்கு இருக்க வேண்டும் அல்லது அதனால் இவர் நேசிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றாலே மனப்பூர்வமான நேசம் அதன் மீது அவருக்கு வைக்க இயலும். அந்த வகையில் நோக்கினால் ஒரு மனிதனைப் பொறுத்தவரை அவன் அவனது கல்லீரலை வாழ்நாள் முழுவதும் மிகுந்த அக்கறையுடன் நேசிக்க வேண்டும்.
எதற்காகக் கல்லீரலை நேசிக்க வேண்டும்?. இதற்கான பதிலைக் கல்லீரலே நம்மிடம் பட்டியல் இட்டால்...? இதோ கல்லீரல் பேசுகிறது:

ஹலோ, நான் தான் உங்கள் கல்லீரல்.... நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதை ஒன்பது விதத்தில் விவரிக்கப்போகிறேன். கவனமாகக் கேளுங்கள். அதன் பின் நீங்களும் என்னை நேசிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்யுங்கள்.

1) நான் உங்களுக்குத் தேவையான இரும்பு சத்துக்களையும் இதர வைட்டமின்களையும் சேமித்து வைக்கிறேன்.

நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியை பெற மாட்டீர்கள்.

மனிதன் ஆரோக்கியமாக வாழத்தேவையான சக்திகள் இரும்பு சத்துக்களிலும் வைட்டமின்களிலும் நிறைந்துக் காணப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் தானே?. எனவே நானின்றி நீங்கள் தொடர்ந்து செயல்படக்கூடிய சக்தியைப் பெற மாட்டீர்கள்.

2) நீங்கள் உட்கொள்ளும் உணவை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை (Bile) நானே உற்பத்தி செய்கிறேன்.

இது இல்லையேல் நீங்கள் உட்கொள்ளும் உணவு ஜீரணிக்காமல் (அதிலிருந்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல்) வீணாகிவிடும். இப்பொழுது நான் இல்லையெனில் உங்கள் நிலைமையை யோசித்துப் பாருங்கள். உணவு சாப்பிட இயலாமல், வாழ்நாள் முழுவதும் குளுக்கோஸை உடலினுள் செலுத்திக் கொண்டு வாழ்வதை எந்த மனிதனாவது விரும்புவானா?

3) நீங்கள் உட்கொள்ளும் உணவிலுள்ள விஷத்தன்மை கொண்ட ஆல்கஹால் போன்ற இதர தீமையான இரசாயன திரவங்களின் அமிலங்களை நானே சுத்தப்படுத்துகின்றேன்.

இது போன்ற ஆபத்தான விஷ அமிலங்கள் சில நேரம் மது போன்ற போதைப் பொருட்கள் மூலமும் அல்லது சாதாரண மருந்துகள் அதிக அளவில் உபயோகிப்பதன் மூலமும் உடலில் தேங்குகின்றன.

நான் இவற்றை முறையாக அகற்றவில்லையெனில் இவற்றால் உங்கள் உயிருக்கே ஆபத்தாகி விடும்.

4) நான் உங்கள் உடல் இயங்கத் தேவையான சக்திகளை (சர்க்கரை - Sugar குளுகோஸ், கார்போஹைட்ரேட் - Carbohydrates, கொழுப்பு சத்து - Fat போன்றவைகளை..) ஒரு மின்கலன் (Battery) போல் உங்கள் தேவைக்கேற்ப சேமித்து வைக்கிறேன்.

நான் இவ்வாறு செய்யாவிடில் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து அளவில் குறைந்து அதனால் நினைவிழந்து கோமா (Coma) வரை கூட செல்ல நேரிடும் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்த வேண்டும்.

நான் என் பணியை முறையாகச் செய்திருக்காவிட்டால் ஒருவேளை இன்று நீங்கள் உங்கள் படுக்கையிலிருந்தே எழுந்திருக்க இயலாது.

5) நீங்கள் பிறக்கும் முன்பே உங்கள் முறையான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை நானே உருவாக்குகிறேன்.

நானில்லையேல் நீங்கள் இவ்வுலகில் உயிருடன் இருந்திருக்கவே மாட்டீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

6) உங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரோட்டீன்களை (Proteins-புரதச் சத்துகள்) நானே தயாரிக்கின்றேன்.

நானின்றி உங்கள் உடல் வளர்ச்சி பெற்றிருக்க முடியாது.

7) நான் நீங்கள் சுவாசிக்கும் காற்றிலிருந்து வெளியேற்றப்படும் புகைகள் போன்ற நச்சுப்பொருட்களையும் அகற்றுகின்றேன்.

நானில்லையேல், இது போன்ற கலப்பான தூய்மையற்ற காற்றின் விஷத் தன்மையினாலேயே உங்களுக்கு கேடு ஏற்பட்டிருக்கும்.

8) நான் இரத்த உறைவுக் காரணிகளை (Clotting Factors) உருவாக்குகின்றேன். இதன் மூலமே உங்களுக்கு ஏதும் காயம் ஏற்படும் போது அந்த இடத்தில் இரத்தம் உறைந்து ஒரு தடுப்பை அது ஏற்படுத்தி தொடர்ந்து இரத்தம் வெளியேறாமல் நின்று விடுகிறது.

உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டு தொடர்ந்து இரத்தம் நிற்காமல் ஓடினால் அதனால் நீங்கள் மரணித்து விடுவீர்கள் என்பதை நான் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை தானே?

9) நான் உங்களைத் தாக்கும் ஃப்ளூ என்ற ஜலதோஷம் ஏற்படுத்தும் நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்க அல்லது அதனை வலுவிழக்கச் செய்கிறேன்.

இவ்வாறு நான் செய்யாமல் இருந்தால் மனிதர்கள் அறிந்த மற்றும் அறியாத அனைத்து அற்பக் கிருமிகளின் தாக்குதலும் உங்களை நோயாளியாக்கி முடக்கி வைத்து இருக்கும்.

இதுவெல்லாம் நான் உங்கள் மீதுள்ள நேசத்தினால் செய்கின்றேன். ஆனால், நீங்கள் என்னை அதே போல் நேசிக்கின்றீர்களா?

நான் உங்களை நேசிக்காமல் இருந்து விட்டால் எத்தனை பாரிய ஆபத்திற்கு நீங்கள் உள்ளாவீர்களோ அதே அளவிற்கான ஆபத்தை நீங்கள் என்னை நேசிக்காமல் இருப்பதனாலும் அடைவதற்கான அனைத்துச் சாத்தியக் கூறுகளும் உள்ளன.

என்னை நீங்களும் நேசிக்க வேண்டும் என்றதும், வெறுமனே எப்பொழுதாவது என்னை மனதில் நினைத்துக் கொண்டு "நானும் என் கல்லீரலை நேசிக்கிறேன்" என்று கூறினால் என்னை நேசித்து விட்டதாக ஆக முடியாது. உங்களை நேசிக்கும் முகமாக எந்நேரமும் மேலே பட்டியலிட்டது போன்ற முக்கியமான சில வேலைகளை நான் செய்வது போன்று நீங்களும் சில காரியங்களைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தான் நீங்களும் என்னை நேசிக்கின்றீர்கள் என்று பொருள். இல்லையேல் அது உங்களுக்குத் தான் ஆபத்தாக முடியும்.

என்னை நீங்கள் நேசிக்கும் விதமாக நடக்க சில எளிமையான வழிகளை உங்களுக்கு நான் கற்றுத் தருகிறேன். கவனமாகக் கேளுங்கள் :

1) ஆபத்தில்லை எனக் கருதிக்கொண்டு பீர் (Beer) போன்ற ஆல்கஹால் கலந்த மது பானங்களில் என்னை மூழ்கடிக்காதீர்கள்.

சில நேரங்களில் ஒரே ஒரு முறை சிறிதளவு இவற்றை அருந்துவதும் கூட உங்களுக்கு அபாயமானதாக முடியும்.

2) எல்லா அலோபதி மருந்துகளும் வேதி (chemicals) அமிலங்கள் கலந்தனவையே. ஆகையால் மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். நீங்களாவே எந்த ஆலோசனையுமின்றிக் கலந்து உட்கொள்ளும் சில மருந்துகள் கலவையினால், ஏதேனும் தீய நச்சுத்தன்மை உருவாகி, அது என்னை பாதிக்கச் செய்து விடலாம்.

3) நான் மிகவும் எளிதாக காயம் ஏற்படுத்தப் படுகிறேன். இந்த காயத்தின் வடுக்கள் (Cirhossis) நிரந்தரமானவை.

மருந்துகள் சில நேரங்களில் தவிர்க்கமுடியாதவையே. ஆயினும் பல நேரங்களில் அது தேவையற்றவை என்பதை கவனத்தில் கொண்டு மருந்துக்களை உபயோகிக்க வேண்டும்.

4) ஏரோசால் (Aerosol) போன்ற நச்சுத்தன்மை கலந்த தூவி (Spray)களை உபயோகித்து நீங்கள் சுத்தப்படுத்தும் போது அதைச் சுவாசிக்கவும் செய்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு வீட்டை எப்பொழுதும் போதிய காற்றோடமுடையதாக வையுங்கள், அல்லது முகத்தில்  திரை (mask) அணிவது அவசியம்.

இதே போல் மூட்டைப் பூச்சிக் கொல்லி மருந்துகள், பெயின்ட் போன்ற ஏனைய இரசாயன ஸ்ப்ரேக்களையும் உபயோகிக்கும் போது அவற்றை சுவாசிக்காமல் இருக்க கவனம் செலுத்துங்கள்.

5) தாவரங்களுக்கு உபயோகிக்கப் படும் இதர பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிக்கும் போதும் கையுறை மற்றும் காலுறைகள் அணிந்திருப்பது அவசியம். ஏனெனில், இவை தோல்கள் மூலமும் உடலில் நுழைந்துப் பலச் செல்களை(உயிரணுக்களை)யும் தாக்கி அழித்து விடுகின்றன.

அதே போன்று இவை அனைத்தும் காற்றில் கலந்துவிடும் விஷம் கலந்த இரசாயனப்பொருட்கள் என்பதை நினைவில் நிறுத்தி இவற்றை உபயோகிக்கும் போது முகம், தலை போன்ற ஏனைய பாகங்களையும் மாஸ்க், தொப்பிகள் போன்றவை அணிந்து மறைத்திருப்பது நினைவில் வைக்கப் படவேண்டிய ஒன்றாகும்.

6) அதிக அளவில் அதிகமான கொழுப்புச் சத்து கலந்த உணவுகளை உட்கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான கொலெஸ்ட்ரோலைச் சரியான அளவில் நான் உருவாக்கிக் கொள்கிறேன். இதனைக் குறித்து விரிவாக சத்தியமார்க்கம்.காம் தளத்தினர் வெளியிட்டுள்ள
கொல்லுமோ கொலெஸ்ட்ரோல் என்றப் பதிவினைக் கவனமாகப் படித்துப் பாருங்கள்.

எனக்குச் சிறிது ஓய்வு கொடுங்கள். சரியான அளவில் சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுங்கள். நீங்கள் சரியான அளவில் உணவை உட்கொண்டீர்களானால் மட்டுமே நானும் சரியாக உங்களுக்குச் சேவை செய்ய இயலும்.

முதலாகவும் இறுதியாகவும் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை
:

சாதாரணமாக நான் எனது கஷ்டங்களை உங்களுக்கு எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. அவ்வாறு சொல்லவும் மாட்டேன். எனக்கு ஏதாவது பிரச்சனை எனில், என்னால் இயன்றவரை அதைத் தாங்கிக் கொள்வேன். இவ்வாறு இருப்பதால் நீங்கள் நான் ஆரோக்கியமாகத் தான் இருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். ஆனால் அது எனது மற்றும் உங்களது இறுதி நேரமாகவும் ஆகிவிடும் வாய்ப்புகள் உண்டு.

நினைவில் வைக்கவும் : நான் ஒருபோதும் குறைப்பட்டுக் கொள்வதில்லை. அதனாலேயே நான் திருப்தியாளனாக உள்ளேன் எனத் தவறாக எடை போடாதீர்கள். என்னை அதிகமாக இரசாயன திரவங்கள் மூலமும் அமிலங்கள் மூலமும் பாதிக்கச் செய்தால் நான் செயலாற்ற இயலாதவாறு பாதிப்புக்குள்ளாவேன். அதனை நான் உங்களுக்கு உடனே தெரிவிக்காமல் இருப்பதனால் அதன் மூலம் உங்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து விளையலாம். இதுவே நீங்கள் பெறும் எனது ஒரே எச்சரிக்கை அறிவிப்பாகவும் இருக்கலாம்.

எனவே இத்தகைய சூழலிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள எனது கீழ்கண்ட ஆலோசனையைச் செவிமடுங்கள் :

1. மருத்துவ ஆலோசகரிடம் என்னை முறையாக குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

2. விசேஷ இரத்தப் பரிசோதனைகள் (blood screen test) மூலம் எனது ஆரோக்கிய நிலையை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.

3. நான் எப்பொழுதும் மிருதுவாக மென்மையாக இருப்பின் அது நல்லது. கடினமாகவோ அல்லது வீக்கமாக இருப்பது ஏதோ கோளாறு அல்லது அபாயம் என்னில் நிகழ்ந்துள்ளது என்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

4. உங்கள் மருத்துவர் ஏதேனும் இது போன்று சந்தேகத்தைப் பரிசோதனையின் போது உணர்ந்தால் மீயொலி (Ultrasound) அல்லது கணினி உடற்கூறாய்வு (CT Scan) எனும் இதர பரிசோதனை மூலம் மேலதிக உதவி பெறலாம்.

5. உங்கள் உயிர் நீங்கள் என்னை நடத்தும் விதத்தில் தான் நிலைத்து இருக்கிறது.

அன்பர்களே.. இப்பொழுது உங்கள் மீதான நேசத்தில் நான் உங்களுக்குச் செய்யும் உதவிகளின் முக்கியத்துவத்தினைக் குறித்து உணர்ந்திருப்பீர்கள். தயவு செய்து நீங்களும் என்னை நல்ல முறையில் நேசத்துடனும் அக்கறையோடு பேணி நடத்துங்கள்.
உங்கள் வாழ்க்கை எனது ஆரோக்கியத்தில் தான் உள்ளது.

இப்படிக்கு,

உங்களை நேசிக்கும் உங்கள் கல்லீரல்

 ஹலோ.. நான் கல்லீரல் பேசுகிறேன்
நன்றி :  http://www.satyamargam.com/973

Thursday, February 25, 2010

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி -அறுசுவை - அறுசுவை

சுவையான ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
{mosimage}
தேவையான பொருள்கள்
பாஸ்மதி அரிசி - 1 கிலோ
மட்டன் - 11/2 கிலோ
நெய்  250 கிராம்
தயிர் - 400 மில்லி (2 டம்ளர்)
பூண்டு - 100 கிராம்
இஞ்சி - 75 கிராம்
பட்டை, கிராம்பு, ஏலம் - 3 வீதம்
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 50 கிராம்
எலுமிச்சை - 1
பொதினா, கொத்தமல்லிதழை - கையளவு
கேசரிப்பவுடர் - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு
சமையல் குறிப்பு விபரம்
செய்வது: எளிது
நபர்கள்: 4
கலோரி அளவு: NA 
தயாராகும் நேரம்: 15 (நிமிடம்)
சமைக்கும் நேரம்: 30 (நிமிடம்)

முன்னேற்பாடுகள்:
1. வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
2. இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்
3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

செய்முறை
1. குக்கரை அடுப்பில் வைத்து, சூடேறியது நெய்யை ஊற்றவும்
2. நெய் சூடேறியதும் ஏலம் பட்டை கிராம்பைப் போடவும்
3. பின்னர் அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
4. பின்னர் அதில் அரைத்த இஞ்சி, பூண்டு விழுதுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்
5. கழுவி சுத்தம் செய்து வைக்கப்பட்டுள்ள மட்டன் துண்டுகளை அதில் போட்டு சிறிது நேரம் கிளறவும்
6. தயிர், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கிளறிவிட்டு குக்கரில் வெயிட் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
7. பின்னர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து அதில் சிறிதளவு உப்பு போட்டு அரிசியை தனியாக வேறு பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளவும்
8. குக்கரில் உள்ள குருமாவில் எலுமிச்சைச் சாறு ஊற்றி புதினா மல்லித்தழை போட்டு கொதிக்க விடவும்
9. கொதிக்கும் குருமாவில் சமைத்து வைத்திருக்கும் சாதத்தைப் போட்டு கிளறி சமப்படுத்தவும்
10. கேசரி பவுடரை சிறிது பால் கலந்து பிரியாணி மீது ஒரு பக்கமாக ஊற்றி, மூடி வெயிட் போட்டு லேசான தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கிவிடவும்
11. நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி பிரியாணியை வேறுபாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டு பின்பு பரிமாறவும்.

பிரியாணி பார்ப்பதற்கு சிகப்பு, வெள்ளைக் கலரில் அழகாகவும் ருசி மிக்கதாகவும் சுவையானதாகவும் இருக்கும்.

ஆக்கம்: அபூ ஸாலிஹா
ஸ்பெஷல் மட்டன் பிரியாணி
நன்றி : http://www.satyamargam.com/379

உருளைகள்

தவசு மணி
ருத்திராட்சம்
ஜப மணி
ஜப மாலை
மிஸ்பாஹ்
தஸ்பீஹ்
ப்ரேயர் பீட்ஸ்
ரோசரி 
பெயர்கள் வெவ்வேறு
நோக்கம் ஒன்று 
உருளைகள்
கனத்தை இலகுவாக்கி
சுலபமாய்ஓட வைக்கிறதாம்
இது நியூட்டன் விதி 
இந்த உருளைகள்
மனிதனை
இறைவனின்பால்
விரைவாய்
உருட்ட வைக்கிறது 
முன்னது நியூட்டன் விதி
பின்னது ஆன்மீகத் துதி  
- அப்துல் கையூம்
 நன்றி : http://abdulqaiyum.wordpress.com    உருளைகள்

Wednesday, February 24, 2010

ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்!

முனைவர் முஹம்மத் அலி IPS பக்கம் 

வாங்க, ஐ ஏ எஸ்/ஐ ப்பீ எஸ் படிக்கலாம்ந்திய நாட்டின் உயர்பதவிகள் என்பது முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டு முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதைப் புள்ளி விபரம் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.

மொத்தம் உள்ள 325 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 10 பேர்கள்தாம் உள்ளனர். அதேபோல் 236 ஐ.பி.எஸ் பதவிகளில் வெறும் ஏழு பேர்கள்தாம் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட முஸ்லிம் கல்லூரிகள்(கலை மற்றும் பொறியியல்) தமிழ் நாட்டில் இருந்தாலும் முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் ஏன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் பிரதிநித்துவம் பெற முடியவில்லை?
நாட்டின் உயர் பதவியினை முஸ்லிம்கள் நினைத்தால் எட்டமுடியாதா? முஸ்லிம் இளைஞர்களிடம் திறமையில்லையா? இருக்கிறது; அனைத்தும் இருக்கிறது! ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாததால் திக்குத் தெரியாக் காட்டில் விடப்பட்டவர்கள்போல, திறமையிருந்தும் குறைந்த சம்பளத்தில் இந்தியாவிலோ அல்லது வளைகுடா நாடுகளிலோ முஸ்லிம் பட்டதாரிகள் வேலைக்குச் சென்று விடுகின்றனர். முஸ்லிம் பெரியோர்கள், செல்வந்தர்கள் முஸ்லிம் இளைஞர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று கல்லூரிகள் ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் வேலை வாய்ப்பிற்கு என்ன வழிகள் என ஆராயத் தவறி விடுகின்றனர். வேலை தேடிக்கொள்வது அவரவர் கடமை என எண்ணுகின்றனர். ஆகவேதான் நாட்டில் பட்டம் பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் 15 சதவீதம் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள் என எஸ்.எஸ்.ஓ ஆய்வு சொல்கிறது.
சச்சார் கமிட்டிப் பரிந்துரை:
"வேலை வாய்ப்பில் ஓ.பி.சி என்ற மற்ற பிற்பட்ட சமூகத்தில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; ஏனென்றால் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் தலித்களை விடப் பின்தங்கி உள்ளார்கள்"
நீதிபதி சச்சார் கமிட்டிப் பரிந்துரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் சொல்கிறார். அந்த சச்சார் கமிட்டிப் பரிந்துரை, "வேலை வாய்ப்பில் ஓ.பி.சி என்ற மற்ற பிற்பட்ட சமூகத்தில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்; ஏனென்றால் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் தலித்களை விடப் பின்தங்கி உள்ளார்கள்" என்று கூறியுள்ளது. தலித் பட்டதாரி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் இன்று ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் அதிக இடங்கள் பிடித்து சமுதாயத்தில் தங்கெளுக்கென்று மதிப்பான இடத்தினைப் பிடித்துள்ளார்கள். சமீபத்தில் வெளியான நீதிபதி ரங்கனாத் மிஸ்ரா அறிக்கைகூட, "முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் வேலை வாய்ப்பினைக் கொடுக்க" சிபாரிசு செய்துள்ளது. இப்பரிந்துரைகள் செயல்படுத்தப்படுமானால், நாட்டின் உயர்பதவிகளில் முஸ்லிம்களும் பங்காற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
ஆகவே படித்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களை நாட்டின் உயர்பதவிக்குத் தயார் படுத்திக் கொள்ள முன்வரவேண்டும். எப்போதுமே நமது குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டும். சென்ற ஜனவரி 26ஆம் தேதி வெளியான உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி ஐ.பி.எஸ்ஸில் அதிக இடங்கள் காலியாக இருப்பதால், வருடத்திற்கு 70 பதவிகள் வீதம் அடுத்த 10 வருடத்திற்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தெடுக்கப்பட இருப்பதாக அறிவித்திருப்பதை முஸ்லிம்கள் தங்களுக்கான நல்லதொரு வாய்ப்பாகக் கருதி தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
என் வயதொத்தவர்கள் கல்லூரியில் படித்த காலத்தில், அரசு சார்பில் ஐ.ஏ.எஸ் கோச்சிங் மையங்கள் இருந்திருக்கவில்லை. சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத வயது வரம்பும் 24 ஆக இருந்தது. நான் சென்னைப் புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தபோது ராயப்பேட்டை ஸ்வாக்கத் ஹோட்டல் அருகில் இருந்த ஐயர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சென்று விசாரித்தபோது, "எம்.ஏ படித்து விட்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். அவர்கள் கூறியபடி எம்.ஏ படித்து விட்டுச் சென்ற போது வயது உச்சவரம்பைத் தாண்டி விட்டது. ஆகவே தமிழ்நாடு அரசு நடத்திய தேர்வில் டி.எஸ்.பியாகி, அதிலிருந்து கொண்டேதான் ஐ.பி.எஸ்ஸை அடைய முடிந்தது. ஆனால் இன்று, சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு வரும் ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயதைக் கடந்து 30 வயதிற்கு மேல் தாண்டாது இருந்தால் போதும். அத்தோடு ஐ.எஸ்.எஸ் தேர்வு எழுத ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.
சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கான பாடங்கள் முதுகலைப் பட்டப் படிப்பளவிற்கு இருக்கும். அதற்காக பயப்பட வேண்டியதில்லை. தொடர் பயிற்சிகள் மூலம் தேர்வுக்கு எளிதாக தயார் படுத்திக் கொள்ள முடியும். சிவில் சர்வீஸஸ் தேர்வுகள் எழுதுவதற்காகப் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் பல உள்ளன.
அரசே இதற்கான பயிற்சியினை அண்ணாநகரிலும் மனிதநேய மையம் சைதாப்பேட்டையிலும் தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பில் சென்னை வெப்பேரியிலும் சென்னை வண்டலூரிலுள்ள பி.எஸ்.ஏ பொறியியல் கல்லூரியிலும் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும் நடத்துகிறது. முஸ்லிம்கள் சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்கு ஏற்ற சிறந்த பயிற்சி மையங்களை இஸ்லாமிய அமைப்புகள் அதிகமாக அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால் இறுதி நிலைத் தேர்வுகளுக்கு டெல்லி சென்றுதான் பயிற்சி எடுக்க வேண்டுமென்ற நிலை இருக்காது.
ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுகள் மூன்று நிலைகளாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படுகின்றன. அவை:
1) முதல்நிலைத் தேர்வு:
இத்தேர்வுக்கான அழைப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் அனைத்து முன்னிலை ஆங்கில-தமிழ் பத்திரிகைகளில் வெளியாகும். இரண்டு தாள்களில்(பாடங்கள்) தேர்வு இருக்கும்.
முதல் தாள் பொதுப் பாடங்கள் சம்பந்தப் பட்டது. அதற்கான மதிப்பெண் 150 ஆகும்.
இரண்டாவது தாளுக்குரிய பாடம் விருப்பப் பாடங்கள் பட்டியலிருந்து தேர்வு செய்து கொள்ள வேண்டும். அதற்கு 300 மதிப்பெண்கள் தரப்படும். பெரும்பாலும் விருப்பப் பாடங்கள் எடுக்கும்போது, அது பிரதான தேர்வுக்கு உதவும் வகையில் எடுக்க வேண்டும். விருப்பப் பாடப் பட்டியல்கள் கீழ் வருமாறு:
  • விவசாயம்
  • அனிமல் ஹஸ்பன்ட்ரி மற்றும் வெட்னெரரி சயின்ஸ்
  • தாவரவியல்
  • வேதியல்
  • சிவில் இன்ஜினீரியங்
  • வணிகம்
  • பொருளாதாரம்
  • எலக்ட்ரிகல் இன்ஜினீரியங்
  • புவியியல்
  • ஜியாலஜி
  • இந்திய வரலாறு
  • சட்டம்
  • கணிதம்
  • மெக்கானிகல் இன்ஜினீரியங்
  • மருத்துவம்
  • தத்துவம்
  • பௌதீகம்
  • பொது நிர்வாகம்
  • சமூகவியல்
  • புள்ளிவிரபங்கள்
  • விலங்கியல்
மேற்கூறியவைகளில் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் இவற்றில் ஏதாவது ஒன்றினைத் தேர்வு செய்தால், அது இரண்டாவது நிலையான பிரதான தேர்வுக்கு உதவும்.
2) இரண்டாம் நிலை - பிரதான - தேர்வு:
ஆரம்ப கட்ட முதல் நிலைத் தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்கள் பிரதான தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள். அந்தத் தேர்வுகள் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் நடைபெறும். இத்தேர்வு ஒன்பது தாள்கள்(பாடங்கள்) இருபது நாட்களுக்குள் நடைபெறும். பிரதான தேர்வுக்குரிய தாள்கள் குறித்த விவரம் பின் வருமாறு:
முதல்தாள்(கட்டாயம்): அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளிலிருந்து ஒரு மொழியைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவற்றுள் தமிழ் மொழியும் உண்டு. இத்தாளுக்குரிய மொத்த மதிப்பெண்கள் 300.
இரண்டாவது தாள்(கட்டாயம்): ஆங்கிலம். அதன் மதிப்பெண் 300.
மூன்றாவது தாள்: கட்டுரை. அதன் மதிப்பெண் 200.
நான்காவது தாள் மற்றும் ஐந்தாவது தாள்: பொதுப்பாடங்கள். அவற்றுக்கான மதிப்பெண்கள் ஒவ்வொன்றிற்கும் 300.
ஆறாவது, ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது தாள்கள்: விருப்பப்பாடங்கள் இரண்டில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு தாள்கள் இருக்கும். அவற்றுக்குத் தலா 300 மதிப்பெண்கள்.
இவ்வாறு சுமார் 20 நாள்களுக்குள் நடத்தப்படும் இந்த ஒன்பது பாடங்களுக்குரிய தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர், மூன்றாம் நிலையான நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்.
இப்பிரதான தேர்வின் நோக்கமே, மாணவர்களின் கல்வித் தகுதியை அறிவதற்காக நடத்தப் படுவதாகும். மட்டுமல்ல, அவர் தேர்வில் தான் படித்த பாடங்களை எவ்வாறு கோர்வையாக எழுதுகிறார் என்பதும் இத்தேர்வில் ஆய்வு செய்யப்படும். கட்டாயப் பாடங்களான முதல் இரண்டு தாள்களில் 35 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கட்டாயப் பாடங்களில் கட்டுரை, மொழி பெயர்ப்பு, சுருக்கி எழுதல், வாக்கியம் அமைத்தல், மொழி மரபுச் சொற்றொடர்கள், பழமொழிகள், பொருள் அர்த்தங்கள் ஆகியவை அடங்கியிருக்கும். இவ்விருமொழித் தேர்வுகளுக்கு ஆயத்தமாவதில், ஒவ்வொன்றையும் எழுதிப் பழகிப் படிப்பது அவசியம்.
மூன்றாவது தாளான கட்டுரைத் தேர்வில் சரியான தலைப்பினை எடுத்து உண்மையான-தெளிவான கருத்துகளுடன் முழு நீளக் கட்டுரை எழுத வேண்டும். தேர்வின் ஆரம்பத்தில் முதல் 5 நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இரண்டு தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அதில் மிக நன்றாகத் தெரிந்த ஒரு தலைப்பினை நிலை நிறுத்தி எழுதத் துவங்க வேண்டும். ஆரம்பம்-கரு-முடிவுரை என்று பிரித்துக் கொள்வது நல்லது. எழுதிய கட்டுரையினைத் திரும்பப் படிக்க, தேர்வின் இறுதியில் சிறிது நேரத்தினை வைத்துக் கொள்ள வேண்டும்.
நான்காவது மற்றும் ஐந்தாவது பாடங்களான பொதுப்பாடங்களில், பாடம் ஒன்றில் இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு, சமகால நிகழ்வுகள், சமூகச் செய்திகள் சம்பந்தப்பட்டதும் இரண்டாவது பாடம் இந்தியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், இந்தியப் பொருளாதாரம், சர்வதேச சம்பந்தமான செயல்கள், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி, தொலைத் தொடர்பு, புள்ளி விபர ஆய்வு ஆகியவை அடங்கியிருக்கும்.
இப்பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி நிலையான நேர்முகத் தேர்விற்கு டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள்.
3) நேர்முகத் தேர்வு.
நேர்முகத் தேர்வுக்கு ஆயத்தமாகும் முன்பு அது சம்பந்தமான புத்தகங்கள், பீரியாடிகல்ஸ் ஆகியவைகளைத் தேடிச் சேகரிக்க  வேண்டும். அல்லது அவை கிடைக்கும் நூலகங்கள், பழைய புத்தகக் கடைகள் ஆகியவற்றை அணுகி, புத்தகங்களைச் சேகரித்து குறிப்புகள் எடுக்க வேண்டும். பொது அறிவிற்கான புத்தகங்களான காம்படிசன் மாஸ்டர், காம்படிசன் ரிவ்யூ, காம்படிசன் சக்சஸ், கேரியர் டைஜஸ்ட் போன்ற வாராந்திர, மாத ஆங்கில இதழ்களை வாங்கிப் படிக்க வேண்டும். ஆங்கில தினப் பத்திரிக்கையான ஹிந்து படித்தால் பொது அறிவிற்கான தகவல்கள், கட்டுரைக்கான தகவல்கள் அநேகம் கிடைக்கும். ஆங்கிலச் செய்திகளை வானொலி மற்றும் தொலைகாட்சிகளில் கேட்க வேண்டும். மலையாள மனோரமா ஆண்டுப் புத்தகம் அரிய பொதுத் தகவல்களை வழங்குகிறது. சென்னையில் கன்னிமாரா, அண்ணாசாலையிலுள்ள பாவாணர் நூலகம், மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் ஆகியவற்றை நேர்முகத் தேர்விற்கான ஆயத்தப்படுத்தலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை:
நேர்முகத் தேர்விற்குச் செல்லும்போது தூய ஆடைகளை அணிய வேண்டும். ஒரு முறை வி.ஜி.பன்னீர்தாஸ், தான் சாதாரண கூலித் தொழிலாளியாக சென்னை வந்து இன்று பெரிய கோடீஸ்வரராகி பிரபலமானதற்குக் காரணம், அவர் எப்போதும் பிறரைக் கவரக்கூடிய ஆடை, அதாவது கோட்-சூட் அணிவதை விடுவதில்லை எனக் கூறியிருந்தார். ஆகவேதான் பழங்காலத்தில் "ஆடைபாதி; ஆள்பாதி" என்பார்கள்.
தேர்வுக்குழுவினர் கேட்கும் கேள்விக்கு நேரான, தெரிந்த பதிலைத் தயங்காமல் அவர்களை நேரடியாகப் பார்த்துச் சொல்ல வேண்டும். தெரியவில்லை என்றால் அக்கேள்விக்கு விடை தெரியவில்லை என்பதையும் தயங்காமல் சொல்வது, தெரியாத கேள்விகளுக்கான மதிப்பெண் இழப்பைத் தவிர்க்க உதவும். நேர்முகத் தேர்வில் சரளமாகவும் தயக்கமின்றி, சொல்ல வரும் கருத்தை நேரடியாகச் சொல்வதுமே பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, தனக்குத் தெரியாததைத் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.
பதட்டப்படாமல், "நாம் படித்தவர்கள் - நாட்டின் மிக உயர்ந்த சேவைப் பணிகளுள் ஒன்றுக்குத் தேர்வு செய்யப்பட போகிறோம்" என்று மனதில் உறுதியான எண்ணம் கொள்ள வேண்டும். எந்தச் சமயத்திலும் பணத்திலோ, படிப்பிலோ, சமூக அந்தஸ்திலோ தாழ்வு மனப்பான்மை நம்மை ஆட்கொண்டு விடக்கூடாது. "தைரியம் புருஷ லட்சணம்" என்பார்கள். ஆகவே எந்த நேரத்திலும் தைரியத்தினைக் கைவிடக்கூடாது.
உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும், அமெரிக்கா, இந்தியாவில் அவுட் சோர்ஸிங்கிற்குக் கட்டுப்பாடு விதித்து இந்திய இன்ஜினீரியங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இழக்கும் பயம் இருப்பதாலும், பொறியியல் போன்ற உயர் தொழில்நுட்பப் பட்டங்களுக்குப் பயிலும் முஸ்லிம்கள் மிக குறைந்த சம்பளத்தில் இந்திய நிறுவனங்களில் அல்லது வளைகுடா நாடுகளில் வேலை தேடி அலைவதை விட, சம்பளம் அதிகமுள்ள, சமூகத்தில் மரியாதையுள்ள, வேலை உத்திரவாதமுள்ள, சலுகைகள், ஓய்வூதியம் ஆகிய உத்திரவாதத்துடன் கூடிய, எல்லாவற்றையும் விட மேலாக மக்களுக்கு மிகச் சிறந்த சேவையாற்றுவதற்கு வாய்ப்பான ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் போன்ற சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுதி அந்தப் பதவிகளை அடையும் குறிக்கோளை இனிமேலாவது வளர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.
முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மூன்றரை சதவீதம் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு அளித்துள்ளது. மத்தியில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தேர்வில் தேர்வு பெற முடியாதவர்கள், மனந்தளராது அதற்கு இணையாகத் தமிழகத்தில் டெப்டி கலெக்டர்-டி.எஸ்.பி ஆகியவற்றிற்கு தமிழ்நாடு தேர்வாணையும் நடத்தும் நேரடி தேர்விற்கான குரூப் ஒன்று பரீட்சை எழுதி வெற்றி பெற முயற்சிக்கலாம்.
மனிதன் ஒரு லட்சியத்தினை அடைய வேண்டுமென்றால், முதலில் அது தன்னால் சாத்தியமாகக் கூடியதே என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். எப்படி பிறந்த குழந்தைக்கு அது வளர சத்துணவு கொடுக்கிறோமோ அதேபோன்று அந்த இலட்சியத்தை அடைய, கடின உழைப்பை மூலதனமாக வழங்க வேண்டும். ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்தால் மனந்தளரக் கூடாது; நான் மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத் தேர்வில்  மூன்றாவது முறையாகத்தான் தேர்வு பெற்றேன். மூன்றாவது படிக்கட்டில் ஏறிய குழந்தை அப்படிக்கட்டில் தோல்வியடைந்தாலும், இரண்டாவது படிக்கட்டில் விழுவதில்லை என்பது முக்கியமானது. மூன்றாவது படிக்கட்டில் விழுந்து விட்டதால், நான்காவது படிக்கட்டில் ஏற முடியாது என்று மனதைத் தளர விடாமல், மீண்டும் மூன்றாவது படிக்கட்டிலிருந்து நான்காவது படிக்கட்டுக்குப் போக குழந்தை கடுமையாக முயற்சி எடுக்கும். அதேபோன்றுதான் தேர்வில் ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் சிறு குழந்தையின் படிகட்டு உதாரணத்தையும் மிகக் கடுமையாக முயன்று கூடு கட்டும் எறும்பு, சிலந்தி போன்றவற்றையும் மனதில் நிறுத்தி, தொடர்ந்து தான் கொண்ட குறிக்கோளை அடைய முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
ஆகவே, சொந்தங்களே வாருங்கள்! உயர் இலட்சியம் வைப்போம்! விடா முயற்சியுடன் இலட்சியம் வென்று சமுதாயத்தில் வீறு நடை போடுவோம்!
ஆக்கம் : முனைவர் ஏ.பீ. முகம்மது அலீ, பி.எச்.டி. ஐ.ப்பீ.எஸ் (ஓய்வு)
ஐ.ஏ.எஸ், ஐ.ப்பீ.எஸ் தேர்வுக்குத் தயாராவோம்!
 நன்றி http://www.satyamargam.com/1403

தேவையா இந்ததேர்வு

அன்புடன் மலிக்கா 

மனிதா எதை சாதிக்கமுடியவில்லை என நீ சாகத்துணிந்தாய்?
சரித்திரத்தில் இடம்பிடித்தால்தான் வாழவேண்டுமா?
உன்னை முன்னூறு நாள் உன்அன்னை மடிசுமந்தது
நீ மூர்க்கத்தனமாய் மாண்டுபோவதற்க்காகவா?

உயிரை உனக்குள் ஊட்டிவிட்டவனுக்கு மட்டுமே
அதைதிரும்ப
உனக்குள்ளிருந்து வெளியேற்றவும் உரிமைஇருக்கு

உருப்படாத உன்புத்தியால் உன்உயிரை
நீயே உருவி எடுக்க உனக்கே உரிமையில்லை

தற்கொலைதான் முடிவு என்றால்
தரணியில் மனிதவாழ்வு ஏது?

ஆகாசத்தில் பறக்கமுடியவில்லை

அந்தரத்தில் ஊஞ்சல் கட்டமுடியவில்லை

தேர்வில் தேரமுடியவில்லை

போட்டியில் வெல்லமுடியவில்லை

காதல் கைகூடவில்லை

கட்டியவனு[ளு]க்கு பிடிக்கவில்லை

காலநேரம் சரியில்லை

கடன் தொல்லை தாங்கவில்லை

”என”

இப்படி ஏதாவது ஒருஅற்ப்ப காரணங்களுக்காக
இறைவன் கொடுத்துள்ள அற்ப்புதமான
உயிரை அழித்துவிடாதே

சிலநேர தனிமை நம்மை சாதிக்கவைக்கும்
சிலநேர தனிமை நம்மைசோகத்தில் ஆழ்த்தும்
சாதிக்கும் தனிமையை தேர்ந்தெடு

உன்னைவிட்டுபோன ஒன்றுக்காக வருந்தாமல்-
இனி எதுவுமே
உன்னைதேடி வரும்படியான தைரியத்தை உருவாக்கு

பூமியில் வாழவந்ததே சோதனையில் வெற்றியடையத்தான்
துவண்டுவிடாதே தோழமையே துன்பமா? தூக்கி எறி
கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப்பார்

நெருஞ்சி முள்ளாய் குத்துகிறதா?
தென்றலாய் வருடுகிறதா?
இரண்டையும் மனதில் கொண்டு
இனிஎதற்கும் கலங்கமாட்டேன் --என்றுஏகமனதாய் முடிவெடு
இறைவனின் அருள்கொண்டு எல்லாமே வெற்றியடையும்.

அன்புடன்மலிக்கா

இறைவனை நேசி இன்பம் பெருவாய்
நன்றி :http://niroodai.blogspot.com

Tuesday, February 23, 2010

தேடல்களில்….....

தேடல் என்பது வாழ்வின் வேர்.!
தேடல் என்பது மனதின் மகரந்தம் !
தேடல் என்பது நாளைக்கான இன்றின் கனவு!

தேடல் இன்றி யாரும் இல்லை.
தேடலின் தாகமே வாழ்வை நகர்த்தும்!

எதைத் தேடுகிறீர்களோ அதை அடைகிறீர்கள்!
ஒன்றைத் தேட, மற்றொன்று தொலையும்! - இது
மாறும் உலகினில் மாறாத நியதி! – உயிர் வாழ்க்கையின்
ஆற்றல் அழிவின்மை விதி!

ஆகாத கனியாம் உலகைத் தேடி
ஆதியில் மனிதன்
சுவனம் தொலைத்தான்.
தொலைத்த மறுமை
திரும்பப் பெற்றிட
உலகை த்தொலைத்து
உயர்ந்திட வேண்டும்.

எதை நாடுகிறீர்களோ,
அதைத் தேடுங்கள்.
எதைத் தேடினீர்கள்
என்பதை வைத்துத்தான்
யார் நீங்கள் என்று சொல்ல முடியும்.

பொருளும் புகழும் புண்ணியமும் - இறை
அருளும் அறிவும் ஆன்ம ஞானமும்
தேடுபவர்களுக்கே தென்படுகின்றன.

தன்னை த்தானே கண்டறிவதே
தேடல்களில் எல்லாம் தலையானது.
உங்களை நீங்களே
விளங்கிக்கொள்ளவும்
உங்களை பிறருக்கு ணர்த்துவதற்கும்
உங்களை த்தேடி வையுங்கள்.

தேடல்களும்
தேவைகளும் அற்ற இறைவனை
தேட முற்படும் பொழுதில்
தொலைப்பதற்கு நீங்கள் வேண்டும்.
உங்களின் ‘தான்’ வேண்டும்.
அதற்காகவாவது......
உங்களைத் தேடி வையுங்கள்.
-----------------------------------------

Sunday, February 21, 2010

குடும்பத்தை பிளவுபடுத்தும் பாவிகள்

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ ٌ
    '.....அவர்களிடமிருந்து கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை கற்றுக் கொண்டார்கள்'. (அல்குர்ஆன் 2:102)
    குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம்.
    ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை.
    ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும் கூட உண்மை போல சித்திரித்து அதனைப் பரப்புவதில் இன்பம் காண்கிறோம்.
    இதனால் நமக்கு கிடைக்கும் லாபம் என்ன? நன்மை என்ன? ஒன்றுமே இல்லை. ஆனாலும் இச்செயலில் ஈடுபடுவதில் அளவிலாத ஆனந்தம் அடைகிறோம்.
    நமது குடும்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளால் நமது நிம்மதி குறைந்தால் நமது நிலை என்ன? அதே நிலையைத் தானே மற்றவர்களும் அடைவார்கள் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.
    இந்த விஷயத்தில் ஆண்களைவிட பெண்கள் பலபடிகள் மேலே உள்ளனர். ஒரு பெண்ணின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலும் வதந்திகளைப் பரப்புவதிலும் இவர்களுக்குக் கிடைக்கும் ஆனந்தமே அலாதியானது.
    மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் மறுமை வாழ்க்கையைப் பூரணமாக நம்பக்கூடியவர்கள் இந்தச் செயலின் பயங்கர விளைவுகளைப் பற்றி அறிந்து கொண்டால் குடும்பங்களைப் பிரிக்கின்ற கொடுஞ்செயலில் இறங்க மாட்டார்கள்.
    இத்தகைய மக்களுக்கு இந்த வசனத்தில் போதுமான எச்சரிக்கை இருக்கிறது. குடும்பங்களுக்கிடையே பிளவு ஏற்படுவது ஷைத்தானின் செயல்பாடுகள் என்று இவ்வசனம் கூறுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் கிடையாது என்று இவ்வசனம் கடுமையாக எச்சரிக்கிறது. மனிதர்கள் செய்யும் காரியங்களில் மகா கெட்ட காரியம் இது எனவும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது.
    எந்தச் செயலில் ஷைத்தான் அதிகமாக திருப்தியடைகிறானோ அந்தச் செயல் அல்லாஹ்வின் கடும் கோபத்திற்குரியதாகும் என்பதை நாம் அறிவோம். ஷைத்தான்கள் மிகமிக மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இந்தச் செயலுக்கே உள்ளது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
    (ஷைத்தான்களின் தலைவனாகிய) இப்லீஸ் தனது சிம்மாசனத்தை தண்ணீரில் அமைத்துக் கொள்கிறான். அங்கிருந்து கொண்டு (மக்களை வழி கெடுப்பதற்காக) தனது படையினரை அனுப்புகிறான். பெரிய அளவில் குழப்பம் ஏற்படுத்துபவரே அவனுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள். ஒரு ஷைத்தான் வந்து நான் இன்னின்ன காரியங்களைச் செய்தேன் என்று இப்லீசிடம் கூறுவான். அதற்கு இப்லீஸ் 'நீ ஒன்றுமே செய்யவில்லை' எனக் கூறுவான். மற்றொரு ஷைத்தான் வந்து 'நான் கணவன் மனைவிக்கிடையே பிரிவை ஏற்படுத்தி விட்டேன்' என்பான். அதைக் கேட்ட இப்லீஸ் அவனைத் தன்னருகில் நிறுத்திக் கொள்வான். நீயே சிறந்தவன் எனவும் கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி)
    இப்லீஸ் மிகவும் மகிழ்ச்சியடையும் காரியம் செய்பவர்கள் கணவன் மனைவியரிடையே பிரிவை ஏற்படுத்துவோர் தான் என்பதைவிட கடுமையான எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்? இத்தகைய காரியத்தில் ஈடுபடுவோர் தாங்கள் ஷைத்தானுக்குத் துணை செய்கின்றனர் என்பதை உணர வேண்டும்.
    மற்றொரு நபிமொழியைப் பாருங்கள்! 'அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் கெட்டவர்கள் கோள் சொல்லித் திரிபவர்களும் நேசமாக இருப்பவர்களிடையே பிரிவை ஏற்படுத்துபவர்களும் தான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் கனம் (ரலி), நூல்: அஹ்மத்
    அன்னியோன்யமாக இருப்பவர்களைப் பிரிப்பது தான் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பூட்டும் என்பதை இதிலிருந்து உணரலாம். மேலும் கோள் சொல்லித் திரிபவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (புகாரி)
    அன்னியோன்யமாக இருப்பவர்கள் என்பது பலதரப்பினரைக் குறிக்கும் என்றாலும் கணவன் மனைவியர் தான் இதில் முதலிடம் வகிப்பவர்கள். அவர்களுக்கிடையே உள்ள நெருக்கம் வேறு எவருக்கிடையேயும் இருக்க முடியாது.
    மேலும் இல்லாத குற்றங்களைக் கற்பனை செய்து வதந்திகளைப் பரப்பி குடும்பங்களைப் பிரிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.
    கற்பனை செய்வதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். கற்பனை செய்வது தான் மிகப் பெரிய பொய்யாகும். மேலும் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆராயாதீர்கள் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத்)
    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களாகிய எங்களிடம் உறுதிமொழி எடுத்தனர். நாங்கள் இட்டுக் கட்டி அவதூறுகளைப் பரப்புவது கூடாது என்பதும் அந்த உறுதி மொழியில் அடங்கும். (அறிவிப்பவர்: உமைமா பின்த் ரகீகா, நூல்: அஹ்மத்)
    குடும்பங்களில் பிரிவை ஏற்படுத்துவதில் முக்கியப்பங்கு அவதூறுக்கு உண்டு. கற்பொழுக்கமுள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறுவது எந்த அளவுக்கு குற்றமாகக் கருதப்படுகிறது என்றால் அவ்வாறு அவதூறு கூறுவோர் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு 80 கசையடிகள் அளிக்கப்பட வேண்டும் என்று திருக்குர்ஆன் (24:04) கூறுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
    ஒரு பெண் மீது களங்கம சுமத்துவோர் இதற்கு நான்கு நேரடி சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் எனவும் அந்த வசனம் (24:04) கூறுகிறது. ஒரு பெண்ணின் தவறான நடத்தையை ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் நேரடியாகக் கண்டால் கூட அதை அவர்கள் பகிரங்கப்படுத்தினால் அவர்கள் அவதூறு கூறியவர்களாகவே கருதப்படுவார்கள்.
    அவதூறின் காரணமாக ஒரு பெண்ணின் வாழ்க்கை பாதிக்கும். குடும்பம் பிளவுபடும். அதை அறவே தவிர்ப்பதற்காகத் தான் இதற்கு மட்டும் நான்கு சாட்சிகள் தேவை என்று குர்ஆன் கூறுகிறது. ஏனைய எந்தக குற்றச் செயலுக்கும் இரண்டு சாட்சிகள் போதும் எனக்கூறும் இஸ்லாம் இந்த விஷயத்தில் மட்டும் நான்கு சாட்சியம் தேவை எனக் கூறுவது ஏன் என்பதை நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
    நேருக்கு நேர் கண்ட நடத்தை கெட்ட செயலைக் கூட பரப்பக்கூடாது. குறைந்த பட்சம் நான்கு பேருக்கு முன்னிலையில் நடந்தால் மட்டுமே அது குறித்துப் பேசவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
    ஒரு பெண்ணிடம் நாம் கண்ட இழிசெயலையே கூறக்கூடாது என்றால் இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து கூறி பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை சொல்லத் தேவையில்லை.
    ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் வெளியே வருவதைக் காண்கிறோம். அவன் எதற்குச் சென்றான் என்பது நமக்குத் தெரியாது. உள்ளே வேறு யாரெல்லாம் இருந்தார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால் இந்தக் காட்சிக்கு கண், காது, மூக்கு வைத்து ஊரெல்லாம் பரப்பி விடுகிறோம். இஸ்லாமிய ஆட்சி நடந்தால் நமக்கு 80 கசையடி வழங்கப்பட்டிருக்கும். இவ்வளவு பெரிய குற்றத்தை சர்வ சாதாரணமாக நாம் செய்து வருகிறோம்.
    தன் மீது இப்படி ஒரு பழி சுமத்தப்பட்டால் தனது நிலை என்ன என்று எந்த பெண்ணும் சிந்திப்பதில்லை. தன் குடும்பத்துப் பெண்கள் மீது இத்தகைய அவதூறு பரப்பப்பட்டால் தனது நிலை என்ன என்பதை எந்த ஆணும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
    இன்னும் சொல்வதாக இருந்தால் தம்பதியரிடையே மனக்கசப்பு இருந்தால் அதை நீக்கி இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே முஸ்லிம்களின் பணியாக இருக்க வேண்டும். இந்தப் பணிக்காக பொய் கூட கூறலாம் என்று இஸ்லாம் கூறுகிறது.
    மனிதர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக ஒருவர் எதைக் கூறினாலும் அவர் பொய்யரல்ல என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உம்மு குல்சூம் (ரலி), நூல்கள்: அஹ்மத், புகாரி
    பிரிந்து கிடப்பவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக பொய்களைக் கூட கூறலாம் என்றால் இணக்கம் ஏற்படுத்துவது எந்த அளவு இறைவனுக்கு உகந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
    இறைவன் தனக்குப் பிடிக்காத பொய்யைக் நட நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக அனுமதிக்கிறான்.
    இந்த நல்ல நோக்கத்திற்காகத் தான் நாம் கற்பனை செய்யலாம். கசப்பை நீக்க உதவும் எத்தகைய பொய்யையும் கூறலாம். ஆனால் நாமோ பிரிப்பதற்காக இதைச் செய்து கொண்டிருக்கிறோம்.
    தொழுகை, நோன்பு, தர்மம் ஆகிய காரியங்களை இறைதிருப்திக்காக நாம் செய்கிறோம். மறுமையில் நல்ல நிலையைப் பெறுவதற்காக இந்தக் காரியங்களில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்கிறோம்.
    இதை விட சிறந்த காரியம் ஏதும் இருக்க முடியுமா? இருக்கிறது அதுதான் குடும்பத்தார்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவது.
    நோன்பு, தொழுகை, தர்மம் ஆகியவற்றுக்காக கிடைக்கும் மதிப்பை விட சிறந்த மதிப்பைப் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை நான் உங்களுக்குக் கூறட்டுமா என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அது தான்குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்துதல் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும் குடும்பங்களில் பிளவை ஏற்படுத்துவது நல்லறங்களை அழித்து விடக்கூடியது எனவும் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி), நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)
    ஆகவே பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போம். நல்லறங்களைப் பாழாக்கும் குடும்பப் பிரிவினை செய்வதைத தவிர்ப்போம்
நன்றி : http://www.islamiyadawa.com/

Saturday, February 20, 2010

குழந்தை வளர்ப்பில் ...


குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்
டாக்டர் D. முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H.,

குழந்தை வளர்ப்பதில் சில தாய்மார்கள் சிள தவறான பழக்க வழக்கங்களையும் மற்றும் கருத்துகளையும் நடைமுறை படுத்துகிறார்கள். அவைகள் பற்றி சற்று பார்ப்போம்.

1. குழந்தை பிறந்த உடன் கழுதை பால் கொடுக்க வேண்டும் என்ற தவறான வழக்கம் உள்ளது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் கழுதைப் பால் அஜீரணம் ஏற்படலாம்.

2. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும் போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சு உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.

3. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

4. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம் இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்கு பரவும்.

5. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் - தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டும்.
பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று 'தொக்கம் எடுத்தல்' என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று அது போல் குடல் ஏற்றம் என்று 'குடல் தட்டல்' என்று செய்கிறார்கள் இது மடமை.

6. ஒரு முறை டாக்டர் தந்த மருந்தையோ அல்லது அதே நோய் உள்ள மற்ற குழந்தைகளுக்கு டாக்டர் தரும் மருந்தையோ கொடுக்கிறார்கள். நோய் ஒரே மாதிரி தெரிந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குழந்தைக்கும் நோயின் தன்மை மாறுபடும்.

 7. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளை சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.

8. அம்மையை பற்றி மூடப்பழக்கம் அனேகம் உள்ளன. அம்மை ஒரு வைரஸ் நோய் சில குழந்தைகளுக்கு தானாகவே சரியாகி விடும். இன்னும் சில குழந்தைகளுக்கு விபரீத விளைவை உண்டுபண்ணும் தற்சமயம் அம்மையை தடுக்கும் தடுப்பூசிகள் உள்ளன.

9. சில தாய்மார்கள் என் குழந்தைக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டு விட்டேன் பிறகு மீண்டும் மஞ்சள் காமாலை வந்து விட்டதே என்கிறார்கள். மஞ்சள் காமாலையில் பல வகை உண்டு. நம் நாட்டில் பொதுவாக மஞ்சள் காமாலை டீ க்குத்தான் தடுப்பூசி போடுகிறோம். மிக அரிதாக சிலர் மஞ்சள் காமாமல A தடுப்பூசி போடுகிறார்கள். மஞ்சள் காமாலை டீ தடுப்பூசி போடுவதால் அதை மட்டுமே தடுக்க வல்லது மற்ற வகைகளை தடுக்காது அது போல தடுப்பூசி போடுவதால் 100 சதவீதம் அந்த நோய் வராது என்ற உத்திரவாதம் கிடையாது தடுப்பூசி போடுவதால் அந்த நோயின் வீரியம் குறையும் விரைவாக குணமடைய உதவும் அந்த நோயால் வரும் பக்க விளைவுகள் குறையலாமே ஒழிய 100 சதவீதம் நோய் வராது என்று சொல்ல முடியாது.
10. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறு சிறு சலம் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை 'அக்கி' என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். நுண்கிருமிக்குரிய மருந்தை களிம்பு வடிவிலோ அல்லது மாத்திரையாக உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

11. சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு அரிச கஞ்சி கொடுப்பதால் சளி பிடிப்பதாக கூறுகிறார்கள். சரியான முறையில் சுத்தமாக ஆரோக்கியமான முறையில் சமையல் செய்தால், கஞ்சியின் காரணமாக சளி பிடிக்காது.

12. சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நோய் வந்துவிட்டால், ஊசி போட்டால் மட்டும் தான் சரியாகும் என்று நினைக்கிறார்கள். மருத்துவச் சந்தையில் ஊசிக்கு நிகரான மருந்து மாத்திரைகள் இருக்கிறது.

உங்கள் குழந்தைகளுக்கு எது குணமளிக்கக் கூடியது என்பதை உங்கள் மருத்துவரை முடிவெடுக்க விடுங்கள்... மருத்துவரின் வைத்தியமுறையில் உங்கள் கருத்துக்களை திணிக்காதீர்கள்.

13. குழந்தைகளுக்கு தரும் உணவு முறையில் கடையில் கிடைக்கும் பாக்கெட் உணவு தான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற உணவை நீங்களே வீட்டிலே சுத்தமாக தயாரித்து கொடுக்கலாம் விலையும் குறையும் உணவு தயார் பண்ணுவதில் நீங்கள் ஈடுபட்டுள்ளதால் நிம்மதியும் கிடைக்கும்.

14. வலிப்பு நோய் வந்தால் கையில் இரும்பினால் ஆன பொருளை கொடுத்தால் சரியாகிவிடும் என எண்ணுகிறார்கள். இது அறியாமை பொதுவாகவே வலிப்பு தானாகவே சிறிது நேரத்தில் சரியாகி விடும் இரும்பு கொடுக்கும் நேரமும் தானாக வலிப்பு நிற்கும் நேரமும் ஒன்று படுவதால் இந்த நினைப்பு வலிப்புக்கான காரணம் என்ன என்று அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும்.
15. சில குழந்தைகளுக்கு இருமுவது போல் தொண்டையில் குர்குர் என்று சப்தம் வருவதுண்டு. இதை சளி என்று நினைத்துக் கொண்டு மருந்து கொடுக்கிறார்கள். இது சளி அல்ல சிறிய தொண்டை குழாhய் அதில் எச்சிலை சேர்த்து வைத்து கொண்டு துப்பவும் தெரியாமல் விழுங்கவும் தெரியாமல் அந்த எச்சில் வழியாக மூச்சு விடுவதால் வரும் சப்தம் இதனுடன் ஒற்றை இருமல் அல்லது 2-3 தும்பல் கூட சேர்ந்து வரலாம். இதற்கு மருந்து மாத்திரை அவசியமில்லை. மூக்கு அடைத்து இருந்தால் மூக்கு சொட்டு மருந்து கொடுத்தால் மட்டும் போதும் வளர வளர இது சரியாகி விடும்.

16. தடுப்பூசி, போலியோ, சொட்டு மருந்து கொடுத்து சில மணி நேரத்துக்கு ஆகாரம் ஏதும் கொடுக்கக் கூடாது என்று நம்புகிறார்கள். அது சரியான நம்பிக்கை அல்ல.
17. பிறந்த சிலகுழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும் (Witch Milk) இதை நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல.

18. குளுகோஸ், ஸ்லைன் ஏற்றிய குழந்தைகளுக்கு அதனால் சளி பிடித்து விட்டது என்று கூறும் பழக்கத்திற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

19. சில பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் 'உரம் விழுந்து இருக்கிறது' என்று எண்ணி 'உரம் எடுத்தல்' என்று செய்கிறார்கள் இது தவறான பழக்கம்.

 டாக்டர் D. முஹம்மது கிஸார் M.B.B.S., D.C.H.,சாமு சஜியா பேபி கிளினிக்
57, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, ஏழுகிணறு, சென்னை - 600 001.

போன் : 2528 6464, 2526 6464
- www.nidur.info

Friday, February 19, 2010

இளமை விகடன் - கூகுள் ரீங்காரம் Buzz

அன்புடன் புகாரி

கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்


குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றன
ரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றன

 

கணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனக்கேணி
பொங்குகிறது அளவற்று
அகர முதல
இணைய வெளியெல்லாம்

கூகுள் பகவான் ஆனது



இளமை விகடனில்
 

நன்றி : http://anbudanbuhari.blogspot.com

நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்...

அன்புடன் புகாரி
தாய்-மகள், தந்தை-மகன், அண்ணன்-தம்பி, அக்காள்-தங்கை, தொழிலாளி-முதலாளி என்று எல்லா உறவுகளிலும் நட்பே வேண்டும். சக தொழிலார்களிடம் நட்பு பிற மொழியினரிடம் நட்பு பிற நாட்டவரிடம் நட்பு என்று அனைத்திலும் நட்பு இருந்தால்தான் வீடு, ஊர், உலகம் என்று எல்லாமும் மலர்ந்திருக்கும்.

நட்பு என்பது ரத்த உறவைப்போல பிறப்பில் வருவதில்லை அதை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். நண்பர்களாய் இருந்த இருவர் ரத்த உறவுச் சகோதரர்களாய் ஆவதில்லை. ஆனால் சகோதரர்களாய் இருக்கும் இருவர் நண்பர்களாய் ஆகிறார்கள். அதுதான் அவர்களின் சகோதர உறவையும் நெடுநாளையதாகவும் வலுவானதாகவும் மாற்றுகிறது.

ஆனால் காதலர்களும் கணவன் மனைவியரும் அப்படியானவர்கள் அல்ல. அவர்களுக்கு இரு வழிகளில் நட்பு வர வழியிருக்கிறது. காதலர்களாய் ஆனபின் அல்லது கணவன் மனைவியாய் ஆனபின் நட்பை வளர்த்துக் கொள்ளலாம். அல்லது நண்பர்களாய் இருந்து காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ ஆகலாம். எப்படியாயினும் உலக உறவுகளுக்கெல்லாம் உண்மையான இணைப்பாய் இருப்பது நட்புதான்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையில் பொருளாதார பந்தமே உறவாக இருந்தால், அதில் அவ்வப்போது விரிசல்தான் விழும். இருவருக்கும் இடையில் நட்பு என்பது உறவாக இருந்தால், அவர்களை அசைக்க எவராலும் இயலாது.

காதலன் காதலிக்கு இடையில் கவர்ச்சி மட்டுமே பந்தத்தை உருவாக்கி இருந்தால் அந்தக் காதல் நாலு நாளில் செத்துப் போகும். உண்மையான நட்பு அவர்களின் பந்தத்தை உருவாக்கி இருந்தால் அவர்கள் வாழ்க்கை என்றென்றும் உயரத்திலேயே இருக்கும்.

வாழ்வின் அனைத்திற்கும் நட்பே தேவை. நட்பின் புனிதமே உறவுகளை உருவாக்கத்தான்.

இரு தலைவர்களுக்குள் நட்பு என்றால் இரு நாட்டின் உறவும் அமைதியும் வலுப்படும். இரு மதத்துக்குள் நட்பு என்றால் அப்பப்பா... எத்தனை உயிர்கள் காப்பாற்றப்படும்

நட்பு வழியே காதல் மலர்ந்தால் அது வாழ்வின் மழை! காதல் வந்ததும் நட்பை இழந்தால் அது அந்த உறவின் மரணம்! காதல்கூட நட்பை இழக்கச் செய்வதில்லை. கல்யாணம்தான் அதைச் சிலரிடம் செய்துவிடுகிறது. கணவன் மனைவி என்று ஆனதும் தங்களின் நட்பை இழந்துவிடுகிறார்கள் சிலர். அத்தனை பலகீனமான நட்பாய் அவர்களின் நட்பு இருந்திருக்கிறது என்றால் அது உண்மையான நட்பா? உண்மையான நட்பிருந்தால் உயிர் போகும்போதும் உறவு போகாது!

எல்லோரும் ”நல்ல நட்புடைய” நண்பர்களாய் இருங்கள். மற்ற உறவுகள் அனைத்தும் தானே வரும், வளரும், நிலைக்கும், வாழ்வு வளமாகும்!

நன்றி :http://anbudanbuhari.blogspot.com\

பிரியாணி

“தம்பி ரெண்டு மணிக்கி வரச்சொல்லியிருக்கான். முழிச்சிருவீங்கள்ல”?





ambur biriyani 
“தம்பி ரெண்டு மணிக்கி வரச்சொல்லியிருக்கான். முழிச்சிருவீங்கள்ல”?
“நிச்சயமா அண்ணெ. நா உங்களுக்கு ‘ரிங்’ தர்றேன்”.
ரொம்ப நம்பிக்கையோடு சொன்னார் பாபுஜி. சொன்ன நேரத்துக்கு அல்லது திட்டமிட்ட நேரத்துக்கு விழிப்பது என்ற ‘ரிஸ்க்’கை அவர் அந்த நேரத்தில் எடுக்கவிரும்பவில்லை. அந்த விஷயத்தில் கடந்த காலம் கொடுத்திருந்த பாடங்கள் அவரால் மறக்க முடியாதவை.
எட்டரைமணிக்குப் போகவேண்டிய ஆஃபீஸுக்கு சரியாக ஆறு மணிக்கு அலாரம் வைத்து, அது நேரம் தவறாமல் அலறி, பாபுஜியும் முழித்து, ‘இன்னும் ஒரு ஐந்து நிமிஷம் படுத்திருக்கலாம்’ என்று அலாரத்தின் உச்சந்தலையில் அடித்து அதை அமைதிப்படுத்திய பிறகு படுத்துக்கொண்டார். ஐந்து நிமிஷம் கழித்து விழித்தபோது மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. அரக்கப் பரக்க தயாராகி அலுவலகம் சென்றபோது ‘காசுவல் லீவு’ம் இல்லாததால் ‘மெடிகல் லீவு’ போடும்படி ஆகிவிட்டிருந்தது. டாக்டர் பிரபுராஜிடம்தான் வழக்கம்போல ‘வைரல் ஃபீவ’ரை ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்கவேண்டியிருந்தது.
இப்படிப்போன பல ஐந்து நிமிஷங்களால் அந்த ஆண்டின் அனைத்து விடுப்புகளுடன் பல ஐம்பது ரூபாய்களை இழக்க நேர்ந்தது மட்டுமில்லாமல், மருத்துவ விடுப்பெல்லாம் தீர்ந்து போனபிறகு கரெக்டாக வைரஸுக்கு யாரோ தகவல் அனுப்ப, அது முகூர்த்த நேரம் பார்த்து பாபுஜியின் உடம்புக்குள் குடிபுகுந்து ஒரு பத்து நாள் படுக்கவைத்து ‘லீவ் ஆன் லாஸ் ஆஃப் பே’ போடவைத்தது.
கடந்த காலத்தை திரும்பிப்பார். கழுதைதான் பின்னால் பார்க்காமல் போய்க்கொண்டே இருக்கும். நீ கடந்த காலத்திலிருந்து நல்லதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குருவும் சொல்லியிருந்ததால் பாபுஜி இந்த விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாக இருந்தார். தூங்கினால்தானே விழிக்கின்ற பிரச்சனை? அந்த நம்பிக்கையில்தான் அவரும் வருகிறேன் என்று சொன்னார். தவிர இரவு இரண்டு மணிக்கு இப்படி ஒரு காரியத்துக்காக வெளியில் செல்வது அவருக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கப் போகிறது. அந்த ஆர்வமும் அவரை உள்ளூர தூங்கவிடாடதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதோடு இந்த வேலைகளையெல்லாம் வேறு யார் பார்ப்பார்கள்? பெத்த மகளின் கல்யாணத்துக்கு வேறு யார் செய்வது? எப்போதும்போல இப்போது அவர் இருக்க முடியுமா என்ன? பொறுப்பில்லாத தகப்பன் என்ற பெயரை வேறு எடுக்க வேண்டுமா? சோம்பேறி, விபரமில்லாதவர் என்ற பட்டங்கள் போதாதா?
அவர் நினைத்ததுபோலவே இரவு அல்லது அதிகாலை இரண்டு மணி வரை தூங்குவதற்கு வாய்ப்பே வரவில்லை. சரியாக இரண்டுக்கு வினோத சகோதரனுக்கு தொலைபேசினார். (வினோத சகோதரன் என்பது பாபுஜியோடு வேலை பார்க்கும் பக்கத்து வீட்டுக்காரர். அவருடைய பெயரின் குத்துமதிப்பான அல்லது குத்தாத மதிப்பான தமிழாக்கம்தான் வினோத சகோதரன் என்ற பெயர். மற்றபடி பார்ப்பதற்கு வினோதன் கொஞ்சம் குண்டாக இருப்பார் என்பதைத் தவிர அவருடைய உருவத்திலோ அல்லது செயலிலோ வினோதம் எதுவும் இதுவரை தென்படவில்லை. அவர் பல்கலைக்கழக கணித பாடத்தில் தங்கமெடல் வாங்கியது வேண்டுமானால் பாபுஜியைப்பொறுத்த அளவில் வினோதமாக இருக்கலாம். நிற்க பாபுஜியின் பெயரும் பாபுஜி அல்ல. அதுவும் ஒரு உறவு சார்ந்த குத்துமதிப்பான — அல்லது … சரி வேண்டாம் — மொழிபெயர்ப்புதான்.)
“அண்ணே போலாமா? வூட்டுக்கு வந்துட்டிங்கன்னா நம்ம கார் இருக்கு. அதுலெயே போயிறலாம்”
“சரி தம்பி, வந்துர்றேன்”
“அப்ப, நற்செய்தி அண்ணன்?”
“அவரையும் கூட்டிட்டு வந்துர்றேன்”
“அவரு ஒடம்புக்கு முடியலேன்னாரே?”
“இல்லெ, அவரே வற ஆசெப்படறாரு. அவருக்கு கடாவெல்லாம் நல்ல பழக்கமிருக்கு. அவரும் வந்து சொல்லட்டும்”
“சரிண்ணே”
‘நம்ம கார்’ என்று பாபுஜி சொன்னது பாபுஜியின் காரை அல்ல. அது சும்மா ஒரு இதுக்கு. பாபுஜி அடிக்கடி சொல்வார். “இறைவன் எனக்கு செல்வத்தைக் கொடுக்கவில்லை. கார் பங்களாவைக் கொடுக்கவில்லை. ஆனால் இதெல்லாம் உள்ளவர்களைக் கொடுத்துள்ளான்” என்று. அவர் நகைச்சுவையாகத்தான் அதைச்சொன்னாரா என்பது அவர் மனதுக்கு மட்டும் தெரிந்த ஒரு ரகசியம். இறைவனுக்கும் அவருக்கும் ரொம்பகாலமாக நடந்து கொண்டிருந்த ஒரு வழக்கின் சங்கேதம் அது. இப்ப விஷயம் என்னன்னா, அவர் நம்ம கார் என்று சொன்னது நண்பர் ஒருவரின் காரைத்தான்.
கிளம்பிச் சென்று கோட்டுக்கொல்லையை அடைந்தபோது இன்னும் இருட்டாகத்தான் இருந்தது. ட்ரைவர் பையன் புதுசு. கொஞ்சம் வேகமாக ஓட்டியதாகத் தோன்றியது. அதுவும் அனாவசியமாக. கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
சரியாகத் தெரு மத்தியில் மட்டன்பாய் — அவரை அந்த ஊரில் அப்படித்தான் சொன்னார்கள் — பேண்ட் ஷர்ட் சகிதமாய் நின்று கொண்டிருந்தார். காத்துக்கொண்டு. ‘செல்’லில் சொல்லிவிட்டுத்தான் போனோம். ஆட்டுக்கறி விற்பவரென்றால் ‘செல்’ வைத்துக்கொள்ளக்கூடாதா என்ன? இப்போதெல்லாம் ஆடுகளே ‘செல்’ வைத்துக்கொள்கின்றன. (நேற்று பாபுஜியிடம் ஒரு ஆடு ‘செல்’லில் பேசியபோது தெரிந்து கொண்டது இது).
காரைவிட்டு இறங்கியபோதே ஒரு பத்துப்பதினைந்து கிடாக்கள் தென்பட்டன. இன்னும் சில மணி நேரங்களில் பிரியாணியாகப் போகிறோம் என்று அவை அறியுமா என்ன? பாபுஜிக்கு அவைகளின்மீது ஒரு தத்துவப்பூர்வமான இரக்கம் கொஞ்சம் வந்தது. இவ்வளவுக்கும் அவர் ஒரு மட்டன் காதலர். ஆனால் நின்றுகொண்டிருந்த கிடாக்களில் பெண் எது ஆண் எது என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் நாக்குக்கு நன்கு தெரிந்த ஒரு உண்மை அவர் கண்களுக்கு புலப்படவில்லை.
“டீ சாப்புட்றிங்களா சார்” என்றார் மட்டன் பாய்.
“இல்லெ வேனா, இப்பதான் வீட்லெ சாப்டு வர்றோம்” என்றார் வினோத சகோதரன். நற்செய்தி அண்ணன் ஒரு கம்பளியால் தன் உடம்பு முழுவதையும் போர்த்திக்கொண்டிருந்தார். அதற்கு அதிகாலைக் குளிர் மட்டும் காரணமல்ல. அவருக்கு உண்மையிலேயே உடம்புக்கு முடியாமல்தான் இருந்தது. அதோடு கொசுக்கள் வேறு நிறைய இருந்தன.
மூடியிருந்த ஒரு கடை வாசலில் சின்ன திண்ணை மாதிரி இருந்த ஒரு உயரத்தில் உட்கார்ந்து கொண்டோம். பேண்ட் போட்டிருந்ததால் கொசுத்தொல்லை அதிகமில்லை. ஆனால் கைலி உடுத்திவந்த நற்செய்தி அண்ணனைத்தான் கொசுக்கள் எளிதாக சென்றடைந்து முக்கிய இடங்களில் தாக்குதல் நிகழ்த்த ஏதுவாக இருந்தது.
எதிரில் ஒரு சின்ன கடை இருந்தது. அதை கடை என்று சொல்ல முடியாது. கசாப்பு செய்யும் இடம். ஒரு பத்தடி தள்ளி மேய்ந்துகொண்டும் துரத்திக்கொண்டும் இருந்த கிடாக்கள் அதன் உள்ளே போனதும் அசைவற்றுப் போகப்போகின்றன. அதில் கறியை வெட்டிப்போடுவதற்கு சில மர மேடைகள் இருந்தன. ஒரு சாராக்குழி ஒன்று இருந்தது. எடைபோட ஒரு தராசு இருந்தது. சில உயரமான பக்கெட்டுகள் இருந்தன ஒரு மூலையில். அந்த கடைக்குள் ஒரு சின்ன இருட்டான அறைமாதிரி ஒரு இடம் இருந்தது. அது எதற்கு என்று தெரியவில்லை. முண்டா பனியனும் குதி காலுக்கு மேலே தூக்கிய பேண்டுமாக இரண்டு பையன்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
goats3“தம்பி, நல்ல கெடா தம்பி, எல்லாம் கரெக்ட் ரேஞ்ச். ஒரு பத்துப் பதினோறு கிலோவுக்கு மேலெ இருக்காது ஒவ்வொன்னும்” என்றார் வினோத சகோதரன்.
அனுபவப்பட்டவர். கணக்குப்போடுவதில் புலி. தங்கமெடல் வேறு. அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு ஆட்டின் மீது இன்னொன்று ஏற முயற்சித்தது. முன்னது பிடிகொடாமல் நழுவியது. நிச்சயம் அது நாணத்தினால் இருக்க முடியாது. அல்லது ‘பப்லிக்’காக இப்படி விவஸ்தையில்லாமல் நடந்து கொள்கிறதே என்ற கோபத்திலும் இருக்கலாம். அவைகளுக்கு நாணமில்லை என்று எப்படி கறாராகச் சொல்லமுடியும்? பாபுஜியின் மூளை துரிதமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
ஆஹா, பொண்ணாடு போலெருக்கே. வேகாது. எல்லாங் கெட்டுப்போயிடும். ஒரு பொண்ணாடுகூட கறியில் சேரக்கூடாது.
“அண்ணெ, அந்த ஆடு பொண்ணாடுன்னு நெனக்கிறேன். கொஞ்சம் பாத்துக்குங்க”
“அந்த ஆடுமட்டுமல்ல தம்பி, மொத்தம் மூனு பொண்ணாடு இருக்கு. அதெ வச்சுத்தான் மத்த ஆடெல்லாம் ஒரு எடத்துலேயே நிக்கிது. இது ஒரு ‘டெக்னிக்’ தம்பி. அப்பதான் கெடாவெல்லாம் வேறெங்கெயும் போகாம அதைச்சுத்தியே நிக்கும்” என்று சொல்லிச் சிரித்தார்.
கிடா உளவியல். ஹும்…படா உளவியலாக இருக்கிறதே என்று வியந்தார் பாபுஜி.
“ஒன்னும் கவலெப்படாதிங்க தம்பி, அதுல எதுவும் கலக்காம எல்லாம் கடாவா வெட்டும்படி நா பாத்துக்கறேன்” என்றார் மனித உளவியலும் அறிந்த வினோத சகோதரன். பாபுஜிக்கு அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. கறி சரியில்லையெனில் கல்யாணமே வீணான மாதிரிதான். சோழ நாடு சோறுடைத்து. கல்யாண வீடு கறியுடைத்து என்று சும்மாவா சொன்னார்கள் ?
II
நினைத்தபடியே பிரியாணி ரொம்ப நல்லவிதமாக வந்திருந்தது. சோற்றின் வண்ணமே ஆயிரம் கதை சொல்லிவிடும். பட்ட கஷ்டம் — ஆடுகள் பட்ட கஷ்டம்தான் — எதுவும் வீணாகவில்லை. எல்லாம் சூப்பர் கறியாக இருந்தது. கொழ கொழ. லட்டு லட்டு. எல்லார் வாயிலும் கறியும் முள்ளுமாக. பார்ப்பதற்கே ரொம்ப அற்புதமாக இருந்தது.
எல்லாருமே சொல்லிவைத்த மாதிரி மறு சோறு கேட்டு வாங்கிக்கொண்டார்கள். கறியும் மறக்காமல் விழத்தான் செய்தது. தாலிச்சா(1), தைர் பச்சடி, ஃபிர்னி(2), சிக்கன் பொரியல் எல்லாவற்றுக்கும் மேலாக கறியின் சுவை ஜாதி வித்தியாசமில்லாமல் வந்திருந்த எல்லா நாக்குகளையும் அசத்தியிருந்தது. பீடாபோட்டுக்கொண்ட வாய்களில் கறியையும் பிரியாணியையும் புகழாத வாயே இல்லை.
பாபுஜிக்கு பெருமை தாங்க முடியவில்லை. எல்லாரையும் சாப்டிங்களா? சாப்டிங்களா? என்று மறுபடி மறுபடி பல ரவுண்டுகள் வந்து தனது கோணல் வாயால் கேட்டுக்கேட்டு உபசரித்தபடி இருந்தார். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நாக்குகளையெல்லாம் பார்த்தபோது அவருக்கும் ஆசை வரத்தான் செய்தது. ம்ஹும். கூடாது. நப்ஸை(3) அடக்கவேண்டும். கடைசியில்தான். ஆமாம். அதுதான் மரியாதை. தெரியும். ஆனால் என்ன செய்வது? இந்த நாக்கு இருக்கிறதே, அதைக்கொடுத்த இறைவனுக்கே எல்லாப் புகழும். பசிக்கு உணவிடாத மரியாதை என்ன எழவு மரியாதையோ. பீடா மென்றுகொண்டிருந்த வாய்களைப் பார்த்தபோதும் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பிரியாணி தட்டுகளைப் பார்த்தபோதும் பாபுஜிக்கு கொஞ்சம் பொறாமையாகக்கூட இருந்தது. அடிக்கடி சுரந்து வந்த உமிழ் நீரை விழுங்கிக்கொண்டார்.
சர்க்கரை வியாதியால் கை கால்கள் வீங்கி, நடக்கவே அவதிப்பட்டுக்கொண்டிருந்த உண்மையாளர் ஒருவர் கட்டுப்பாடின்றி கறிகளை உள்ளுக்குத் தள்ளிக்கொண்டிருந்தார்.
“அண்ணெ, நல்லா சாப்டுங்கண்ணே. ஒரு  நாளெக்கித்தானே… சாப்டுங்கண்ணே..எதாச்சும் வேணுமா?” என்று பாபுஜி உபசரித்தார்.
ஒன்னும் வேண்டாம் என்று சைகையிலேயே சொன்னார் உண்மையாளர். வாய் பேசமுடியாத அளவுக்கு ‘ஹவுஸ்ஃபுல்’லாக இருந்தது. ஃபிர்னியையும் இரண்டு மூன்று முறை வாங்கி வாங்கி குடித்துவிட்டு சுரண்டி சுரண்டி நக்கிக்கொண்டிருந்தார் உண்மையாளர். உணவுக்கு உண்மையாளர்தான். சந்தேகமில்லை. “சுகருக்கு மட்டன் ஒன்னும் செய்யாது” என்று விளக்கம் வேறு சொன்னார். யாரும் கேட்காமலே. அதைக்கேட்டு பாபுஜி சிரித்துக்கொண்டார். அவருக்குத் தெரியும். அது அவருக்கு அவரே சொல்லிக்கொண்ட நொண்டிச் சமாதானம். இருட்டைப் பார்த்து பயமாக இருக்கும்போது பாட்டுப்பாடிக்கொண்டு போவதுபோல.
ஆனால் அவரை அப்படி உபசரித்தது உண்மையில் கரிசனமா அல்லது பழிவாங்கலா என்று பாபுஜிக்கே புரியவில்லை. எது எப்படி இருப்பினும் கல்யாண பந்தியில் அமர்ந்தவர்களிடம் ஒரு டாக்டர்கூட டாக்டர் மாதிரி பேசமுடியாது. தனது உபசரிப்பில் ஒரு தார்மீக அல்லது தாலிச்சாமீக அல்லது மட்டன்மீக நியாயமிருந்ததை பாபுஜி உணர்ந்தார்.
எல்லாரும் சாப்பிட்டு முடித்தபோது மணி மூன்றை நெருங்கிவிட்டிருந்தது. பாபுஜிக்கு அகோரப்பசியாக இருந்தது. மூன்று தேக்சா(4) சாப்பாடு மிஞ்சிவிட்டதாக அஷ்ரஃப் சொன்னார். ஆனால் பாபுஜிக்கு வருத்தம் எதுவுமில்லை. மாறாக சந்தோஷமாக இருந்தது. யாருக்கும் எதுவும் இல்லை என்று ஆகவில்லை. எல்லாரும் ரொம்ப திருப்தியாக சாப்பிட்டார்கள். பிரியாணியும் அசத்தலாக இருந்தது. சோறாக்கிய பகாத்தி(5)க்கும் உயிரைக்கொடுத்து நாக்குகளை சந்தோஷப்படுத்திய அந்த ஆடுகளுக்கும்தான் நன்றி சொல்லவேண்டும்.
“வாங்க சம்மந்தி சாப்டலாம்” என்று அழைத்தார் மாப்பிள்ளையின் வாப்பா.
உயிரே வந்த மாதிரி இருந்தது. அதுதான் சரியான சமயம் என்று உட்கார்ந்துவிட்டார் பாபுஜி.
சம்மந்திகளுக்கு ஸ்பெஷல் கவனிப்பு. பாபுஜிக்கு மட்டன் ரொம்பப் பிடிக்கும் என்பது ஒரு திறந்த ரகசியமாக இருந்ததால் அவருக்கு வைத்த தட்டில் பிரியாணி கொஞ்சமாகவும் மட்டன் அதிகமாகவும் வைத்தார்கள். அவருக்கு மிகவும் பிடித்த மூளைமுள் கறியே அவருக்கு வந்திருந்தது.
“என்ன தம்பி, போட்லாவா(6) போட்டு தூள் கெளப்புங்க” என்றார் சாப்பிட்டு முடித்த வினோத சகோதரன்.
“பிஸ்மில்லாஹ் ஆரம்பிங்க” என்றார் சம்மந்தி. இஸ்லாத்தைப் பற்றி அவ்வளவாக அவருக்குத் தெரியாதென்றாலும் ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொன்னவுடன் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும் என்று சரியாகத் தெரிந்துவைத்திருந்தார்.
III
goats2ஒரு ஆட்டைப் பிடித்தான் அந்த இரண்டு பையன்களில் ஒருவன். என்ன செய்யப்போகிறான் என்று ஆர்வமாக பார்த்துக்கொண்டே இருந்தார் பாபுஜி. அவர் சின்னவயதில் இருந்தபோது ஏதோ ஒரு கல்யாணத்தில் பக்கத்து வீட்டுக் கொல்லையில் வைத்து ஆடறுத்தபோது சுவற்றில் ஏறி எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போது ஆட்டைப் பிடித்து மல்லாக்கப் படுக்க வைத்து ஒரு வாளியில் அதன் கழுத்தை வைத்து கத்தியால் ஒரு கீறு. கணத்தில் உயிர் பிரிந்துவிடும்போலிருந்தது. துப்பாக்கியால் பொட்டில் சுடுவது மாதிரி. வெகு விரைவான மரணம். வலி என்றால் என்ன என்று மூளைக்குள் செய்தி பாயுமுன்னரே உயிர் பிரிந்துவிட்டிருக்கும். பீறிவரும் ரத்தமெல்லாம் அந்த வாளிக்குள் வடிந்து ரொம்ப சீக்கிரம் உலர்ந்து கட்டியாகிவிடும். ஆடுகள் எதுவும் கத்தவோ கதறவோ இல்லை. அதற்கெல்லாம் நேரமே அவற்றுக்கு தரப்படவில்லை. ஒரு கணம்தான். ஆடு அடங்கும் வாழ்க்கையடா என்று அறுபட்ட கழுத்துடன் ஒருவித கையாலாகாத விரைப்புடன் கிடந்தன ஆடுகள்.
இங்கே எப்படி என்று கவனிக்க ஆரம்பித்தார் பாபுஜி. பையன்கள் ரொம்ப சிறுவயதுக் காரர்களாக வேறு இருக்கிறார்களே என்று அவருக்கு அவர்கள் திறமையின்மீது ஒருவித சந்தேகம் தோன்றியது.
ஆனால் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என்று சொல்லும்விதமாக அவர்கள் நடந்துகொண்டனர். ஆட்டைப் படுக்க வைத்து கத்தியால் கழுத்தில் ஒரே கீறுதான். உடனே ரத்தம் பீறிட்டு வர ஆடு கொஞ்சம் அதிர்ந்தது. பின்பு அடங்கியது. கத்தி மிகவும் கூர்மையாக இருந்திருக்க வேண்டும். அதை வைத்து ஒரு மனிதனின் கழுத்தில் இழுத்தால் என்னாகும் என்று கற்பனை செய்தார் பாபுஜி. கற்பனை செய்யவே முடியவில்லை.
கழுத்தறுபட்ட ஆடுகளை அப்படியே அலாக்காக ஒரு மரியாதையற்ற முறையில் தூக்கி அந்த இருட்டு அறைக்குள் எரிந்தார்கள். அந்த அறை எதற்கு என்று இப்போது விளங்கிவிட்டது. வாளிக்கு பதிலாக சாராக்குழியில் அதன் தலையை அல்லது கழுத்தை வைத்திருந்தார்கள். அதன் வழியாக ரத்தம் ஓடி தெருவுக்கு வருமா என்ற கேள்வி வந்தது பாபுஜிக்கு.
அடுத்து ஒரு ஆட்டைப் பிடிக்க ஓடினான் பையன். அவன் பிடித்ததும்தான் தாமதம். “அரேயரே, ஓ நகோ, ஓ மர்கெரே. மர்கே கிர்கே காட் நகோ” என்று கத்தியபடி வினோத சகோதரன் ஓடினார். அவர் ஓடிய வேகத்தில் இருந்த பொறுப்பு பாபுஜிக்கு நெகிழ்வை ஏற்படுத்தியது. ஆனால் அவர் ‘மர்கெ’ என்று சொன்னதுதான் என்ன என்று சரியாக விளங்கவில்லை. அந்த ஊருக்கு வந்ததிலிருந்து கொஞ்சம் உர்து சொற்கள் பழகிப்போயிருந்தாலும் பேச்சுவழக்கு அழுக்கு உர்துவுக்கு பாபுஜி பழகிக்கொள்ளவில்லை. அந்த ஆட்டை அறுக்கவேண்டாம் என்று வினோத சகோதரன் சொன்னார் என்பதுவரை புரிந்தது.
“‘மர்கே’ன்னா என்ன அண்ணே?”
“‘மர்கே’ன்னா பொண்ணாட்டுலெயே மலடிம்பாங்கள்ள, அதுதான்”
ஓஹோ பொண்ணாட்டிலேயே இது ‘டெக்னிகல்’ விஷயமா என்று வியந்தார் பாபுஜி.
வினோத சகோதரன் ரொம்ப உஷாராக இருப்பதைப் பார்த்தவுடன் மட்டன் பாயும் உஷாரானார். அப்படிப்பட்ட ஆடுகளை விட்டுவிடச்சொல்லி பையன்களுக்கு உத்தரவிட்டார். அதன்பிறகு பிடித்த ஆடுகளெல்லாம் ஆணாடுகள்தான் என்பதற்கு ‘ஆதாரம்’ காட்டிக்காட்டி அறுத்தார்கள் பையன்கள். கால்களின் முனைகளையும் தலைகளையும் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். முண்டமாக ஆயின ஆடுகள்.
சில ஆடுகள் ரொம்பத் துள்ளின. துடித்தன. அவைகளை ஒன்றன்மீது ஒன்றாக தூக்கித் தூக்கி அந்த இருட்டு அறைக்குள் வீசினார்கள். சில ஆடுகளுக்கு உயிர் அடங்கிய பிறகும் கால்களில் அசைவிருந்தது. கால்களை லேசாக உதைத்துக்கொண்டது. வன்முறையாளர்களை நோக்கிய அவைகளின் இறுதி எதிர்ப்பைப்போல. ஒருசில ஆடுகள் தலை பிரித்தெடுக்கப்படுவதற்குமுன் கழுத்தை நீட்டி வளைத்து கண்ணால் எங்கோ வெறித்தன. யாரையோ குற்றம் சொல்வதுபோல. அல்லது யாரிடமோ முறையிடுவதுபோல. அது பாபுஜிக்கு என்னவோபோல் இருந்தது.
ஆடுகளையெல்லாம் அறுத்து முடித்தபிறகு அவைகள் ஆண்கள்தான் என்பதற்கான ஆதாரங்களில் ஒரு இரண்டு கிலோவையும் கிட்னியோடு சேர்த்து அறுத்து வாங்கிக்கொண்டார் பாபுஜி. சாப்பாட்டு நெய்யில் வறுத்து சாப்பிட்டால் அதன் ருசியே தனி.
“தம்பி, நீங்க ‘கொட்ஸ்’ சாப்டுவிங்களா?” என்று சிரித்துகொண்டே கேட்டார் வினோத சகோதரன்.
“ம்…ரொம்பப் பிடிக்கும் அண்ணெ. ரொம்ப நல்லாரிக்கும்”
‘உவ்வே’ என்று வினோத சகோதரன் சொன்னதைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தார் நற்செய்தி அண்ணன்.
ஆட்டை இரும்புக் கொக்கிகளில் மாட்டி உரிக்க ஆரம்பித்தார்கள். நிர்வாணமாக தோலுரிக்கப்பட்டு தொங்கிய அவைகளின் வயிற்றில் கத்தி போட்டு குடலை வெளியில் எடுத்தார்கள். அதனுள்ளிருந்த மலத்தை பிதுக்கிப் பிதுக்கி பிழிந்து வெளியேற்றினார்கள். குடலை அவர்கள் உருவுவதே ரொம்ப அற்புதமாக இருந்தது. மனிதனுக்கும் இப்படித்தானே இருக்குமாம் என்று நினைத்துக் கொண்டார் பாபுஜி. கழுவிக் கழுவி குடலை சுத்தப்படுத்தினார்கள். அதற்குத்தான் நேரம் அதிகம் பிடித்தது.
கடைசியில் எடைபோட்டார்கள். வினோத சகோதரன் தீர்க்கதரிசித்தபடி ஒவ்வொரு ஆடும் பத்து கிலோவுக்கு மேல் போகவில்லை. பொண்ணாடு ஒன்று கூட இல்லை. அது பாபுஜிக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. 175 கிலோவையும் ஷாதிமஹாலுக்கு(7) வண்டியில் ஏற்றி விடும்போது காலை ஏழுமணியாகிவிட்டிருந்தது.
IV
“என்ன சம்மந்தி சாப்டாம என்ன யோசனை?” கேட்டது பாபுஜியின் சம்மந்தி.
பாபுஜியின் கண்களில் திடீரென அந்த ஆடு எங்கோ வெறித்தது. கால்களை உதைத்துக்கொண்டது. இறுதி எதிர்ப்பு. இறுதி முறையீடு.
“இல்லெ, வயிறு என்னமோ போல இருக்கிது. நா வெஜிடேரியன் சாப்டுக்குறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.
“என்ன திடீர்னு என்று சம்மந்தி?” ஆச்சரியத்துடன் கேட்டார்.
“இல்லெ, வயிறு சரியில்லெ” என்று சமாளித்தார் பாபுஜி.
அவர் வயிறு என்று சொன்னது வயிறல்ல என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.
======== * =========
1.தாலிச்சா — பிரியாணிக்கான சிறப்புக் குழம்பு
2.ஃபிர்னி – பிரியாணியோடு வைக்கப்படும் ஸ்வீட்
3.நப்ஸ் — ஆசை
4.தேக்சா — சோறு வைக்கும் அண்டா
5.பகாதி  — சமையல் செய்பவர்
6.போட்லா — முள்ளுடன் கூடிய கறி (சுவை அதிகம்)
7.ஷாதிமஹல் — திருமண மண்டபம்
நன்றி அம்ருதா, செப்டம்பர் 2009


புலால்


                                                                    by Abdul Qaiyum                                                                                                                                  
புலால் உணவு என்றாலே ஹோட்டல் பிலால்தான் நினைவுக்கு வருகிறது. “ஹலால்” “ஜலால்” “ஹிலால்” போன்று “புலால்” என்ற வார்த்தையும் தமிழ் மொழி அல்ல என்றுதான் நான் நினைத்திருந்தேன்.
“கசாப்” என்ற அரபு வார்த்தை உருமாறி தமிழில் “கசாப்பு” என்று ஆனதுபோல் புலால் என்ற வார்த்தையும் அரபு மொழியிலிருந்து இறக்குமதியானது என்று நினைத்திருந்தேன்.
“புலால்; என்றால் மாமிசம் மட்டும் தான் என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. தாவரங்களில் கூட புலால் உள்ளது. கீரை புலால் வகையை சேர்ந்தது. ஏனெனில் அதை நாம் பறித்த பின்பு அதனால் உயிரணுக்களை உற்பத்தி செய்யமுடிவதில்லை. பறித்த பின் உயிரணுக்களை உற்பத்தி செய்ய முடிந்தால், அது புலால் அல்ல” என்று புலாலுக்கு அருமையான விளக்கம் தருகிறார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
புலால் என்னும் வார்த்தை தூய தமிழ் வார்த்தை. சங்க கால முதலே இலக்கியத்தில் கையாளப்பட்டு வரும் சொல்.
நாகூர்க் கலாச்சாரத்தில் “புலா விடுவது” என்ற சடங்கினை காலங்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். கல்யாணமான புதுமாப்பிள்ளைக்கு இறைச்சி, கோழி, காடை, கவுதாரி. உல்லான், மடையான், கொக்கு என்று விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்படும். ஆனால் எளிதில் மீன்வகை கவுச்சி சாதனங்கள் பெண்வீட்டார் கொடுத்துவிட மாட்டார்கள். எத்தனை நாட்கள் தாமதிக்கிறார்களோ அந்த அளவுக்கு மாப்பிள்ளை கவனிப்பு அமர்க்களம் என்று பொருள்.
‘புலா’ விடும் சடங்கிற்கு மாப்பிள்ளை வீட்டார் உயர்ந்த ரக மீன்கள் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மாப்பிள்ளைக்கு தொடர்ந்து “Sea Food” சமைத்துக் கொடுப்பதற்கு லைசன்ஸ் கொடுக்கப்பட்டு விடும். இந்த நடைமுறை தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து மொழியில் “ப்லா” என்றால் மீன் என்று பொருள். தாய்லாந்து மொழியில் நிறைய சமஸ்கிருத மொழிகளின் கலப்பு இருப்பது உண்மை. அதுபோன்று நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்மக்கள் தாய்லாந்திற்கு வியாபார நிமித்தம் சென்று வாழ்ந்ததால் அந்த மொழி, மற்றும் கலாச்சார தாக்கம் இங்கிருந்ததும் உண்மை.
தாய்லாந்து மொழியில் ஒரு சொல்வழக்கு உண்டு.
“நை நாம் மீ ப்லா
நை நாம் மீ காவ்”
“தண்ணிக்குள்ளே மீனுருக்கு
நிலத்துக்குள்ளே நெல்லுருக்கு”
என்பது இதன் அர்த்தம். இயற்கை அளித்த இந்த வரப்பிரசாதத்தை வைத்துக் கொண்டு இந்நாட்டில் நீ பிழைத்துக் கொள் என்பது இதன் உட்கருத்து. இந்த வாக்கியம் தாய்லாந்து தேசிய கீதத்திலும் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு.
எனவே “ப்லா” என்ற வார்த்தை தாய்லாந்து மொழியிலிருந்து வந்திருக்க சாத்தியக்கூறுகள் உண்டென்றாலும் தமிழ் வார்த்தை ‘புலால்’ என்பதன் திரிபு என்பதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது.
“புலால்” எனும் தூய தமிழ் வார்த்தை ‘ஐங்குறு நூறு’ என்னும் நூலில் மருதம் பற்றிய பத்தாவது பாடலில் இடம் பெறுகிறது.
பூத்தமாசுத்துப் புலாலஞ் சிறு மீன்
றண்டுமுறை யூரன் (4-5)
இப்பாடலில் புலால் என்னும் சொல் ஆளப்பட்டுள்ளமை ஈண்டுநோக்கற்பாலது. திருவள்ளுவரும் பல இடங்களில் இச்சொல்லைக் கையாண்டுள்ளார்.
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்”
என்ற குறளின் மூலம் இதை நாம் நன்று அறிய முடிகிறது.

நன்றி : http://nagoori.wordpress.com
புலால்

LinkWithin

Related Posts with Thumbnails