
மாக்சிம் ரேடின்சனை மற்ற பிரஞ்சு சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திய ஒன்று அவரின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாடாகும் தான் அடிப்ப்டையில் யூத மரபை சார்ந்தவராக இருந்த போதிலும், இஸ்ரேலுக்கு எதிராக நின்றார்.பாலஸ்தீன் உரிமை போராட்டம் குறித்து ரேடின்சன் 1967 ல் சார்த்தரின் ஆய்விதழான les tempes moderne ல் Israel a colonial fact என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். அதே நேரத்தில் அவரின் போராட்ட ஆதரவு நிலைபாடும் கூட அடிப்படைவாத குழுக்களின் நிலைபாட்டிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அவரின் பாலஸ்தீன் நிலைபாடு இரு பார்வைகளை கொண்டிருந்தது.1. பாலஸ்தீனியர்களின் போராட்டம் அவர்களின் யூத வெறுப்பின் அடையாளமே. 2. பாலஸ்தீனியர்கள் தங்கள் போராட்டத்தை மதத்திற்கு அப்பாற்பட்ட வடிவத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும். இந்த நிலைபாட்டின் மூலம் ரேடின்சன் எட்வர்ட் செய்த் கருத்துடன் ஓரளவு உடன்படுகிறார். இன்னொரு வகையில் அவரின் சியோனிச எதிர்ப்பு கருத்தாக்கம் இரு பார்வைகளை கொண்டிருந்தது. 1. உலகம் முழுவதும் உள்ள யூதர்களையும், யூத சந்ததியினரையும் அவர்களின் அடையாளங்களை துறந்து ஒரே அடையாளத்திற்குள் கொண்டுவருதல் என்பது ஆபத்தானது. 2.பாலஸ்தீன் பகுதிகளை யூத மயப்படுத்தி பாலஸ்தீனியர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து, அவர்களை அங்கிருந்து விரட்டுதல். மேற்கண்ட விஷயங்களுக்காக ரேடின்சன் இஸ்ரேலிய எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டிருந்தார். மேலும் பாலஸ்தீனியர்கள் பிரான்சில் பிரஞ்சு மக்களை போன்றும், இங்கிலாந்தில் ஆங்கில மக்களை போன்றும் மீறப்படாத சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றார். அவர்களின் உரிமை போராட்டம் பிளவுபடாத மனநிலையிலிருந்து வெளிப்பட வேண்டும். மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குற்றங்களை சமரசமற்ற நோக்கோடு எதிர்த்தார். மேலும் அரபு சமூகத்தோடு, அரபு பார்வையாளர்களோடு அவரின் கருத்து தோற்றப்பாடு விமர்சன பூர்வமாக இருந்தது. பாலஸ்தீன் முரண்பாடு பற்றிய அவரின் நிலைபாடு அறிவார்த்தமாக இருந்தது. இஸ்ரேலிய யூதர்களும் பாலஸ்தீனிய அரபுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய முடியும். மேலும் இஸ்ரேல் என்பது ரேடின்சனை பொறுத்தவரை வெறுமனே காலனிய குடியேற்ற அமைப்பு அல்ல. மாறாக அது ஒரு தேசிய உண்மை கூட. யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சுயமரியாதை மீது மிகுந்த கூட்டுரிமைகளை கொண்டுள்ளார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவை மற்றொன்றை ஆதிக்கம் , ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத நிலையில் அரசியல் மட்டத்தில் அந்த குழுக்கள் வேறுபட்ட சமூகங்களாக இருக்கும் நிலையில், அவர்களின் நலன்களும், உள்ளாசைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான அறிவுஜீவி நிலைபாட்டை மேற்கொண்ட ரேடின்சன் அவ்வப்போது யூத அடிப்படைவாதிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். அவர்கள் இவரை யூத விரோதியாக பார்த்தனர். 1967 அரபு-இஸ்ரேல் போரை கடுமையாக எதிர்த்த ரேடின்சன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வரலாற்று ரீதியாக தொகுத்து Israel and the Arabs என்ற நூலை எழுதினார். இஸ்ரேல் விவகாரத்தின் நதிமூலத்திலிருந்து அதன் பரிணாம கட்டம் வரையான விமர்சன பார்வையும், ஆழ்ந்து அகன்ற அறிவு தேடலும் இந்நூல் முழுவதும் நிரம்பி இருந்தது. அதன் பிறகு Marxism and the Muslim world வெளிவந்தது. இஸ்லாமிய நாடுகளுக்கும் , சோவியத் யூனியனுக்குமான உறவு முறை, முதலாளித்துவத்தை இஸ்லாம் அணுகும் முறை, இஸ்லாமிய நாடுகளின் நிலவியல் அமைப்பு, சோசலிச அமைப்பு முறை ஆகியவற்றை குறித்த பன்முக விமர்சன நோக்காக இது இருந்தது. இதன் நீட்சியில் ரேடின்சன் இஸ்லாம் குறித்த சமூக, பொருளாதார கோட்பாட்டு தரவுகளை முன்வைத்தார். அது மேற்கில் அதிகம் கவனிக்கப்பட்டது.
மாக்சிம் ரேடின்சனை பொறுத்தவரை ஐரோப்பா புரிந்து கொள்ளாத உலகம் பற்றிய இரகசிய கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்தார். சாத்வீகமான நெகிழ்வு முறையோடு அதன் நகரல் இருந்தது. ஐரோப்பியனாக இருந்து கொண்டு ஓரியண்டல் சிந்தனை தளத்தை நோக்கி அவரின் இளமை கால செயல்பாடுகள் திரும்பின. குறிப்பாக அரபுலகம், இஸ்லாம் பற்றிய அவரின் தேடலானது அவரை நட்சத்திர தகுதி பெற்ற அறிவுஜீவி என்ற நிலைக்கு உயர்த்தியது.பின் நவீனத்துவ சிந்தனையாளர் என்ற கட்டத்துக்கு வந்த ழாக் தெரிதாவின் நண்பராக ரேடின்சன் இருந்தார். அவருடன் பல உரையாடல்கள் நடத்தி இருக்கிறார். பிரபல சோவியத் வரலாற்றாசிரியரான ஐசக் டொயிஸ்டர் இவர்கள் இருவரையும் "யூதமற்ற யூதர்கள்" என்றார். யூதர்களாக இருந்து கொண்டு யூத தேசியத்துவத்தின் அபாயத்தை எதிர்த்தவர்கள் என்ற அர்த்தம் படியாக அந்த வெளிப்பாடு இருந்தது.மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய வரலாற்றில் மார்க்சிய அடிப்படைகளில் இருந்து கொண்டு இஸ்லாம் மற்றும் பிற மதங்களை அணுகிய அவரின் பார்வை தத்துவ வரலாற்றில் புதிய தரிசனமாக இருந்தது. மேலும் மாக்சிம் ரேடின்சனுக்கு பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை இருந்தது. குறிப்பாக செமிட்டிக் மொழிகள் அனைத்தும் அவரின் மொழிக்கிடங்கில் நிறைந்து இருந்தன. இஸ்லாம் மற்றும் அரபுலகம் குறித்து அறிவதற்கு அவருக்கு இது உதவிகரமாக இருந்தது. தத்துவ வாதிகள் தங்களுக்கான கோட்பாட்டை தானே வடிவமைக்கிறார்கள் என்பதற்கு மாக்சிம் ரேடின்சன் உதாரணமாக இருந்தார். 2004 ஜனவரியில் அவரின் மரணம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அதற்குரிய சிந்தனை வெறுமையை விட்டு சென்றிருக்கிறது. மேற்கத்திய யூதராக இருந்து கொண்டு மத்திய கிழக்கை ஆராய்ந்த மாக்சிம் ரேடின்சன் அந்த வரலாற்றின் எல்லையை அதிக தூரம் கடந்த தவிர்க்க முடியாத நிழலாக இருக்கிறார்.
- உயிரோசை
No comments:
Post a Comment