Sunday, February 27, 2011

கடன் வாங்கலாம் வாங்க - 13

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடன் தொடர் தொடர்கிறது. தொடர் 12வரை அனைத்து வகையான கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி பார்த்தோம். இனி நம்முடைய வருமானத்திட்டத்தை பற்றி பார்ப்போம்.
கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்

எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுவிட்டு அந்தக்காரியம் நல்லபடியாக நடைபெற அல்லாஹ்விடம் உதவி தேடியபிறகு செயல்படும்பொழுது நம் காரியங்கள் அனைத்தும் இலகுவாகும். நம்மிடம் திட்டமிடும் பழக்கம் மிக குறைவாகவே உள்ளது.ஆனால் அசத்திய கொள்கையை பின்பற்றுபவர்கள் ஒரு வருடம், ஐந்து வருடம் இன்னும் பல வருடங்கள் என்று பல காரியங்களை  திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.

ஆனால் நம்மால் ஒரு மாத வீட்டு செலவையே திட்டமிட்டு செயல்படுத்தத் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் செலவாகும் மளிகை கணக்கு, மருந்து, மாத்திரை செலவுகள், இன்னும் பிற செலவுகளை நோட்டு போட்டு எழுதி வருபவர்கள் நம் சமுதாயத்தில் குறைவே. எழுதி வைத்து யாரிடம் காட்டப்போகிறோம், பணம் வருகிறது செலவு செய்கிறோம். இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடுவீர்கள். காலம் ஒரே மாதிரி இருக்காது.

இன்றைய செல்வந்தன் நாளைக்கு ஏழையாகி விடுவதையும், ஏழை பணக்காரனாகி விடுவதையும் பார்த்து வருகிறோம். வல்ல அல்லாஹ் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வைப்பதில்லை. வாழ்க்கையில் சோதனைகள் மாறி மாறி வரக்கூடியது. அதனால் உங்களின் செலவுகளை சிக்கனமாக திட்டமிட்டு செலவு செய்து சேமிக்கும் பழக்கத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சேமிப்பு பல வகைகளில் உங்களை கடன் வாங்காமல் கை கொடுக்கும். நமக்கு கிடைக்கும் வருமானத்தை திட்டமிட்டு செயல்படுத்த சில சட்டங்களை நமக்குள் வகுத்துக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும்.

எனக்கு காரைக்குடி செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு உண்டியல் தனித்தனியாக இருக்கும் அதில் காசு சேர்த்து வருவார்கள். சேமித்தால் உனக்கு தேவைப்பட்டதை வாங்கிக்கொள்ளலாம் என்பது அவர்களின் தாயாரின் அறிவுரை. மேலும் தீனிகள் (முறுக்கு, சீடை, இதுபோன்ற பொருள்கள்) வீட்டிலேயே தயார் செய்து வைப்பார்கள். வெளியில் கடையில் அதிகம் வாங்கி சாப்பிடமாட்டார்கள். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த உண்டியலில் அதிகமாக பணம் சேரப்போவது கிடையாது, இருந்தாலும் அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி விடுகிறார்கள். சிறு வயது முதலே எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது மனதில் பதிந்து விடுகிறது.

நம் சமுதாய இளைஞர்களின் சேமிப்பு நிலையை மனதில் ஓட விடுங்கள். ஆளுக்கு ஒரு வண்டி. அதில் தேவையற்ற இடங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு வீணாக அலைவார்கள். சில பேர் வீட்டுக்கு கூட வேலை பார்த்து கொடுப்பது கிடையாது. தாய்மார்களே பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து வீணான வழியில் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். எந்த கேள்வியும் பிள்ளைகளை கேட்பதில்லை. அவன் வயது பிள்ளைகளிடம் பைக் இருக்கிறது. அவன் வயது பிள்ளைகளிடம் செல்போன் இருக்கிறது. என்று மிக அத்தியாவசியம்போல் மிக வருந்தி கையில் பணம் இல்லாவிட்டாலும் அவனின் தாயோ, சகோதரிகளோ நகைகளை வங்கியில் அடகு வைத்து அவனுக்கு பைக், செல்போன் போன்ற பொருட்களை வாங்கிக்கொடுக்கிறார்கள். வீட்டில் தந்தை அல்லது அண்ணன் வெளிநாட்டில் சம்பாரிப்பார்கள். பணம் எவ்வளவு சிரமத்துடன் வீட்டுக்கு வந்து சேர்கிறது என்ற எந்த கவலையும் இல்லாமல் பிள்ளைகள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு தாய்மார்கள் எந்தவித குடும்ப கஷ்டங்களையும் தெரியப்படுத்துவதில்லை, உணர வைப்பதுமில்லை.

மாதச் சம்பளக்காரர்களாக இருந்தாலும், மாதா மாதம் வெளிநாட்டில் உள்ள கணவர், தந்தை, அண்ணன் இப்படி வீட்டுக்கு பொறுப்பாளியாக இருந்து யார் பணம் அனுப்பினாலும் தங்களுக்கு கையில் பணம் கிடைத்தவுடன் தாங்கள் செய்யவேண்டிய முதல் காரியம் (சில சகோதர, சகோதரிகள் பணம் கையில் கிடைத்தவுடன் நகை கடைக்கும் இன்னும் ஆடம்பர பொருள்கள் வாங்கவும் சென்று விடுவதாக கேள்விப்பட்டேன்) இப்படி ஆடம்பரங்களில் மூழ்கி விடாமல் பட்ஜெட் போடத் துவங்குங்கள். எப்படி பட்ஜெட் போடுவது உதாரணத்திற்கு  வருகிற மார்ச் மாதத்திற்கு என்னென்ன செலவுகள் உள்ளது என்பதை குறிப்பெடுங்கள்.

தங்கள் குடும்பத்தின் மளிகை செலவு, அரிசி, தண்ணீர் பில், கரண்ட பில், டெலிபோன் இணையதள பில், வீட்டு வரி, டாக்டர் செலவுகள், பிள்ளைகள் ஸ்கூல் பீஸ், எதிர்பாராத செலவுகள், சேமிப்பிற்கு ஒரு தொகை, கடன் எதுவும் இருந்தால் அதற்கும் ஒரு தொகை என்று குறிப்பெடுத்து விட்டு (மார்ச் மாதத்திற்கு என்ன செலவுகள் வரும் என்று தங்களுக்கு தெரியாமல் இருக்காது) பணத்தை சில்லரையாக மாற்றி (காசாக இல்லை - சில்லரை பணமாக) தனித் தனி கவரில் பணத்தை போட்டு மளிகை செலவுக்கு, கடனுக்கு, கரண்ட் பில்லுக்கு, டெலிபோன் பில்லுக்கு, டாக்டர் செலவுக்கு, தினச்செலவுக்கு, சேமிப்பிற்கு என்று கவரின் மேல் தனித் தனியாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். செலவுகளையும் நோட்டில் எழுதி வாருங்கள். (எந்த பொருட்கள் எந்த தேதியில் வாங்கினீர்கள் எத்தனை நாட்கள் பயன்பட்டிருக்கிறது என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்) எந்த செலவுக்கு என்று பணத்தை தனியாக பிரித்து வைத்து இருக்கிறீர்களோ அதன்படிதான் செலவு செய்யவேண்டும்.

சேமிப்பிற்காக உள்ள பணத்தை பேங்கில் போட்டு வாருங்கள். பேங்கில் பணம் போடும்பொழுதும், எடுக்கும் பொழுதும் தங்கள் கணக்கு புக்கில் வரவு வைத்திருக்கிறார்களா? என்று கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த திட்டத்தை அலட்சியம், சோம்பல் இல்லாமல் செயல்படுத்தி வாருங்கள். இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் அனைவரிடமும் மனக்கட்டுப்பாடும் இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தேவையற்ற பொருள்களை வாங்கி சேர்த்து விடாதீர்கள்.

தற்சமயம் நான் கேள்விட்டது நம் ஊரில் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்களாம். மார்க்கம் காட்டித்தராத பால்குட விழா, பிறந்த நாள் விழா, பெண்கள் வயதுக்கு வந்தவிழா, காதணிவிழா, சுன்னத் விழா, இன்னும் என்னென்ன விழாக்கள் இருக்கிறதோ இவைகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் இந்த விழாக்களுக்கு செல்வதற்காக நாகரீக பெண்கள் (நம் சமுதாயத்து பெண்கள்)பியூட்டி பார்லர்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அங்கு சென்று முக அழகு படுத்திக்கொண்டு இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆக இதனால் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த விழாக்கள் அனைத்தும் நம்மை கடனாளியாக்கும் நிலைக்கு தள்ளிவிடும். இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு சென்று முகத்தில் எதை எதையோ பூசி முக அழகு ஏற்படுவதற்கு பதிலாக அலர்ஜி ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பும், பண பாதுகாப்பும் ஏற்படும். பெண்களுக்கு நாம்தாம் அழகு என்ற தற்பெருமையும் விலகும். (பெண்கள் அழகே படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. கணவர் ஊரில் இருக்கும்பொழுது அலங்காரமாக இருப்பதில் தவறில்லை.  கணவர் வெளிநாடுகளில் இருக்கும்பொழுது அதிகபட்ச அலங்காரங்களை தவிர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும்).

தாய்மார்கள்: தந்தை, அண்ணன்  வெளிநாடுகளில் படும் சிரமங்களை அடிக்கடி பிள்ளைகளிடம் கூறி, சிக்கனமாக வீண் விரயம் செய்யாமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே மனதில் பதிய வைத்து கல்வியின் அவசியத்தையும் உணர்த்தி விட வேண்டும்.

வளைகுடா சகோதரர்களும் தங்களுக்கு சம்பளம் கையில் கிடைத்தவுடன், தாங்களும் இதுபோல் ஊருக்கு அனுப்புவது, இங்குள்ள செலவுகள், கடன், சேமிப்பு என்று தனித் தனி கவர்களில் பணத்தை பிரித்து வைத்து செலவு பண்ணி பாருங்கள். தங்களுக்கும் இதன் பலன் கிடைக்கும். சோதனை முயற்சியாக செய்து பார்த்து விட்டு பிறகு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

குறிப்பு : கடன் தொடர் 11ல் சில கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்கு பதில் அளித்த : சபீர், தாஜுதீன், யாசிர் சகோதரர்களுக்கு பரிசாக அர்ரஹீக் அல்மக்தூம் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.
Source : http://adirainirubar.blogspot.com/2011/02/13.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails