Sunday, May 12, 2013

ஒரு நாள் போதுமா

ஒரு நாள் போதுமா


***********

அன்னைக்கென்று ஒரு நாளும் வேண்டாம் என்பதே என் எண்ணம்.

ஒரு குவளைக்குள் அடங்குமா கடல் ?

ஒரு கூடைக்குள் முடங்குமா வானம் ?

கடலையும் வானத்தையும் விட

வற்றாத பாசத்தின் ஜம்ஜம் சுனையல்லவா தாய்...

@ தாயின் கருணையை விட இறைவனின் கருணை எத்தனையோ மடங்கு அதிகம் என இறைவன் சொன்னதாக நபிகள் சொன்னார்கள் . உடனே சில தாய்மார்கள் கேட்டார்கள்... "நாயகமே.. நாங்கள் குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறோம்.. அதற்கு சிரமம் வரக்கூடாதென்பதற்காக சிரமத்தை எல்லாம் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். எங்கள் உதிரத்தை பாலாக்கிக் கொடுக்கிறோம்.. அவர்களுக்காக நாங்கள் எத்தனையோ தியாகங்கள் செய்கிறோம்.. அப்படிப்பட்ட தாயின் கருணையை விடவா இறைக்கருணை உயர்ந்தது ?"

அப்போதும் நபிகள் " ஆம்.. இறைக்கருனைதான் உயர்ந்தது .." என பதிலளித்தார்கள்.. தாயைப் படைத்து அவள் இதயத்தில் கருணையை வைத்தவனே இறைவனல்லவா ? உலகத்தில் எத்தனைத் தாய்மார்கள்? எவ்வளவு கருணை ? இவை அத்தனையையும் தந்தவன் இறைவன்தானே.. அவனே அளவற்ற அருளாளன் என்பதில் என்ன சந்தேகம் ?

இத்தனை கருணை உள்ள இறைவனின் திருத்தூதர் திருவாய் மலர்ந்தார்கள்.." தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது "

இதைவிட உயர்வான வாழ்த்து எந்தத் தாய்க்கும் யாராலும் கொடுக்க முடியாது.

ஒருநாள் பள்ளியில் தொழுகை நடந்து கொண்டிருந்தது. நபிகளார் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். எப்போதும் முதல் வரிசையில் முதல் ஆளாக நிற்கும் அபூபக்கர் ( ரலி ) அவர்களைக் காணவில்லை. நிலையிலிருந்து ருக்கூஹ் போகும் பொது அபூபக்கர் ஓடோடி வந்து தொழுகையில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாயிலிருந்து இயல்பாகவே இறைவனுக்கு நன்றி தெரிவித்து " அல்ஹம்துலில்லாஹ் " என்று யாருக்கும் கேட்காத அளவுக்கு மெதுவாகக் கூறுகிறார். பெருமானார் ( ஸல் ) அவர்கள் ருக்கூஹ் விலிருந்து நிலைக்கு வரும்போது எப்போதுமில்லாமல் புதிதாக " சமியல்லாஹு லிமன் ஹமிதா " என்று கூறுகிறார்கள். சஹாபாக்களுக்கு ஆச்சரியம் . தொழுகை முடிந்து விளக்கம் கேட்கிறார்கள். அதற்கு நபிகள் சொன்னார்கள்... " புகழ்ந்தவரின் புகழ்ச்சியை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான் " என்று சொல்ல எனக்கு இறைவனின் ஆணை வந்தது. சொன்னேன்" என்றார்கள். " உங்களில் யாராவது அந்த நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ்ந்தீர்களா ?" என நபிகள் கேட்க... அபூபக்கர், " நான் புகழ்ந்தேன் " எனச் சொன்னார். அதன் விளக்கமும் சொன்னார்... அது... " யா ரசூலல்லாஹ்.. வயதான என் தாயாருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தேன். தொழுகை நேரம் வந்து விட்டது. எங்கே உங்கள் பின்னால் நின்று தொழும் வாய்ப்பை இழந்து விடுவேனோ என்று பயந்தேன். பணிவிடை முடிந்து ஓடோடி வந்தேன்.. இறை அருளால் எனக்குத் தொழுகை கிடைத்து விட்டது. அதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தேன் " என்றார். கூடியிருந்த சஹாபாக்கள் எல்லோரும் கண் கலங்கி விட்டார்கள்.

அப்போது நபிகள் சொன்னார்கள்... " தன் தாய்க்கு பணிவிடை செய்த ஒருவரின் புகழ்ச்சியை

அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அதை தொழுகையிலே அறிவித்திருக்கிறான் என்றால்

தாயின் சிறப்பை புரிந்து கொள்ளுங்கள் "

 ஒவ்வொருமுறை " சமியல்லாஹு லிமன் ஹமிதா " என்று சொல்லும்போதும் அது தாய்மைக்கு அல்லாஹ் கொடுத்த வாழ்த்து என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு உலகம் முழுதும் எத்தனைக் கோடி "சமியல்லாஹு லிமன் ஹமிதா " .

இறைவனால் இத்தனை அந்தஸ்து கொடுக்கப்பட்ட தாய்க்கு வருசத்தில் ஒரு நாள் அன்னையர் தினமா ? மற்ற நாளெல்லாம் அன்னையை மறக்கும் தினமா ?

மனது வலிக்கிறது ...

இந்த மதி கெட்ட மனிதரை நினைந்து விட்டால்...


அபூஹாஷிமா வாவர்




அபூஹாஷிமாவின்>

1 comment:

Riyaz Ahamed said...

சலாம் உண்மையில் மனது வலிக்கிறது தான் தற்போதுள்ள நிலையை பார்க்கும் போது

LinkWithin

Related Posts with Thumbnails