Showing posts with label videoi. Show all posts
Showing posts with label videoi. Show all posts

Tuesday, August 17, 2010

இறைவனிடம் கையேந்துங்கள் By. அன்புடன் புகாரி + இறைவனிடம் கையேந்துங்கள் By. நாகூர் ஹனீபா.(வீடியோ)

By.  அன்புடன் புகாரி
பிரபஞ்சம் பொருள் சக்தி என்ற இரண்டாலும் ஆனது. பிரபஞ்சத்தில் உள்ள கல் மண் புல் பூண்டு மரம் செடி கொடி விலங்குகள் மனிதர்கள் பஞ்ச பூதங்கள் அனைத்தும் பிரபஞ்சத்தின் பகுதிகள். பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் சக்தி மிக்கது. மனிதனின் இயக்கமும் மனிதனின் சதியும் பிரபஞ்சத்தின் இயக்கம் மற்றும் சக்தியில் ஒரு சிறு பகுதிதான்.
எண்ணங்களுக்கு சக்தி உண்டு. மனிதன் எதைத் தீவிரமாக எண்ணுகிறானோ அதை அடைகிறான். மனிதனின் சக்தியை அவனே ஒருங்கிணைத்தால் அவன் சாதிக்கக்கூடிய வற்றின் அளவு வெகுவாக உயர்கிறது.
தனக்கு எது வேண்டும் என்பதில் மனிதனுக்குத் தெளிவு வேண்டும். அந்தத் தெளிவு முழுமை பெற்றுவிட்டால், அவன் அதை சாதிக்கிறான். தன் தேவைகளில் அவன் சற்றே சறுக்கிவிட்டால் அவன் சாதனை தள்ளிப்போய்விடுகிறது அல்லது இல்லாமல் போய்விடுகிறது.
மனிதனின் வாழ்க்கை சந்தர்ப்பங்களால் ஆனது. சில சந்தர்ப்பங்கள் நமக்கு சந்தோசம் தருகின்றன. சில சந்தர்ப்பங்கள் நமக்கு பெருந் துயரைத் தருகின்றன. இவை தவிர்த்த சந்தர்ப்பங்கள் வெறுமனே நம்மை ஓடிக்கொண்டிருக்கச் செய்கின்றன.
இந்தச் சந்தர்ப்பங்களையெல்லாம் நமக்குத் தருபவர் யார்? எங்கிருந்து இந்த நல்ல கெட்ட இடைப்பட்ட என்ற மூன்று சந்தர்ப்பங்களும் வருகின்றன. இதற்கான விடை மிக எளிது. பிரபஞ்சம் இயக்கத்தில் இருக்கிறது. அந்த இயக்கத்தின் ஓட்டமே இந்த சந்தர்ப்பங்கள்.
சரி, இந்த சந்தர்ப்பங்களை மாற்றி அமைக்க முடியுமா? நிச்சயம் முடியும். எப்படி?
பிரபஞ்சத்தைப் போலவே தானே இயங்கக் கூடிய சக்தி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் சக்திகளுக்கும் உண்டு. பிரபஞ்சத்தின் பொதுவான நீரோட்டதிலும் கொஞ்சம் தனக்கான விருப்பத்திலும் இயங்க முடியும். ஏனெனில் நாமும் பிரபஞ்சத்தின் ஒரு கூறுதான்.
நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி வேண்டிக்கொண்டால், அதாவது அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தால் நாம் அதை வென்றெடுக்கலாம். நல்ல சந்தர்ப்பம் நம்மைத் தேடிவரும். அதற்கான சக்தி நம் எண்ணங்களுக்கு உண்டு.
ஒரு திருடனுக்கு நல்ல சந்தர்ப்பம் என்பது திறந்து கிடக்கும் செல்வந்தன் வீடு. ஒரு காதலனுக்கு நல்ல சந்தர்ப்பம் என்பது அவன் காதலியின் அருகாமை. இப்படியாய் நல்ல சந்தர்ப்பம் கெட்ட சந்தர்ப்பம் என்பது ஆளுக்கு ஆள் மாறும். ஆனால் வேண்டிக்கொள்ளும் அத்தனை பேருக்கும் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகின்ற்ன.
ஆகவேதான் இறைவன் நல்லவர்களை மட்டும் காப்பாற்றவில்லை. கெட்டவன் நயவஞ்சகன் என்று எல்லோரையும் காப்பாற்றுகிறான். அவனிடம் நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடு இல்லை.
ஆனால் இந்த இடத்தில் நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஒரு கெட்டவன் பலராலும் வெகுவாக சபிக்கப்பட்டால், சபிப்போரின் எண்ணங்களின் ஒருங்கினைப்பு சக்தியாய்த் திரண்டு கெட்டவனை அழிக்கும் கெட்ட சந்தர்ப்பங்களை அவனுக்குக் கொடுத்துவிடும். அவன் அழிவான்.
பிரபஞ்சம் என்பதே இறைவன். இறைவனிடம் கையேந்தினால் அதாவது எண்ணங்களைத் தீவிரப்படுத்டி வேண்டிக்கொண்டால் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. நிச்சயமாக நீங்கள் பெற வேண்டியதைப் பெறுவீர்கள்.
இப்படி அருளும் பிரபஞ்சத்தின் மீது நீங்கள் வைக்கும் காதல்தான் பக்தி. உங்களின் பக்தி அதிகரிக்க அதிகரிக்க உங்கள் எண்ணங்களின் ஒருங்கிணைப்பு சந்தேகங்களைக் கடந்து தெளிவாய் அமைகிறது.
அதாவது நடக்குமா நடக்காத என்ற சந்தேகம் வந்தாலே அது நடக்காது அல்லது தள்ளிப்போய்விடும். அதாவது எண்ணம் சரியாக ஒருங்கிணைக்கப்படாவிட்டால் அந்த எண்ணங்களுக்குத் தோல்விதான்.
அந்த சந்தேகத்தைப் போக்குவதே பக்தி. உயர் பக்தி இருப்பின், எண்ண ஒருங்கிணைப்பு மிக இயல்பானதாக ஆகிவிடும். அதனால் பலன் நமக்குத்தான்.
மற்றபடி உண்டியலில் காசுபோடவேண்டாம். கடவுளுக்கு லஞ்சம் தரவேண்டாம். வேண்டிக்கொண்டால் மட்டுமே போதும். கடவுள் மீது பக்தி கொண்டிருந்தால் மட்டுமே போதும். பிரபஞ்சம் யாருக்கும் எவருக்கும் பாரபட்சமாய் இருப்பதே இல்லை. அதனால் அப்படி பாரபட்சமாய் இருக்கவும் முடியாது. அது அதன் இயல்பில் இருக்கிறது. நம் எண்ணங்களின் சக்தியால் மாற்றஙக்ளுக்கு உள்ளாகிறது. அவ்வளவே!
பலிகொடுப்பது, திருவிழா எடுப்பது, உண்டியலில் காசு கொட்டுவது என்ற அனைத்தும் அபத்தங்கள் என்று பிரபஞ்சத்தின் சக்தியைச் சரியாகப் புரிந்துகொண்டால் போதும், தானே நமக்குப் புரிந்துவிடும்.
நம்மிடம் பிரபஞ்சம் உண்டு. அதாவது நம்மிடம் கடவுள் உண்டு. கடலின் சிறு துளியைக் கொண்டவே கடல். பிரபஞ்சத்தின் துகள்களால் ஆனதே பிரபஞ்சம். கடலின் சக்திக்கும் துளியின் சக்திக்கும் அளவில்தான் மாற்றம். மற்றபடி சக்தி உண்டு. சக்திகள் ஒருங்கிணைந்தால் சாதனை கைகூடும். வாழ்க்கை வளமாகும்
இனி கேள்விகள் பதில்கள்:
கேள்வி:
அப்படி கையேந்தாத பட்சத்தில் இறைவனான பிரபஞ்சம் நம்மை புறக்கணித்து விடுமா
என் பதில்:
நிச்சயமாக புறக்கணிக்கவே புறக்காது. ஏனெனில் நீங்கள் பிரபஞ்சத்தின் அங்கம். இயல்பான ஓட்டத்தில் நீங்கள் நிச்சயம் இருப்பீர்கள். உங்களுக்கான சந்தர்ப்பங்கள் இயல்பான வழியில் வந்துகொண்டே இருக்கும். அவற்றிலிருந்து மாற்றம் வேண்டும் என்றால்தான் நீங்கள் ’கையேந்த’ அதாவது உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வேண்டிக்கொள்ளப்போகிறீர்கள்.
கேள்வி:
ஆதிகாலத்திலே மனிதன் இப்படிதான் கடவுள்னு சொல்லி இருக்கலாம், காலப்போக்கில் கடவுள் வழிபடாவிட்டால் இன்னது இனன்னது நடக்கும்னு சில வியாபாரக்காரர்கள் ஏமாற்றி இருக்க கூடும். தொழ வேண்டும் வணங்கவேண்டும் கையேந்தி, தலை வணங்கி என்று கூறி வருங்காலத்தினருக்கு அதை ஒரு மரபாக்கி வச்சிடக்கூடாது நீங்க கண்டுபிடிக்க போகும் புது கடவுளுக்கு.
பதில்:
புது கடவுள் பழைய கடவுள் என்று ஏதும் இல்லை :) கடவுளுக்கு பலரும் பல வரையறைகளைச் சொன்னார்கள். இதுவரை சொன்னவற்றுள் மூடுமந்திரம் நிறைய. நான் அப்படியே திறந்து வைக்கிறேன். பளிச்சென்று தெரியும்படி கூறுகிறேன். இல்லாததைக் கைகாட்டாமல் இருப்பதையே சுட்டிக்காட்டி விரல் நீட்டுகிறேன். அவ்வளவுதான். நான் கடவுளை கண்டுபிடிக்கவில்லை. உருவாக்கவும் இல்லை. இருபப்தை அறிவியல் பூர்வமாக உணர்ந்தேன். உணர்ந்ததை உஙக்ளிடம் கூறுகிறேன். வேண்டுதலும் எண்னஙகளின் ஒருங்கிணைபும் மரபு ஆகாது ஒவ்வொருவரின் தனித்தேவை ஆகும். வேண்டும் என்போருக்கு மட்டுமே அது வேண்டும். வேண்டாம் என்போருக்கு அது வேண்ட்வே வேண்டாம். அதோடு கோவில் சென்றுதான் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் என்றில்லை. இருந்த இடத்திலிருந்தே செய்ய முடியும். இல்லை எனக்கு கோவிலுக்குப் போனால்தான் மனம் ஒருநிலைப்படும் என்று எவரெனும் சொன்னால் அதை நான் தவறென்றும் சொல்லப்போவதில்லை. எப்படி என்ன நடக்கிறது என்பதை அறிந்து அதன் படி செய்தால் மூட நம்பிக்கைகளை முற்றாகக் களைந்துவிடலாம்.
கேள்வி:
உங்களுக்கான சந்தர்ப்பங்கள் இயல்பான வழியில் வந்துகொண்டே இருக்கும் என்றால் கிட்டத்தட்ட விதி போலவா?
ஆமாம் அதுபோலத்தான். ஆனால் ஒரு வித்தியாசம். விதி என்பது முன் செய்த பாவம் புண்ணியம் என்பார்கள். அதெல்லாம் இல்லை. விதி என்பது பிரபஞ்சத்தின் இயக்கவிதி. அதை நாம் அறியமாட்டோம். பிரபஞ்சத்திடம் கேள்வி கேட்டால் அது பதில் சொல்லாது :) நாம் வளர்ந்து வளர்ந்து ஒருநாள் கண்டுபிடிக்கக் கூடும்!
கேள்வி:
விதியிலிருந்து மாற்றம் வேண்டும் என்றால்தான் நீங்கள் ’கையேந்த’ அதாவது உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி வேண்டிக்கொள்ளப்போகிறீர்கள்.. என்றீர்கள். ஆனால் வேண்டினால் கிடைக்குமா?.. பலருக்கு கிடைக்கவில்லையே.. அவர்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வது?.. நம்பிக்கை சிதந்தால் வாழ்வே சிதையுமே..?
பதில்:
வேண்டினால் நிச்சயம் கிடைக்கும். ஆனால் வேண்டிக்கொள்வதில் அறிவு வேண்டும். தீர்க்கமான ஒருங்கிணைப்பு வேண்டும். எனக்கு நிலாவை அப்படியே வாயில் இட்டு மிட்டாய் மாதிரி சாப்பிடவேண்டும் என்று ஒருவன் வேண்டிக்கொண்டால் அதில் அறிவில்லை. கிடைத்தால் நல்லது கிடைக்காட்டி பரவாயில்லை என்று ஒருவன் வேண்டிக்கொண்டால், அதில் தீர்க்கமான ஒருங்கிணைப்பு இல்லை.
இதனால்தான் பலருக்கும் கிடைப்பதில்லை. சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் அவர்கள் கேட்காமலே கிடைக்கும். அது என்ன? அது பிரபஞ்சத்தின் இயல்பான இயக்கம். அது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சில்ருக்கு துரதிர்ஷ்டமாகவும் ஆகிவிடுகிறது. நம்பிக்கை சிதைவதற்கு தான் தான் காரணம் என்பதை நான் சொல்லும் நிலைப்பாட்டை உள்வாங்கிக்கொண்டால் வேண்டிக்கொண்டவனால் புரிந்துகொள்ள முடியும்.
கேள்வி:
எப்படி வேண்டணும்?
பதில்:
எண்ணத்தின் ஒருங்கிணைப்பு. அதீத நம்பிக்கையோடு சிதையாத தேடலோடு ஒரு மாறாத வேண்டுதல். தொடர்ந்த நிறுத்தப்படாத வேண்டுதல். தவம்போல. வேண்டியது கிடக்கும்வரை விடவே விடாத தீவிர வேண்டுதல்.
கேள்வி:
அப்ப நியாயமற்றதாகிடுதே.. எனக்கு கிடைத்ததெல்லாம் நான் அப்படித்தான் சொல்லுவேன்.. பிறப்பிலிருந்தே அதிர்ஷ்டம்தான் .. அப்ப எனக்கும் சோமாலியா குழந்தைக்கும் நியாயமற்ற ஒரு நீதியா?
பதில்:
ஆமாம். பிறக்கும் இடம், பிறந்த வருடம் தேதி நேரம் எல்லாம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கி இருக்கிறது. நீங்கள் நல்லவர் நிறைய புண்ணியம் செய்திருக்கிறீர்கள் என்றெல்லாம் நினைத்து வழங்கப்படவில்லை. பிரபஞ்சத்தின் இயல்பான இயக்கத்தில் நீங்கள் அந்த அதிர்ஷ்ட பகுதியில் இருக்கிறீர்கள். சுனாமி, கொடிய நோய்கள், பூகம்பம், நிலநடுக்கம், வெள்ளம், எரிமலை, வறட்சி என்று எத்தனையோ துரதிர்ஷ்டம் இருக்கின்றதே. அவற்றுக்கான காரணம் என்ன? அவை பிரபஞ்சத்தின் இயக்கவிதிகளே அன்றி வேறொன்றுமில்லை. பிறந்த குழந்தை ஒரு பாவமும் செய்யாமலேயே செத்துவிடுகிறது. ஏன்? பிரபஞ்சத்துக்கு நம் நியாய தர்மங்களெல்லாம் அவசியமற்றது. அது அதன் செய்ல்பாட்டில் இருக்கிறது. அது உங்களுக்கு பலனையோ பாதிப்பையோ தருகிறது.
கேள்வி:
மரண நெருக்கடியிலும் மனிதன் மரணிக்க மறுக்க காரணம் , நம்பிக்கையா இல்லை பயமா?
பதில்:
இரண்டும்தான். பிரபஞ்ச நியதிப்படி வரும் மரணத்தை அவனால் ஒத்திப்போடவும் முடியும். அதற்கு அவனின் அறிவும் மிகுந்த நம்பிக்கையும் கொண்ட வேண்டுதல்களே காரணம். இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். அவன் மரணம் அவன் எண்ணத்தின் ஒருங்கிணைப்பால் மட்டுமல்ல அவனுக்காக தங்களின் எண்ணங்களை ஒருங்கிணைக்கும் அனைவராலும் நிகழும். நாம் பிறருக்காக வேண்டிக்கொள்ள முடியும். குழு பிரார்த்தனை எல்லாம் அப்படித்தான் பலன் தருகிறது. மதங்களில் சொல்லப்பட்ட நிறைய விசயஙக்ள் அப்படியே சரி. ஆனால் விளக்கம்தான் சரியாகத் தரப்படவில்லை. எல்லாம் அவன் செயல் என்பது அப்படியே உண்மை. ஆனால் அது எப்படி அவன் செயல் என்பதை நாம் புரிந்துகொண்டால் போதும்.
கேள்வி:
மாற்றங்களுக்கு இந்த பிரபஞ்சமே உட்படுகிறதா அல்லது நமது சிந்தனையின் ஊடே நாம் ஒரு புதிய பிரபஞ்சத்தை உருவாக்கிக் கொள்கிறோமா? நமது மனத் திரையில்…
பதில்:
பிரபஞ்சம் மாற்றத்தை அடைகிறது. பிரபஞ்சத்தின் மாறாத நியதி என்னவென்றால் அது எப்போதும் மாற்றங்களைக் கொண்டிருப்பதுதான். ஒவ்வொரு நொடியும் மாற்றஙக்ள் நிகழ்கின்றன. மாறும் மாற்றஙக்ளை நம் விருப்பத்திற்கு சற்றே வளைத்துக்கொள்கிறோம்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்
என்றார் வள்ளுவர். மயில்தோகைதானே என்று அதை அதிகம் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும் என்று பொருள் சொல்வார் சாலமன் பாப்பையா. இதையே நமக்கு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். நாம் இந்த பிரபஞ்சத்தில் மயிலிறகின் ஒரு சிறு முடியைவிட பலப்பலமடங்கு சிறியவர்கள். ஆனால் நம் எண்ணங்களோ மிகவும் வலிமை கொண்டவை. ஆனாலும் பிரபஞ்சத்தின் வலிமைக்கு அவை மிகச் சிறியதுதான் என்றாலும் அந்த எண்ணத்தை ஒருங்கிணைக்க ஒருங்கிணைக்க தொடர்ந்து நிலைதிருத்த இந்தப் பிரபஞ்சத்தில் நம் பகுதி மாறும். ஒரு நல்ல வாய்ப்பு வந்து கதவு தட்டும். அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளவேண்டியதுதான். பிரபஞ்சம் மாறுகிறது. நம்மால் அதை மாறியமைக்க முடியும்!
கேள்வி:
மனதை ஒருங்கிணக்க சொன்னீர்கள்.. அதுக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட மத வழிபாடு உதவலாம் என்பது என் எண்ணம்.. அது போல கூட்டு பிரார்த்தனை சர்ச், கோவில்களில் நடப்பதும் ஒன்றுகிறது..
பதில்:
மனிதம் வளர்க்கும் எதுவும் பிழையென்றில்லை. நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. ஆனாலும் பிழையான கருத்துக்களை கடவுளுக்குச் சூடுவது பிழை. அதனால் கோபப்பட்டு அவர் ஒன்றுமே செய்யமாட்டார். நஷ்டம் நமக்குத்தான்! சரியான அறிதல் இல்லாவிட்டால் நம் எண்ணங்கள் திசைமாறும். அதை பெரிய சக்தியின் முன் இழுத்துச் செல்வதும் நிலை நிறுத்துவதும், சந்தேகங்களற்ற நிலை கொள்ளுவதும் நமக்கு நல்லது. அது மூட நம்பிக்கைகளை, தவறான வழிபாடுகளை, பலிகளை, உண்டியலை, பாலூற்றுவதை என்ற பல காரியங்களை தவறென்று புரியவைத்து நம்மை சரியான திசையில் இறவனின் மடிகளில் அவன் சாதக இயக்கத்தில் கொண்டு சேர்க்கும்.
கேள்வி:
வேண்டுதல் என்பது நமது எண்ணங்களை, அதாவது எதை பற்றி நாம் எண்ணுகிறோமோ அதை வலுபடுத்த, திரும்ப திரும்ப வேண்டுவது. இதைதான் சிலர் நினைத்தால் கோவில் சென்று வேண்டுகிறார்கள், சிலர் வாரம் ஒரு முறை வேண்டுகிறார்கள், சிலர் வீட்டில் காலை மட்டும், சிலர் காலையும் – மாலையும் வேண்டுகிறார்கள் ஆனால் இன்னும் சிலர் ஒரு நாளைக்கு ஐந்து முறை வேண்டுகிறார்கள். வேண்டுதலில் வலிமை இருப்பின், நினைத்த காரியம் கைகூடும். இதைதானே சொல்லி இருக்கிறீர்கள்
பதில்:
ஆமாம், மனித சக்தி மகத்தானது. உடல் சக்தியைவிட எண்ணஙக்ளின் சக்தி பல்லாயிரம் மட்ஙகு உயர்ந்தது. அதை முறைப்படி பயன்படுத்தினால் எண்ணம்போல் வாழலாம். ஒவ்வொரு மதமும் வேண்டுதல் என்று வரும்போது அதை வலியுறுத்தவே செய்யும். அதற்கான காரணம் இதுதான். உன்னையே நீ அறி. உன் சக்தியை நீ உணர். உன்னை நீ உருவாக்கு! அதற்கு எண்ணங்களின் நிலையான ஒருங்கிணைப்பு மிக அவசியம்.
கேள்வி:
வீட்டுக்குள் உட்கார்ந்துக்கொண்டு எம்.எல்.ஏ ஆகனும்னு வேண்டுனா முடியுமா? வேண்டுதல் வேலைக்கு ஆகாத ஒன்று.
பதில்:
மிக நல்ல கேள்வி. வேண்டுதல் என்றால் என்ன? அப்துல் கலாம் மிக எளிமையான முறையில் “கனவு காணுங்கள்” என்றார். உடனே சிலர் படுக்கையைத் தட்டிப்போட்டுப் படுக்கப்போய்விட்டார்கள் :) அதுவா கனவு காண்பது? நீங்கள் ஒரு விசயத்தை வேண்டிக்கொள்கிறீர்கள் என்றால் அதன் பொருள் என்ன? நீங்கள் ஏற்கனவே அதற்கான முயற்சியில் இருக்கிறீர்கள் என்றுதானே பொருள்! அந்த தேவை உங்கள் உடல் உணர்வு உயிர் என்று அனைத்திலும் நீங்காமல் இருக்கிறதென்றுதானே பொருள். அப்படி அது இருந்தால் உங்கள் முயற்சி அதன் தொடர்பாக எப்படி இருக்கும்? பிறகு வேண்டுதல் இங்கே எதைச் சாதிக்கிறது? அயராத ஊக்கமுடன் அவன் தன் தேவைக்காகப் போராடுகிறான். எனவே வெற்றி பெறுவான். இடையில் வேண்டுதல் என்ன வேண்டிக்க்கிடக்கிறது என்று கேட்கலாம். நாம் ஒரு திசையில் பயணப்படும்போது நமக்கு நம் உடல் சக்தி உணர்வுகளின் சக்தி எண்ணங்களின் சக்தி உயிரின் சக்தி என்று எல்லா சக்தியும் தேவைப்படுகிறது. எண்ணஙக்ளின் ஒருங்கிணைப்புச் சக்தியை அருள்வதுதான் வேண்டுதல்கள். மனதை ஒருநிலைப்படுத்தி தன் தேவையைத் தெளிவாக வரையறுத்துக்கொள்ளுதல் எதனையும் சாதிப்பதற்கான அவசியம் ஆகும். “வேண்டுதல் வேண்டுமா?” என்ற என் சிறு கட்டுரை ஒன்றை யும் என் வலைப்பூவில் பாருங்கள்.

தொகுப்பு:
http://anbudanbuhari.blogspot.com
நன்றி உங்களுக்கு;”அன்புடன் புகாரி

 

Wednesday, August 4, 2010

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகுப்பு

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகுப்பு

அன்பு சகோதரர்களே, கல்வி விழிப்புணர்வு சம்பந்தமாக நம் அதிரை நிருபரில் “கல்வி விழிப்பு உணர்வும் முஸ்லிம்களும்”                                என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது நினைவிருக்கும்.             அந்த கட்டுரையின் பின்னூட்டத்தில் நம் சகோதரர் ஷரபுதீன் அவர்கள் “இயக்கங்களை தவிர்த்துவிட்டு அதிரை நிருபரும் அதன் வாசகர்களும் சேர்ந்து நமது ஊர் இளைய சமுதாய முன்னேற்றத்திற்கு எதாவது செய்வோம். அடுத்த கல்வியாண்டின் நுழைவுத்தேர்வில் நமது மக்களை சிறந்த போட்டியாளர்களாக உருவாக்குவோம்.” என்று நம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்கள் என்பது நம் அனைவருக்கும் நினைவிருக்கும். இது சம்பந்தமாக இணையத்தில் ஏதாவது நல்ல விசயங்கள் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்த நேரத்தில் சகோதரர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களிடமிருந்து ஒரு மடல் வந்தது, அதில் “CARREER and JOB” சம்பந்தமாக மிக அற்புதமான விடியோ சொற்பொழிவு சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D.  அவர்களால் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. நிச்சயம் இது மிக பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இந்த வீடியோக்களை மிக கவணமாக அனைவரும் கேளுங்கள்.

சகோதர் சரபுதீன் அவர்களும் நல்ல திட்டங்கள் இருப்பதாக நமக்கு மடல் இட்டார்கள், இந்த வீடியோ தொகுப்பு நல்ல பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்ப்பார்கிறோம்.

பகுதி - 1


பகுதி - 2



பகுதி - 3

பகுதி - 4

பிடிந்திருந்தால் பின்னூட்டமிடுங்கள். தயவு செய்து இந்த வீடியோக்களை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள், முடிந்தால் இதை தரவிரக்கம் செய்து உங்கள் வீடுகளுக்கு அனுப்பிவையுங்கள்..


சமூக நோக்கத்துடன் இந்த பயனுள்ள செற்பொழிவை நமக்கு தந்த சகோதரர் Dr. M.I. Sayed Mohamed Buhari M.E.,Ph.D. அவர்களுக்கு மிக்க நன்றி.  அவர்களுக்காக நாம் துஆ செய்வோம்.
தகவல்: முதுவை ஹிதாயத்
Source:http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_05.html

LinkWithin

Related Posts with Thumbnails