Sunday, June 15, 2014

ரமழானிலிருந்து மாறத் தொடங்குவோம்


ரமழானிலிருந்து மாறத் தொடங்குவோம்

இந்த ரமழான் மாதத்தை பயனுள்ள வகையில் நாம் கழித்ததற்கு அடையாளமாகவும் என்றென்றும் இர்ரமழான் நம்முடைய வாழ்வில் நீங்கா இடம்பிடிக்கும் விதமாகவும் ஒருசில நற்செயல்களை நாம் வழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். கீழே ஒருசில இஸ்லாமிய நற்செயல்கள் பட்டியலிடப் பட்டுள்ளன. அவை அனைத்தையும் நாம் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டால் உண்மையிலேயே நாம் தூய முஸ்லிம்களாக மாறிவிடுவோம் என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை. அதேசமயம் அவற்றில் மூன்றில் ஒரு பகுதியையாவது நடைமுறைக்கு கொண்டு வந்தே ஆகவேண்டும் என்னும் வைராக்கியத்தோடு முயற்சி செய்ய வேண்டும் என்பதை இங்கே வேண்டுகோளாக இக்கட்டுரை முன் வைக்கின்றது. இவ் வேண்டுகோள் உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் பொருந்தும்.

1. இஃக்ளாஸ்

எந்த ஒரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்காக செய்யப்பட வேண்டும். கலப்பற்ற எண்ணம் – இஃக்ளாஸ் என இதைத்தான் நாம் அழைக்கிறோம். இஃக்ளாஸின் உயர் படித்தரம் என்னவெனில் இறைவனுக்காக செய்யப்படும் செயல்கள் மட்டுமே நம்முடைய வாழ்க்கையை ஆக்கிரமிக்க வேண்டும். பிறருக்காகவோ நமக்காகவோ எந்தவொரு செயலையும் நாம் செய்யவே கூடாது.

“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்ட வேண்டும், மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளை இடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்” (அல்குர்ஆன் 98-5)

2. இறைவனிடமே பாவமன்னிப்பு

நம்முடைய பாவங்களை எண்ணி இறைவனிடம் அழுது முறையிட வேண்டும். பாவத்தைப் பற்றிய இஸ்லாமிய விளக்கத்தை முதலில் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். செய்யக் கூடாததைச் செய்துவிட்டால் உலகம் அதனை பாவ மென்று கருதுகின்றது. இஸ்லாம் அதை மட்டுமே பாவமென்று உரைக்கவில்லை. மாறாக, செய்யவேண்டியதை உங்கள் மீது கடமையானதை செய்யாமல் விட்டுவிட்டாலும் அதனை குற்றமென்று கருதுகின்றது.

‘ஒரு மனிதர் தான் இருக்கும் நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாறும் முன் தன்னால் இயன்றவரை இறைவனைப் புகழ்ந்து கொள்ளட்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை யெனில் அவர் குற்றவாளியாகி விடுகிறார். இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான். இறைவன் நாடினால் அவரை தண்டிக்கவும் செய்வான்’ என அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

“மேற்கில் இருந்து சூரியன் உதயமாவதற்கு முன்னால்வரை ஒருவர் பாவமன்னிப்பு கோரினால் இறைவன் அதனை ஏற்பான்”  (திர்மிதீ)

3. நம்பிக்கைக்கான எதிர்பார்ப்பு

ஒவ்வொரு பிறையைப் பார்க்கும் போதும் நிலவோடு சேர்ந்து நம்முடைய நம்பிக்கையும் வளரவேண்டும் என ஒரு முஃமின் எதிர்பார்க்கிறான். அதற்கென பிரார்த்தனையும் புரிகிறான்.

பிறையைக் காணும்போது, ‘அல்லாஹும்ம அஹில்லனா பில்அம்னி, வல் ஈமானி. ரப்பி வரப்புகல்லாஹு’ (இறைவா, சாந்தத்தின் பிறையை நம்பிக்கையின் பிறையை எனக்கு காட்டு. நிலவே, என்னுடைய உன்னுடைய இறைவன் அல்லாஹ்வே)

4. இறைநம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு

‘இறைநம்பிக்கையோடும் நன்மைகள் கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்போடும் நோன்புகளை நோற்றால் முன்செய்த பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும்’ (புகாரி, முஸ்லிம்)

யாதொரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அச்செயல் மூலமாக நம்முடைய இறைநம்பிக்கை ஈமான் அதிகரிக்க வேண்டும், இறைவன் அச்செயலை அங்கீகரித்து நன்மைகளை வழங்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும். இவ்விரு பண்புகளும் நம்முடைய எல்லாச் செயல்களிலும் மிளிர வேண்டும்.

5. இறைநம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் இரவில் தொழுதல்

‘இறைநம்பிக்கையோடும் நன்மைகள் கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்போடும் இரவில் நின்று தொழுதால் முன்செய்த பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும்’ (புகாரி, முஸ்லிம்)

6. இறைநம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ரை அடைதல்

‘இறைநம்பிக்கையோடும் நன்மைகள் கிடைக்கும் என்னும் எதிர்பார்ப்போடும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று தொழுதால் முன்செய்த பாவங்கள் யாவும் மன்னிக்கப்படும்’ (புகாரி, முஸ்லிம்)

7. ஷவ்வால் நோன்புகள்

‘ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்றால் காலம் முழுக்க நோன்பிருந்த நன்மை கிட்டும்’ (புகாரி, முஸ்லிம்)

8. கடைசிப்பத்தில் கடும் வழிபாடு

‘இறைவனின் தூதர் ரமழான் மாதம் கடைசிப் பத்து நாட்களில் வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு இபாதத்துகளில் ஈடுபடுவார்கள். தமது இல்லத்தாரையும் வழிபாடுகளில் ஈடுபடுமாறு தூண்டுவார்கள்’ (புகாரி, முஸ்லிம்)

9. உம்ரா

ரமழானில் உம்ரா செய்தால் ஹஜ் செய்த நன்மையோ என்னோடு ஹஜ் செய்த நன்மையோ கிடைக்கும் என அண்ணலார் கூறியுள்ளார்கள். (புகாரி, முஸ்லிம்)

10. இஃதிகாஃப்

அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் கடைசிப் பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். (புகாரி)

இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கியிருந்து இறை வழிபாட்டில் ஈடுபடுவது எனப்பொருள். இதனை லைலத்துல் கத்ரோடு தொடர்புடையதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். இந்நினைப்பு தவறாகும். அண்ணல் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழான் இரண்டாம் பத்திலேயே இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். அதாவது ரமழான் பதினொன்றாம் நாளில் இருந்து இதிகாஃப் இருந்துள்ளார்கள். ஆகையால், லைலத்துல் கத்ரோடு இதனை முடிச்சுப் போட்டு விடக் கூடாது. ரமழான் அல்லாத சமயங்களிலும் இஃதிகாஃப் இருப்பது கூடும். வரவேற்கத் தக்கது.
Source:  http://disaikaati.wordpress.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails