Wednesday, June 5, 2013

மிஹ்ராஜ்


மிஹ்ராஜ்

*************

அகத்தில் ஆண்டவனை

வழுத்தி வாழ்ந்த வள்ளல் நபிகளுக்கு

அர்ஷின் நாயகன்

அழைப்பொன்றை அனுப்பி வைத்தான் !



பாவிகளிடமும் ஈனர்களிடமும்

அவதிப்பட்ட அண்ணலுக்கு

அன்பிறைவன் அனுப்பிவைத்த

அர்த்தமுள்ள அழைப்பதனை

அமரர்கோன் ஜிப்ரீல் கொண்டு வந்தார் !



ரஜப் மாதத்தின் இருபத்தேழாம் இரவில்

ஊருறங்கும் நேரத்தில்

சொர்க்கத்தின் வாகனம் புராக்

அண்ணல் வீட்டு வாசலில் வந்து நின்றது !



காபாவின் சுவரோரம்

அண்ணலின் இதயம்

அமரர்களால் பக்குவப்படுத்தப்பட்டது !

உலகின் ..

முதல் இருதய அறுவை சிகிச்சை

அண்ணலிடம்தான் ஆரம்பமானது !



பக்குவப்பட்ட இதயத்தோடு

இறைவனைத்தேடி

இனிய பயணத்தை

அண்ணல் ஆரம்பம் செய்தார் !



மக்காவில் புறப்பட்ட பராக்

பைத்துல் முகத்தஸ் வந்தது !

அங்கிருந்து ஜிப்ரீல் முன்செல்ல ... புராக்

வாகனம் வானமேறி சென்றது !



மண்ணகம் வாழ்த்துக்களோடு கையசைக்க

விண்ணகம் ஏறிவந்த வள்ளல் நபி

வருகின்ற வழியெல்லாம்

வாழ்ந்து மறைந்த

நபிமாரைக் கண்டார்கள் !

நல்வாழ்த்து பெற்றார்கள் !

கடைசி விழுது

வேர்களையும்

கண்டு மகிழ்வதைப்போல

முந்திய நபிமாரையெல்லாம் கண்டு

முகமன் கூறி அகமனம் களித்தார்கள் !



ஏக இறைவனின்

எண்ணத்தில் உருவான

விண்ணகத்தின் பேரெழிலை

பெருமானார் பார்த்தார்கள்

பரவசப்பட்டார்கள் !



அண்ணலின் உள்ளங்கையில்

அகிலம் ஒன்று சேர்ந்தது !

முகவுரையிலிருந்து முடிவுரை வரைக்கும்

உலகம்

அண்ணலிடம் அடக்கமானது !

வள்ளலின் இதயத்தில்

ஒன்று விடாமல் பதித்து வைத்தது !



சொக்க வைக்கும் சொர்க்கமும்

நடுங்க வைக்கும் நரகமும்

நன்மை தீமைகளின் பரிசுகளோடு

மனிதர்களை வரவேற்கக் காத்திருப்பதை

அண்ணல் கண்டார்கள் !



ஆதியும் அந்தமுமில்லா அற்புதனின்

அதிசயப் படைப்புகளில்

ஆன்மீக ஞானத்தின்

முழுப்படத்தையும்

அங்கே பயின்றார்கள் !



அற்புதங்கள் அதிசயங்கள் அனைத்துமே

ஏக இறைவன்

" ஆகுக " என்றால் ஆகி விடும் - அந்த

ஆனந்த பரவசத்தில் திளைத்தார்கள் !



ஆக்கவும் அழிக்கவும்

ஆற்றல் பெற்றவன்

அல்லாஹ் ஒருவனே எனும்

ஒப்பற்ற தத்துவத்தை அண்ணல்

அகத்தாலும் புறத்தாலும் அறிந்தார்கள் !



அல்லாஹ்வின் அன்பளிப்பாய்

ஐவேளைத் தொழுகை

அடியவர்க்கு அருளப்பட்டது !



அல்லாஹ் வாழ்த்தினான்

அமரர்கள் வாழ்த்தினார்கள்

அகிலத்தின் அனைத்து ஜீவராசிகளும்

மாநபி வாழ்வுக்கு

வாழ்த்துக்கள் கூறின !



சொர்க்கம் ...

அண்ணலின் வருகையால் பரவசப்பட்டது !

தான் படைக்கப்பட்ட பேருண்மையை

புரிந்து கொண்டது !



நல்லார் நாயகம் முகம் காண

நரகம் நாணப்பட்டது !



அத்தஹியாத் எனும்

அற்புதம் ஒன்றை

அண்ணலுக்குப் பரிசளித்து

படைத்தவன் மகிழ்ந்தான் !



வானத்தையும் வையத்தையும்

படைத்து வைத்த

பெருங்கருணைப் பெரியோனைப் புகழ்ந்தபடி

பெருமானார் ...

தங்கள் இல்லம் புகுந்தார்கள் !

படுக்கையில்

தாங்கள் விட்டுச் சென்ற

உடல் சூடு ஆறாத அற்புதத்தை

அண்ணல் அறிந்தார்கள் !



அளவிட முடியா

ஆற்றலின் அதிபதியாய்

அரசாளும் வல்லோனை

மறுபடி மறுபடி துதித்தார்கள் !



ஆயிரத்தி நானூறு

ஆண்டுகளுக்கு முன்

அன்றைய

மனித அறிவுக்கு ஆட்படாத

விண்வெளிப்பயணத்தை

வெற்றியுடன் முடித்து வந்த

பெருமானார்

இறைக் கருணையில் மிதந்தார்கள் !

இதுவே மிஹ்ராஜ் என

திருவாய் மலர்ந்தார்கள் !

**************************************

மிஹ்ராஜும் ஈமானும்

*****************************

மிஹ்ராஜ் சென்று வந்த

விந்தை நிகழ்வை

விடிந்தும் விடியாதக் காலைப்பொழுதில்

குறைஷியர் காதில்

கோமான் நபிகள் உரைத்தார்கள் !



ஆடையணியாத ஊரில்

ஆடை கட்டிய அழகாய் அண்ணல் திகழ்ந்தார்கள் !

அரபிகள் அதை

அருவருப்பாய் உணர்ந்தார்கள் !



ஆகாரத்தின் சுவையறிந்த

அரபு மக்கள்

ஆன்மீகத்தின் அகரத்தைக் கூட

அறிய முற்படவில்லை ! அங்கே -

அண்ணலின் கூற்று எடுபடவில்லை !



குறைஷியர் குரைத்தார்கள்

குறு குறுவென முறைத்தார்கள் !

குள்ள நரியாய் சிலபேர்

குதறிப்போடவும் நினைத்தார்கள் !



ஆனால்... அண்ணலை பார்க்கும் முன்பே

அபூபக்கர் சொன்னார் ...

" அண்ணலார் அப்படிச் சொல்லியிருந்தால்

அது உண்மையைத் தவிர வேறில்லை !"



அண்ணலின் இதயம் மலர்ந்தது !

அப்துல் காபா அன்று

மகளை மணமுடித்துக் கொடுத்து

அபூபக்கர் ஆனார் ! இன்று ..

அண்ணலின் வாய்மொழியை

வழிமொழிந்து " சித்தீக்"கும் ஆனார் !



தான் அறியாதவற்றை

தன் அறிவுக்கு மறைவானவற்றை

இறைவன் செயலாய் அங்கீகரித்து

ஏற்றுக் கொள்வதே ஈமான் !



ஈமான் எனும் நம்பிக்கைச் சாறு

ஒட்டு மொத்தமாய்

அபூபக்கர் இதயத்தில் இறங்கியது !



இஸ்லாத்தின் உதயத்தை

இதயத்தில் தாங்கிய சீமான்

ஈமானின்

ஒட்டு மொத்தத் தளபதியானார் !

மிஹ்ராஜ் அதிசயத்தை

தட்டில் வைக்காமலேயே

இதயத்தில் வைத்த பெருந்தகையானார் !



அதனால்தான் ...

அபூபக்கரின் ஈமான் இருக்கும் தட்டு

எப்போதும்

தாழ்ந்தே இருக்கிறது !

அகில உலகும் இவரை

வாழ்த்திக் கொண்டே வாழ்கிறது !

*************************************



*** 2002 ல் அபூஹாஷிமாவாவர் எழுதிய " அண்ணலே யா ரஸூலல்லாஹ் " என்ற நபிகளாரின் வரலாற்றுக் காவியத்திலிருந்து !

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails