Showing posts with label வீடு கட்ட மனை. Show all posts
Showing posts with label வீடு கட்ட மனை. Show all posts

Thursday, October 28, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 5

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )

வளைகுடா நாடுகளுக்கு வந்திருக்கும் சகோதரர்களிடம் தாயகத்தில் உள்ள உறவினர்கள் எத்தனை வகைகளில் எதற்கெல்லாம் கடன் கேட்கிறார்கள்.

â வீடு கட்டப்போகிறேன் அல்லது கட்டியவீடு பூர்த்தியாகவில்லை பணம் அனுப்பி வை.

â            நான் கடை வைக்கப்போகிறேன் பணம் குறைகிறது உன்னால் முடிந்தததை உடன் அனுப்பி வை.

â        வீடு கட்ட மனை இல்லை மனைக்கு முன்தொகை கொடுத்து விட்டேன். பாக்கி பணத்தை கொடுத்து பத்திரம் முடிக்க வேண்டும் அதனால் உடன் தாமதம் இல்லாமல் பணம் அனுப்பி வை.

â        பிள்ளையை காலேஜில் சேர்க்க பணம் வேண்டும் உன்னை நம்பித்தான் இருக்கிறேன் உடன் பணம் அனுப்பி வை.

â        எல்லா நகையும் பேங்கில் அடகு வைத்து விட்டேன். ஏல நோட்டீஸ் வந்து விட்டது. நீ பணம் அனுப்பி வைக்காவிட்டால் என் நகைகளை இழக்க நேரிடும். அதனால் உடன் பணம் அனுப்பி வை.

இப்படி உறவினர்கள் மூலம் வளைகுடா சகோதரர்களுக்கு ஏகப்பட்ட கடன்கள் கேட்டு தொலைபேசி வருகிறது. இதில் நியாயமான கடன் எது என்று தங்களுக்கு புரியும் இதற்கு உதவலாம். திருப்பி அடைக்கும் வழியே தெரியாமல் கடன் வாங்கி தன் தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும்.

இங்கு வந்துள்ள சகோதரர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக ஊரில் உள்ளவர்கள் நினைத்துக்கொண்டு கடன் கேட்கிறார்கள். நாம் கேட்கும் தொகையை எப்படி ஏற்பாடு செய்வார்கள் என்ற நினைப்பும், இப்படி கேட்டு வாங்கும் கடனை நாம் எப்படி திருப்பி அடைப்போம் என்ற சிந்தனையும் இல்லாமல் கேட்கிறார்கள். இதில் வாங்கிய கடனை அடைக்காமல் இருந்து விடுவோமா? என்ற கோபமான பதில் வேறு. எந்த சிந்தனையும் இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றவர்களிடம் நிறைய இருக்கும் என்ற நினைப்பில் கடன்களை கேட்டு விடுகிறார்கள்.

சகோதரர்களே அவசிய, அத்தியாவசிய கடன் என்ன தெரியுமா? வயிற்று பசியும், மருத்துவ செலவும், தங்க இடம் இருந்தும் வானம்  பார்த்த பூமியாக இருந்தால் ஓடோ அல்லது கூரையோ போட்டுக்கொள்ள வாங்கும் கடன்களை சொல்லலாம். (இதோடு கல்வி கடன்களையும் சேர்த்துக்கொள்ளலாம்). இதுவும் நம்மிடம் விற்று பணமாக்க எந்த பொருளும் இல்லாத நிலையில்தான் வாங்க வேண்டும்.

ஆடம்பர கடன் எது தெரியுமா?

வீடு இருக்கும்பொழுது அதை மேலும் தேவையில்லாமல் ஆடம்பரமாக கட்டுவதற்கு கடன் வாங்குவது. மார்க்கத்தில் இல்லாத காரியங்களை வழிவழியாக முன்னோர்கள் செய்து வந்தார்கள் என்ற காரணத்தால் நாம் செய்யாவிட்டால் ஊர்வாசிகள் என்ன சொல்லுவார்களோ??? நம் கௌரவம்??? குறைந்து விடுமே என்று எதற்கெல்லாம் கடன் வாங்குகிறோம். சுன்னத் செய்வதற்கு, குழந்தைக்கு காது குத்துவதற்கு, பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்து விட்டால் பூப்பெய்து நீராட்டு விழா என்று நடத்த, பிள்ளை பிறந்தால் பெயர் வைக்க ஒரு விழா நடத்துவதற்கு என்று இதுபோல் பல ஆடம்பர காரியத்திற்காக கடன் வாங்குகிறோம்.  இவைகள் அனைத்தும் அவசியமில்லாத ஆடம்பர கடன்கள். சகோதர சகோதரிகளே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.

சகோதரிகள் வாங்கும் கடன்கள் :

சகோதரிகளே! தாங்கள் வாங்கும் கடன்களைப் பற்றித்தான் இனி அலசப்போகிறோம். கவனமாக படியுங்கள். குடும்பத்தில் ஏற்படும் அனைத்து காரியங்களுக்கும் சிக்கனம் என்றாலும், வீண் விரயம் என்றாலும் குடும்பத்தலைவியே முழு பொறுப்பாளியாவார். ஆண்களை கடன் வாங்கும் சூழ்நிலைக்கு விரட்டுவதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிறைய இடங்களில் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். சகோதரிகளின் வீண் விரயங்களைப் பற்றி ஒவ்வொன்றாக பார்ப்போம்.

புதிய நகை :

நகைகளில் ஒரு டிசைனை பார்த்து விட்டால் உடனே அதுபோல் செய்து போட வேண்டும் என்று தன்னிடம் இருக்கும் நல்ல நகைகளையே, நகை கடையில் கொடுத்து புதிய டிசைன் செய்கிறார்கள். இதற்கு ஆகும் சேதாரம், நாம் கொடுக்கும் நகையில் அவர்கள் கழிக்கும் சேதாரம், பிறகு கூலி. (கூலி கூட குறைவாகத்தான் இருக்கும் காரணம் சேதாரத்தில் நகை கடைக்கு ஒரு தொகை கிடைத்து விடும்). இப்படி இதில் நிறைய வீண் விரயம் உள்ளதே என்று நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் அன்று குடிசையில் பத்தர் கடை என்று வைத்திருந்தவர்கள் இன்று பங்களா கட்டி பெரிய நகை கடையே வைத்திருக்கிறார்கள். சகோதரிகளே நீங்கள் இருந்த இடத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் நிமிடத்தில் புதிய நகைகளை செய்து விடுகிறீர்கள். தங்கள் குடும்பத்தின் ஆண்கள் எத்தனை சிரமப்பட்டு (பாலைவனத்தின் வெயிலை தலையில் சுமந்து) இந்த பணத்தை எப்படி சம்பாதித்து இருப்பார்கள் என்பதை ஒரு நாளாவது சிந்தனை செய்து பார்த்து இருப்பீர்களா? அவசியத்திற்கு நகைகள் செய்தாலும் கவனமாக இருங்கள். ஆடம்பரத்தை அறவே தவிர்த்து விடுங்கள். வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுவதை மனதில் வைத்து செயல்படுங்கள்:

... உண்ணுங்கள் பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் : 7:31)

நகை கடன் :

நகைகளை வங்கியிலும், அடகு கடையிலும் வைக்கும் எனதருமை தாய்மார்களே! சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்! எதற்காக மாதா மாதம் நகைகளை எடுத்துக்கொண்டு வங்கிக்கும், அடகு கடைக்கும் ஓடுகிறீர்கள் பசிக் கொடுமையா? அல்லது மருத்துவ செலவுக்கா? (இதற்காக சில பேர் அடகு வைக்கலாம்)  பெரும்பாலும்  வெளிநாட்டில் இருக்கும் குடும்ப ஆண்களிடம் இருந்து பணம் வர தாமதமானாலும் மற்றும் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விதமான ஆடம்பர காரியங்களுக்காகவும், மனை வாங்கி போடவும், இன்னும் வெளிநாடு செல்லாமல் இருக்கும் வீட்டில் உள்ள ஆண்களுக்கு விஸா வந்து விட்டது உடனே பணம் கட்டியாக வேண்டும் என்று இது போன்ற பல காரியங்களுக்காகத்தானே செல்கிறீர்கள்.

வங்கியின் நிலைபாடு :

வங்கிக்கு உங்களுடைய நகைகளை எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். உங்களுடைய பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு நீங்கள் எத்தனை சிரமங்களை வங்கியின் ஊழியர்களால் அனுபவிக்க நேரிடுகிறது. அந்த மேஜைக்கு செல், இந்த மேஜைக்கு வா, பத்தர் வர வேண்டும் நகை அசலா என்று பார்க்க, நீங்கள் கேட்ட தொகை அதிகம் தரமுடியாது. இப்படி வங்கியின் அலட்டல் அதிகமாகத்தான் உள்ளது.

உங்களின் சொந்த பொருளை வைத்து பணம் வாங்குவதற்கு இலவசமாக உங்களுக்கு பணம் தருவதாக நினைத்துக் கொண்டு வங்கியும், வட்டி கடையும் போடும் நிபந்தனைகளுக்கும், ஆட்டங்களுக்கும் நாம் அடிபணிந்து பணம் வாங்க வேண்டுமா? சிந்திப்பீர்களா சகோதரிகளே! (இங்கு சகோதரர்களும் சிந்திக்க வேண்டும். பெண்கள் படும் சிரமங்களை நேரில் நீங்கள் கண்டால் வேதனையடைவீர்கள்.) (என் கணக்கில் பணம் எடுக்கச் செல்லும்பொழுதெல்லாம் இதை நேரில் பார்த்து வேதனையடைவேன். என் உறவினர்களை மட்டும் கண்டித்து நகையை அடகு வைக்க வங்கிற்கு வருவதை (சாதக பாதகங்களை கூறி) தவிர்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். தீமையை கண்டால் தடுப்பது நமது கடமை. தீமையிலிருந்து விலக அவர்கள்தான் முயற்சி செய்ய வேண்டும்).
இவ்வளவு சிரமங்களையும் அனுபவித்து வட்டிக்கு பணம் வாங்குகிறீர்கள். வட்டி வாங்குவது மட்டும் பாவமில்லை, கொடுப்பதும் பாவம்தான் என்பதை அறியாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நாங்களா வட்டி? வாங்குகிறோம் எங்கள் அவசரத்திற்கு கடன் தர யாரும் இல்லை. அதனால் எங்கள் நகையை வைத்து பணம் வாங்குகிறோம். வங்கியில் நகையை வைத்துக்கொண்டு சும்மா கடன் தருவானா வட்டி கட்டத்தானே வேண்டும். நாங்கள் வட்டி வாங்கினால்தானே பாவம். வட்டியை கொடுக்கத்தானே செய்கிறோம். என்று நிறையபேர் நியாயம் பேசி வருகிறார்கள். இதில் ஐந்து வேளை தொழுபவர்களும், ஹஜ்ஜூக்கு போய் வந்தவர்களும் இது ஒன்றும் பெரிய பாவம் கிடையாது என்று சொல்லி வருகிறார்கள். (ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த பதில்தான் கிடைக்கும்). இதற்கு காரணம் மார்க்கம் என்ன சொல்கிறது என்ற அறியாமைதான்.

வட்டியை உண்பவரையும், அதை உண்ணக் கொடுப்பவரையும், அதற்காக எழுதுபவரையும், அதற்கு சாட்சி சொல்பவர்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்து விட்டு, 'அவர்கள் (குற்றத்தில்) சமமானவர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி),புகாரி பாடம்: 24)

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வட்டி வாங்கினால்தான் பாவம் என்று இல்லை. தாங்கள் வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்தி வங்கி அல்லது தனியார் வட்டிகடைகளின் வியாபாரம் பெருகுவதற்கு தாங்களே உதவியாக இருந்தாலும் பாவம்தான். அப்படி என்றால் என்னதான் வழி என்று கேட்கிறீர்களா? நல்ல வழி ஒன்று உள்ளது. தங்களுக்கு தவிர்க்க முடியாத மிக மிக அத்தியாவசிய செலவுகள் என்று வரும்பொழுது (ஆடம்பர செலவு இல்லை) தங்களின் நகைகளை விற்று விடுங்கள். என்ன?????? நகையை விற்றால் வாங்க முடியுமா????? அடகு வைத்தாலாவது நம் நகை அடகில் இருக்கிறதே என்று நிம்மதியாக இருப்போம். சிறிது சிறிதாக பணத்தை செலுத்தி நகையை திருப்பி விடுவோம். விற்று விட்டால் வாங்க முடியுமா? என்று சொல்ல வருகிறீர்கள். (பல நேரங்களில் அடகு வைத்த நகையை வாங்கமுடியாமலே பறி கொடுத்துவிடுகிறோமே இதைப்பற்றியும் சிந்தித்து பாருங்கள்).

