Tuesday, April 25, 2017

இஸ்லாமிய தீவிர வாதம் என்றால் என்ன?

Vavar F Habibullah 
இஸ்லாமிய தீவிர வாதம் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே தீவிர வாதிகளாய் மாற காரணம் என்ன? என்னோடு நேசத்தோடு, பாசத்தோடு, அன்போடு, அபரிதமான வாஞ்சையோடு பழகிக் கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான ஹிந்து, கிருத்துவ நண்பர்களின கேள்வித்தான் இது.
வைதீக ஹிந்து குடும்பங்களின் பூஜை அறைகளில் கூட என்னை அநுமதித்த ஹிந்து குடும்பங்கள் உண்டு, அதை பெருமையாக கருதியதும் உண்டு.எம்.ஜி.ஆர். அவர்களின் நண்பரும், அவர் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராகவும் இருந்த என் அருமை நண்பர் மறைந்த திருச்சி. சவுநதரராஜன் அவரகளுடன் பலமுறை காஞ்சி சங்கராச்சாரி சுவாமிகளையும் சந்தித்து இருக்கிறேன். முழுமையாக இஸ்லாத்தைப் பற்றி தெரிந்தவர் சுவாமிகள். ஒரு முஸ்லிம் என்பதாலேயே என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும்.ஒரு முறை என் அன்பு நண்பர் மறைந்த DR.ஜெயசீலன் மத்தியாஸ் அவர்களுடன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிறுவனர், திரு.இராமசாமி உடையார் அவர்களை அவரது அலுவலக அறையில் சந்தித்த போது, ஒரு பெரிய பிரேம் போட்ட படம் என் கண்ணில் பட்டது. சமீபத்தில் மறைந்த திரு. பி.எஸ்.எ.றஹ்மானின் படம் தான் அது. "என் முதலாளி அவர், என்று கண்களில் நீர் மல்க உடையார் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை பல முறை நான் சந்தித்ததுண்டு. அவர் என்னிடம் ஒரு முறை வேடிக்கையாகச் சொன்னார்.
"என்னவோ டாக்டர் சார், எனக்கு முஸ்லிம் உடை அணிந்த வேடமே நன்றாக எடு படுகிறது." ஒரு படத்தில், " மேரா நாம் அப்துல் ரகுமான் என்று நான் பாடுவது கூட என் பழைய முதலாளி கிரஸெண்ட் மூவிஸ், பி.எஸ்.எ. ரகுமானை நினைத்துத் தான்". ஒரு குழந்தையைப் போல் MGR என்னிடம் சொன்ன ரகசியம் இது.
இப்படியான சகோதர பாசத்தோடு பழகி வரும் இந்த நாட்டில், அதுவும் தமிழ் நாட்டில், முஸ்லிம்கள் உள்ள படியே " தீவிரவாதிகள் தானா" ? தீவிரவாதம் இவர்களால் தான் தீவிரம் அடைகிறதா? இதுதான் இன்று நம் முன் நிலை பெறும் வாதம்.
முஸ்லிம்களின் வேத நூலான "குர்ஆன்" தீவிர வாதத்தைப் பரப்புகிறதா? அல்லது முகமது நபியின் அறிவுரைகள் தீவிரவாதம் வளர துணைப் புரிகிறதா?இதுதான் இந்த வாதத்தின் அடிப்படைக கேள்வி.
குர்ஆன் விளக்கும் ஐந்து முக்கிய கடமைகள் இறைவன் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கைக் கொள்வது, ஐந்து நேரம் தொழுவது, நோன்பு அல்லது விரதம் மேற் கொள்வது, தன் லாபத்திலிருந்து சிறு பங்கை தர்மம் செய்வது, ஹஜ்ஜை நிறைவு செய்வது
இதைத் தான் ஒவ்வொரு முஸ்லிமும் கடை பிடிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த செயல்கள் தான் இஸ்லாத்தின் பக்கம் மக்களை ஈர்க்க இன்றும் துணை புரிகிறது.
இப்படியான நல்ல கொள்கைகளுக்கு, சொந்தக் காரர்கள் எப்படி தீவிரவாதிகளாய் மாற இயலும். தமிழ் நாட்டைப் பொருத்த வரை 80 சதவீத முஸ்லிம்கள், தி.மு.க. அமைப்பைச் சார்ந்தவர்வர்களாகவே இருக்கிறார்கள். இவர்களிடம் எந்த வித ஜாதி மத பேதங்களில்லை. அதுபோலவே திராவிட கட்சிகளின் பிண்ணணியில் உள்ள முஸ்லிம் களிடமும் ஜாதி மத பாகுபாடுகளில்லை.
அண்ணண் தம்பி உறவாகவே இவர்கள் நட்பு இன்று வரை நீடிக்கிறது.தமிழ் நாட்டைப் பொறுத்த வரை, நான் அறிந்த வரை, முஸ்லிம்கள் பிற மதத்தினரை மதிக்கும் குணமுடையவர்களாகவே திகழ்கின்றனர்.
பிற மத நண்பரகளை தங்கள் வீட்டு நிகழ்ச்சி களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு சுவை யான உணவு பதார்த்தங்களை, மனம் குளிர
பறிமாறி, அவர்களை அகமும் முகமும் மலர கெளரவித்து மகிழ்வதில் முஸ்லிம்களுக்கு நிகர் முஸ்லிம்களே என்று மாற்று மதத்தினரும் வியந்து புகழும் அளவுக்கு,
விருந்தோம்பலில் சிறந்தவர்கள் முஸ்லிம்கள். இவ்வளவு நல்ல மனம் கொண்டவர்கள் உண்மையிலேயே தீவிர வாதிகள் தானா? அதுவும் தமிழ் நாட்டில்..
அப்பாவி குழந்தைகளைக் கொல்வது, பொது இடங்களில் குண்டு வைப்பது, உயிர்களை வதைப்பது இவை அனைத்தும் இஸ்லாத்திற்கு புறம்பான செயல்கள். இந்த இழிவான செயல்களை இவ்வாறு திட்டமிட்டு செய்பவன் நிச்சயமாக பொறுப்பான ஒரு நல்ல முஸ்லிமாக இருக்க முடியாது.
காரணம் இது போன்ற இழி செயல்களைச் செய்வதற்கு முகமது நபி போதிக்கவில்லை.
மக்கா மாநகரில் வெற்றி வேந்தராக நுழைகின்ற மாநபி அவர்கள் அங்கு குழுமி இருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்து ஆற்றிய " வரலாற்றுப் பேருரை" இஸ்லாத்தின் மாண்பையும், கண்ணியத்தையும், அதன் தூய்மையையும்,கட்டிக் காக்க நினைக்கும் ஒவ்வொரு இஸ்லாமிய இளைஞனுக்கும், இந்த இக்கட்டான நிலையில் நல் வாழ்க்கை
பாடமாக அமையும் என்று நான் கருதுகிறேன்
எப்படி ஒரு முஸ்லிம் மற்றவருக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும், எப்படி பிற உயிர்களை பேணிப் பாது காக்க வேண்டும்,
மனித குலத்தை மேம்படுத்த எந்த நற்காரியங்களைப் புரிய வேண்டும்.
முகமது நபி அவர்கள் அன்று உரைத்த
பொன்னுரையை, இன்று கடைப்பிடித்தால்
அமைதியும், ஆன்மீகமும் கலந்த கலவையாய் மனிதன் மாறி விடுவான்
என்பது திண்ணம்.

Vavar F Habibullah 
https://www.facebook.com/dr.habibullah/videos/10203422732797504/?pnref=story

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails