Wednesday, August 14, 2013

முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்?

நான் பிறந்த ஊர் ஒரத்தநாடு. அது தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது.

தஞ்சாவூருக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையில் ஒரத்தநாடு ஒய்யாரமாய் உட்கார்ந்திருக்கிறது.

எனக்கு அப்போது வயது ஒரு 20 இருக்கும். என் அக்கா வீட்டிற்கு அருகில் ஒரு மாதா கோவில் இருக்கிறது. அதை மடம் என்று சொல்வார்கள்.

அங்கே நிறைய அனாதைக் குழந்தைகள் படிக்கிறார்கள். எல்லாம் இலவசம். அந்தச் சேவையை நினைத்தமாத்திரம் என் நெஞ்சம் நெகிழும்.

அனாதைகளை ஆதரிக்கும் எவரையும் எனக்குப் பிடிக்கும் கூடவே அவர்களுக்குக் கல்வி வழங்கினால் எத்தனை கருணை மனம் அது. போற்ற வார்த்தைகள் இல்லை.

மடத்தின் நிர்வாகியை அம்மாங்க என்றும் மற்ற மடத்துக் கன்னிகளை சிஸ்டர் என்றும் அங்கே அழைப்பார்கள். இந்த சிஸ்டர் என்பதை ஏன் தமிழ்ப்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

நான் ஒரு விசயமாக அம்மாங்கவைச் சந்திக்கச் சென்றிருந்தேன். என்னை அன்போடு விசாரித்த அவர், பீவி எங்கே வரவில்லையா என்றார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. அவர்கள் பீவி என்று மரியாதையாகச் சொன்னது என் மூத்த சகோதரியை. என் சகோதரிமீது அவர்களுக்கு மரியாதை அதிகம்.
எனக்குக் குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. என் சிரிப்பை அடக்க கொஞ்ச நேரம் ஆனது.

ஏன் சிரிக்கிறீர்கள் என்று அம்மாங்க கேட்டார்.

Mother என்று ஆங்கிலத்தில் சொல்வதை அம்மா - அம்மாங்க என்று தமிழ்ப்படுத்திச் சொன்னால் அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது.

தமிழுக்குச் சம்மந்தமே இல்லாத பீவீ என்ற சொல்லை என் சகோதரிக்குப் பயன்படுத்துவது எப்படி சரி?

கல்லாதவர்கள் எதையோ சொல்லலாம் கற்றவரான, ஒரு மடத்தின் நிர்வாகியான நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம் என்று கேட்டேன்.

சற்றே சங்கடப்பட்டார் ஆனால் தான் சொல்வது சரிதானே என்ற ஐய உறுதியோடு என்னிடம் விளக்கம் கேட்டார்.

பீவீ என்பது பீபீ என்ற சொல் மருவி வந்தது. Bibi என்றால் உருதுவில் Miss அதாவது செல்வி என்று பொருள்.

பீபீ ஜெயலலிதா என்றால் பொருள் சரி. ஆனால் அப்படியா அழைக்கிறோம்? ஏன் அப்படி அழைப்பதில்லை? எவரேனும் விடை சொல்வார்களா?

ஏனெனில் ஜெயலலிதா ஒரு முஸ்லிம் பெண்மணி இல்லை. அவ்வளவுதான் ;-)

உருது, ஆப்கானிஸ்தான் மற்றும் சில பகுதியினர் பீபீ என்று மணமான பெண்களையும் கன்னியமாய் அழைத்தார்கள்.

பீபீ என்றால் மனைவி என்ற பொருளிலும் பயன்படுத்துவார்கள். உங்க பீவீ யாரு என்றால் உங்கள் மனைவி யார் என்று பொருள்.

பீபீ என்பது உருது.

ஒரு தமிழ்ப் பெண்ணை சகோ (சகோதரி) என்றுதானே அழைக்க வேண்டும்? அல்லது திருமதி என்று மணமான பெண்களையும் செல்வி என்று மணமாகாத பெண்களையும் தமிழ் வழக்கப்படியல்லவா அழைக்க வேண்டும்?

இந்த பீபீ பீவீ எல்லாவற்றையும் உருது மற்றும் ஆப்கானிஸ்தான் காரர்களிடமே விட்டுவிடுங்கள். தமிழர்களாகிய நமக்கு அது தேவை இல்லை. அது நம்மைத் தாய்மொழி அறியாதவர்கள் என்ற நிலைக்குக் கொண்டு சென்று விட்டுவிடும்.

ஓர் முஸ்லிமிற்கு தாய், தாய்மொழி, தாய்மண் என்பனவெல்லாம் மிக அவசியம்.

இஸ்லாமிய வேத நூலை எவரும் அவரவர் தாய் மொழியிலேயே பயிலலாம். ஆர்வம் இருந்தால் தாராளமாக குர்-ஆனின் மொழியை அரைகுறையாய் அல்லாமல் ஆழமாகக் கற்றும் பயிலலாம்.

குரானின் மொழி அந்தக் கால அரபுமொழி. அதன் சொற்களுக்கு இந்தக்கால அரபிகள் சிலருக்கே பொருள் தெரிவதில்லை.

சங்ககாலத் தமிழைப்போல குர்-ஆனின் மொழி கலப்படமற்றத் தூய்மையானது.

முதலில் தமிழ்நாட்டின் முஸ்லிம்கள் சரியாகப் புரிந்துகொண்டால்தான் தவறாகச் சொல்லும் மற்ற மதத்தினருக்கு எடுத்துச் சொல்ல முடியும்.


                                                            அன்புடன் புகாரி
Source : http://anbudanbuhari.blogspot.in/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails