Thursday, February 1, 2018

ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று ஏற்க இவ்வுலகு!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.



      தமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.

      அகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.

      இல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.


      கணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.

      வீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன? அது சொர்க்கமும்தானே?

      அகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.

      அகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று ஏற்க இவ்வுலகு!
வாட்சப்பில் வந்தது

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails