Tuesday, October 4, 2016

‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?

அறிவோம் இஸ்லாம்
பாத்திமா மைந்தன்
47   ‘ஹிஜ்ரத்’ என்றால் என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்று ஏறத்தாழ 5 ஆண்டுகள் ஆகி இருந்தன. முஸ்லிம்களுக்குக் குரைஷிகள் அளித்த தொல்லைகள் எல்லை மீறி போவதை நபிகளார் உணர்ந்தார்கள்.
எந்த நிலையிலும் அவர்கள் இஸ்லாத்தைக் கைவிட மாட்டார்கள் என்றபோதிலும், அவர்கள் படும் இன்னல்கள் குறித்து நபிகளார் பெரிதும் கவலை கொண்டார்கள்.
இதனால் இன்னல்களுக்கு ஆளான முஸ்லிம்கள் மக்காவைத் துறந்து அபிசீனியாவுக்குச் செல்லட்டும் என்று நபிகளார் முடிவு செய்தார்கள். இதன்படி பன்னிரண்டு ஆண்களும், நான்கு பெண்களும் அபிசீனியா சென்றனர். இதுவே இஸ்லாத்தின் முதல் ‘ஹிஜ்ரத்’ ஆகும்.

‘ஹிஜ்ரத்’ என்ற அரபுச் சொல்லுக்கு இடம் மாறுதல், புலம் பெயர்தல், விட்டு விடுதல், வெறுத்து விடுதல் என்று அர்த்தம். ‘ஹிஜ்ரா’ அல்லது ‘ஹிஜ்ரத்’ என்பது இறைவனின் மார்க்கத்தைப் பூரணமாகப் பின்பற்ற நெருக்கடி தரும் ஓர் இடத்தை விட்டு, வேறு இடத்திற்குச் செல்வதாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பதிமூன்று ஆண்டு காலம் பல இன்னல்களுக்கு இடையே மக்காவில் ஓரிறைக் கொள்கையைப் பிரசாரம் செய்து வந்தார்கள். அவர்களைக் கொல்ல குரைஷிகள் திட்டம் தீட்டினார்கள்.
இதனால் இறைவன் கட்டளையை ஏற்று நபிகளார் யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக தோழர் அபூபக்கர் (ரலி) அவர்களுடன் மக்காவை விட்டு மதீனா நோக்கி புறப்பட்டார்கள். இதுவே இஸ்லாத்தின் இரண்டாவது ‘புலம் பெயர்வு’ ஆகும்.
கரிய இருள். பயணம் செல்லும் பாதையெங்கும் கரடு முரடான கற்கள். வழியில் மக்கா மாநகரில் இருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த ‘தவ்ர்’ மலையில் இருவரும் தங்கினார்கள்.
இதற்கிடையே தோழரோடு முகம்மது நபி தப்பி விட்டார் என்பதை அறிந்ததும், குரைஷிகள் அவரைத்தேடி அந்தக் குகை வாசல் அருகே வந்து விட்டனர்.
‘இருவரும் இதை விட்டு ஓரடியும் தாண்டவில்லை; குகைக்குள்ளேதான் அவர்கள் பதுங்கி இருக்க வேண்டும்’ என்று மக்காவின் மந்திரக்காரன் அபூகர்ஸ் உரத்தக் குரலில் உரைத்தான்.
இதைக் கேட்டதும், அபூபக்கர் அவர்களின் உடல் தளர்ந்தது; உள்ளம் சோர்ந்தது. ‘இப்போது நபிகளார் எதிரிகள் கையில் சிக்கினால்…’ அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் சுரந்தது. கண்களில் பெருக்கெடுத்த கண்ணீர் கரைபுரண்டு வழிந்தது.
இதைக் கண்ணுற்ற நபிகளார், ‘ஏன் கலங்கு கிறீர்கள், அபூபக்கரே!’ என்று கேட்டார்கள்.
‘இறைத் தூதரே! அங்கே பாருங்கள். அவர்கள் பலர் இருக்கிறார்கள். இங்கே நாம் இருவர் மட்டுமே’ என்றார், அபூபக்கர்.
‘அஞ்சாதீர். நாம் இருவர் அல்லர், மூவர். நிச்சயமாக அல்லாஹ்வும் நம்மோடு இருக்கின்றான்’ என்றார்கள்.
மீண்டும் குரைஷிகளின் உரையாடல் தொடங்கியது, ‘வாருங்கள், நாம் குகையின் உள்ளே சென்று பார்ப்போம்’ என்றான் அவர்களில் ஒருவன்.
‘குகை வாசலில் பின்னப்பட்டிருக்கும் சிலந்தி வலையைப் பார். இது முகம்மது பிறப்பதற்கு முன்பே பின்னப்பட்டது போலத் தெரியவில்லையா? நாம் ஏன் உள்ளே சென்று நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்’ என்று இன்னொருவன் கூற அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள்.
அவர்கள் மூன்று இரவுகள் அங்கே தங்கி இருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களுடைய மகன் அப்துல்லாஹ்வும் அங்கு சென்று இரவு தங்குவார். அவர் இரவின் இறுதிப் பகுதியில் வெளியேறி விடிவதற்குள் மக்கா வந்து விடுவார். அவர்கள் இருவரைப் பற்றி ஏதேனும் செய்திகளை மக்காவில் கேட்டால், அதை நினைவில் வைத்துக் கொண்டு இருள் சூழ்ந்தவுடன் இருவரிடமும் சென்று அந்தச் செய்தியை எடுத்துரைப்பார்.
அபூபக்கரின் பணியாளர் ஆமிர் இப்னு புகைரா அங்கு ஆடுகளை மேய்த்து விட்டு பொழுது சாய்ந்தவுடன் இருவருக்கும் ஆட்டுப் பாலை கறந்து கொடுப்பார். இவ்வாறு மூன்று இரவுகள் அவர் இப்படிச் செய்து கொண்டிருந்தார்.
நான்காம் நாள் நபிகளார் ‘தவ்ர்’ குகையில் இருந்து அபூபக்கரோடு வெளியேறினார்கள். பயணத்திற்காக இரண்டு ஒட்டகங்களை அபூபக்கர் ஏற்பாடு செய் திருந்தார். தடை பல கடந்து 8&வது நாள் அவர்கள் ‘குபா’ என்ற இடத்தை அடைந்தார்கள்.
இந்த ஊர் மதீனாவில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது. இங்கு அன்சாரிகளான மதீனாவாசிகள் பலரின் குடும்பங்கள் வசித்து வந்தன.
அவர்களிடையே அம்ர் பின் அவ்ப் (ரலி) அவர் களின் குடும்பம் மிகவும் சிறப்புற்றதாக விளங்கியது. குல்தும் பின் ஹதம் என்பவர் அதன் தலைவராக விளங்கினார். அவர்கள் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி இருந்தார்கள். இதற்கிடையே அலி (ரலி) அவர் களும் மக்காவைத் துறந்து குபா வந்து நபிகளாருடன் இணைந்து கொண்டார்கள்.
குபாவில் தங்கி இருந்தபோது நபிகளார் செய்த முதல் பணி அங்கு ஓர் இறை இல்லத்தை நிர்மாணித்து அதில் தொழ வைத்தார்கள். குபாவில் கட்டப்பட்ட அந்த இறை இல்லமே, நபித்துவத்திற்குப் பிறகு இறையச்சத்தோடு கட்டப்பட்ட முதல் பள்ளியாகும்.
மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று அங்கிருந்து புறப்பட்டார்கள். வழியில் ‘லுஹர்’ (பகல் நேரத் தொழுகை) தொழுகைக்கான நேரம் வந்து விட்டது.
‘பத்னுல் வாதி’ என்ற இடத்தில் அனைவரையும் ஒன்று சேர்த்து ‘ஜும்மா’ தொழுகையை நிறைவேற்றி மக்களிடையே நபிகளார் பேருரை நிகழ்த்தினார்கள். இதுவே முஸ்லிம்களின் முதல் ஜும்மா தொழுகை (வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை) ஆகும். இந்தத் தொழுகையில் 100 பேர் பங்கேற்றனர்.
(தொடரும்)
http://mudukulathur.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails