Sunday, June 29, 2014

மெளனம் ஓர் ஆயுதம் !


ஸவ்ர் குகையே ! – எங்கள்

தாஹா நபியிருந்த

பவர் குகையே !



அன்று

சத்தியம் சொல்லப்

புறப்பட்ட

எங்கள் சந்தன மலர்களைப்

பத்திரப்படுத்துத் தந்தாயே !

பகை மேகங்கள்

விழுங்கப் பார்த்ததே…!



இளைப்பார

நிழலில் தங்குவோம் !

உன் மடியில் – அன்று

எங்களின் தங்க நிழல்கள் அல்லவா

இளைப்பாறின !

குரைஷியர்களுக்குப் பயந்து

எங்கே… உளறிவிடுவாயோ

என்று தானே

வல்ல அல்லாஹ்

உன் வாயைச் சிலந்தி நூலால்

தைக்கச் செய்தான் !



சிலர் பேசினால்…

புரட்சி !

நீ – மெளனம் காத்தே

ஒரு புரட்சி செய்தாய் !

உன் மெளனப் புரட்சியால் …

குரைஷியர்களின் அதிரடிப்படை

நூலாம் படையிடம்

தோற்றுத் திரும்பியதே !



ஸவ்ர் குகையே !

உன்னிடமிருந்து

ஒரு பாடம் கற்றோம் !

என்ன தெரியுமா?

பேசுவதென்றால்…

சபையறிந்து

பேச வேண்டும் என்பார்கள் !

நீயோ …

தருணம் பார்த்து

மெளனித்தாய் !

எங்கள் பெளர்ணமிகள்

தப்பித்தன !



மெளனம் என்பது …

அடங்கிப் போவதல்ல.

அது

எதிர்ப்பை முறியடிக்கும்

ஆயுதமென்று

சொல்லாமல்

சொல்லி நிற்கிறாய் !



ஸவ்ர் குகையே !

நீ

கற்குகையல்ல !

மெளனம் போதித்த

கல்லூரி !


                      தமிழ்மாமணி கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ்,

                                      இளையான்குடி.  99763 72229
 from:     Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails