Wednesday, May 18, 2011

வக்ப் வாரியத் தலைவர் ராஜிநாமா - ஹைதர் அலிக்கு மீண்டும் வாய்ப்பு?

முந்தைய திமுக அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். அவ்வகையில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் பதவியிலிருந்து கவிக்கோ அப்துல் ரகுமான் ராஜிநாமா செய்துள்ளார்.
கடந்த 2006 இல் திமுக ஆட்சியின்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக (தமுமுக) பொதுச்செயலாளர் செ.ஹைதர் அலி தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2009 மக்களவைத் தேர்தலில் தமுமுக திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததைத் தொடர்ந்து 9-6-2009 அன்று வாரியத்தின் தலைவர் பதவியை ஹைதர் அலி ராஜிநாமா செய்தார். அதனைத் தொடர்ந்து புதிய தலைவராக 10-6-2009 அன்று கவிக்கோ. அப்துல் ரகுமான் நியமனம் செய்யப்பட்டார்.

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த கட்சிகளில் தமுமுகவும் இடம்பெற்றிருந்தாலும் அக்கட்சிக்கு மூன்று இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், ஹைதர் அலி போட்டியிடவில்லை. எனினும், அதிமுக கூட்டணி வேட்பாளார்களுக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். இதற்குக் கைமாறாக, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தலைவர் பொறுப்பை மீண்டும், தமுமுக கட்சியின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சிக்கு வழங்கும் பட்சத்தில், ஹைதர் அலி மீண்டும் வக்ஃப் வாரியத்தலைவராக வாய்ப்பு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
Source : http://www.inneram.com/2011051816610/hyder-ali-becomes-wakf-chairman

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails