Sunday, April 29, 2012

மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்..

‘நான்கு விடயங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியது: ஸாலிஹான மனைவி, போதுமான இருப்பிடம், ஸாலிஹான அண்டை வீட்டான், நல்ல வாகனம் என்பனவையாகும். (அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), நூல்: இப்னுஹிப்பான் 4094, பைஹகீ 9021)

கணவன்மார்கள் பலர் தமது துணைவிகளைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடும் விமர்சனங்கள் இதோ…

..எனது மணவாழ்விலே நாம் மகிழ்ச்சியை உணர்வதில்லை…..எனது மனைவி என்னோடு அன்பைப் பரிமாறுவதில்லை…எனது மனைவி அதிகம் கோபப்படுகிறாள்…

என் மனைவி என் முன்னால் அழகாக இருப்பதில்லை…என் மனைவியொரு சுயநலவாதி…

என் மனைவி என்னிடம் அதிகம் எதிர்பார்க்கிறாள்…என் மனைவி மார்க்கக் கடமைகளில் கவனம் செலுத்துவதில்லை…

என் மனைவிக்கு அறிவு மட்டு…அவள் ஒரு குழப்பக்காரி…அதிகம் சந்தேகிக்கிறாள்…

குழந்தைகளைக் கவனிப்பதில் அலட்சியம் செய்கிறாள்…எனது குடும்பத்தை மதிப்பது கிடையாது…

இவைகள்தான் இக்கணவர்கள் மகிழ்ச்சியில் தோற்றுவிட்டதாகக் கூறும் காரணிகள்..

யதார்த்தத்தை நாம் ஆய்வு செய்கின்ற போது இத்தவறுகளுக்கெல்லாம் கணவன்மார்களே காரணியாக அமைகின்றனர். குறிப்பாக தெரிவு விடயத்தில் இவர்கள் விடுகின்ற தவறுகள் பிரதான காரணமாகும்.

சில சமயங்களில் கணவன்இ மனைவியின் நல்ல பண்புகளை மறந்து தவறுகளைப் பெரிதாகக் கருதுகின்றவனாக இருந்து விடுகின்றான். நபியவர்கள் கோணலும் குறையும் பெண்ணின் இயற்கையோடு ஒட்டியது என்று கூறிச் சென்று விட்டார்கள்.

எனவே அவளோடு நடந்து கொள்ளும் போது இயற்கைத்தன்மையை மறந்துவிடக்கூடாது. இதனையே நபியவர்கள் பெண்களுக்கு நல்லதையே நாடுங்கள்..என்ற முஸ்லிமில் இடம்பெறும் அறிவிப்பிலே

‘பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2912,2913)

பெண் கோணலான விலா எலும்பில்.. என்கின்ற இந்த ஹதீஸை இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கும் போது பின்வரும் அம்சங்களைக் குறிப்பிடுகின்றாரகள்.

01.பெண்களோடு மென்மையாக நடத்தல்.

02. அவர்களுக்கு உதவி உபகாரம் செய்தல்.

03.கோணலான குணங்களுக்காகப் பொறுத்துக் கொள்ளல். (ஷரஹ்:முஸ்லிம்)

அந்த வகையில் மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்:

01.திருமணம்தொடர்பாக தனது இலக்கை வரையறை செய்தல்.
பல சகோதரர்கள் திருமணம் தொடர்பாக கொண்டிருக்கின்ற தவறான குறையான அபிப்பிராயங்கள் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. இஸ்லாம் எந்த உயரிய நோக்கத்திற்காக இத்திருமணத்தை மார்க்கமாக்கியதோ அம்மாபெரும் மகிமைகளை இவர்கள் புரிந்து கொள்வதில்லை.

திருமணம் என்பது வெறும் உடலியல் மகிழ்வு, அதிகம் பிள்ளைகள் உள்ளனர் என்று பெருமை பாராட்டுவதற்கான வழிஇ அதிகாரம் செலுத்தவும் அடக்குமுறை செலுத்தவும் ஒரு சந்தர்ப்பம் மற்றும் வாழையடி வாழையாக நம் முன்னோர் செய்து வந்த வழமை..இப்படியெல்லாம் பலர் நினைக்க சிலரே இது ஒரு தூது, மிகப்பெரும் பொறுப்பு, பரஸ்பர ஒத்துழைப்பு, அழ்ழாஹ்வின் பாதையில் செய்யப்படும் தியாகம் என்பதை உணர்கின்றனர்;

அழ்ழாஹ் தனது திருமறையில் ‘மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.

உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அழ்ழாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அழ்ழாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.’ (அல்குர்ஆன் 49:13)

‘நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.’ (அல்குர்ஆன் 30:21)

02.தீனுள்ளவளைக்கொண்டு வெற்றியடைதல்.

அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.

1. அவளது செல்வத்திற்காக.

2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.

3. அவளது அழகிற்காக.

4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 5090)

அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது. நல்ல மனைவியே.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி), நூல்: முஸ்லிம் 2911)

‘நான்கு விடயங்கள் மகிழ்ச்சியைக் கொண்டு வரக்கூடியது: ஸாலிஹான மனைவி, போதுமான இருப்பிடம், ஸாலிஹான அண்டை வீட்டான், நல்ல வாகனம் என்பனவையாகும். நான்கு விடயங்கள் துக்கம் தரக்கூடியது: தீய மனைவி, நெருக்கடியான உறைவிடம், தீய அண்டை வீட்டான், பிரச்சினை தரக்கூடிய வாகனம் என்பனவையாகும்.’ (அறிவிப்பவர்: ஸஃது பின் அபீவக்காஸ் (ரழி), நூல்: இப்னுஹிப்பான் 4094, பைஹகீ 9021)

நன்றி:→ மௌலவி நஷ்மல் (பலாஹி)

நன்றி:→ அல்அதர் மாத இதழ்.
Source : மணவாழ்வு மகிழ்வுற சில வழிகாட்டல்கள்..

1 comment:

jaffarsathiq said...

well said this is true ...........ali sir..

LinkWithin

Related Posts with Thumbnails