வட்டி கொடுப்பதும், வாங்குவதும் பாவம் என்று தெரிந்த பிறகு தங்களின் உலக லாபங்களுக்காக நகைகளை அடகு வைத்துக்கொண்டே இருப்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்: மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனை கடினமாக இருக்கும். இம்மையிலும் சோதனை ஏற்படும். மேலும் தாங்கள் வட்டிக்கு வைத்து வாங்கும் பணத்தைக் கொண்டு செலவழிக்கும் எந்த காரியத்திலும் பரக்கத் (அபிவிருத்தி) இருக்காது.


உதாரணத்திற்கு நமக்கு தேவை ஒரு லட்சம். இதற்கு வங்கியில் இரு மடங்கு மதிப்பு உள்ள நகையை அடகு வைக்க வேண்டும். இப்பொழுது என்ன செய்யலாம் சிறிய நகையாக இருந்தால் சில நகைகள் பெரிய நகையாக இருந்தால் ஒரு நகையை விற்றால் நமக்கு தேவைப்படும் பணம் ஒரு லட்சமும் கிடைத்து விடும். மேலதிகமான பணத்திற்கு ஒரு சிறிய நகையும் வாங்கி விடலாம். நமது பணத்தேவையும் தீர்ந்து விடும். நகைக்கு வட்டி கட்டும் பாவத்திலிருந்தும் விடுதலை. நகை ஏலம் போவதிலிருந்தும் நகை பாதுகாக்கப்படும். மேலும் எந்த கஷ்டத்திலும் வட்டியின் பக்கம் நெருங்க மாட்டேன் என்று முடிவெடுத்து அவசர தேவை வரும்பொழுது நகைகளை விற்று நம் காரியங்களை நிறைவேற்றினால் இதில் கிடைக்கும் நிம்மதியும், பரக்கத்தும் தங்களுக்கு தெளிவாக புரியும். சோதனை முயற்சியாக செய்து பார்க்கலாம்.


இரவல் நகை கடன் :

சில பெண்கள் தங்களின் தேவைகளுக்கு அடகு வைக்கமாட்டார்கள். ஆனால் உறவினர்கள், தெரிந்தவர்கள் இரவலாக நகை கேட்டால் (கணவரிடம் கூட அனுமதி வாங்காமல்) உடனே எடுத்து கொடுத்து விடுவார்கள். நாம் வங்கியில் அடகு வைக்கவில்லையே என்ற நிம்மதி வேறு. (கொடுத்த நகையை திருப்பி வாங்க பெரிய போராட்டமே நடக்கும்).

அடகு வைப்பதற்காக இரவல் நகை கொடுக்கும் சகோதரிகளே தெரிந்து கொள்ளுங்கள்: தாங்கள் வைக்காவிட்டாலும் வட்டி என்னும் பாவத்தில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். வட்டி என்னும் தீமையை தடுப்பீர்களா? அல்லது துணை போவீர்களா?

உறவினர்களிடம் இரவல் நகை வாங்கி வங்கியில் வைப்பவர்களே! எந்த தைரியத்தில் மற்றவர்களின் நகைகளை வாங்கி வங்கியில் வைக்கிறீர்கள்? கடன் வாங்கவே பல கட்டளைகள் மார்க்கத்தில் உள்ளபோது, பல ஆயிரம் பெறுமானமுள்ள நகையை சில ஆயிரத்திற்கு அடகு வைத்து பணம் வாங்கி, திரும்ப மீட்டு கொடுக்கும்பொழுது எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது என்பதை அனுபவித்த பிறகும் நிறையபேர் திருந்துவதில்லை. இதையே தொடர்ந்து செய்து வருகிறார்கள். இரவல் நகை வாங்கி அடகு வைப்பதை விட்டும் தவிர்ந்து வாழ்ந்தால் மிகப்பெரிய மனநிம்மதி கிடைக்கும். நிச்சயம் அத்தியாவசியமான காரியங்களுக்கு நகைகள் அடகு வைப்பதில்லை என்பது பரவலாக பார்த்து வரும் உண்மை. நகை கடனோ, இரவல் நகை கடனோ, பல தடவை  இந்த கடன் அவசியம்தானா? வட்டியிலும், கடனிலும் விழுந்து விடுவோமே என்று நன்கு சிந்தித்து முடிவெடுங்கள். வல்ல அல்லாஹ்விடம் கடனை விட்டு பாதுகாப்பு தேடிக்கொண்டே இருங்கள். கடனிலிருந்து மீள்வதற்கும் முயற்சி செய்யுங்கள்.


இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- அலாவுதீன்.S.

LinkWithin

Related Posts with Thumbnails