Monday, May 9, 2011

யார் இந்த உஸாமா?


1957-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் ரியாதில் பிறந்தார் உஸாமா பின் முஹம்மது பின் அவாத் பின் லேடன். உஸாமாவை இஸ்லாமிய தீவிரவாதத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மேற்கத்திய உலகம் கருதுகிறது. உஸாமா சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்புடைய கோடீஸ்வர வர்த்தகர் முஹம்மது பின் அவாத் பின் லேடனின் மகனாவார்.
இஸ்லாமிய நம்பிக்கைகளில் உறுதி கொண்டதாக அவருடைய இளமைப்பருவம் அமைந்திருந்தது. 1968 ஆம் ஆண்டு முதல் 1976-ஆம் ஆண்டு வரை ரியாதில் அல் தாகர் மோடல் ஸ்கூலில் படித்த உஸாமா பின்னர் கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பொருளாதாரத்திலும், வர்த்தக நிர்வாகத்திலும் பட்டம் பெற்றார். 1979-ஆம் ஆண்டு உஸாமா சிவில் எஞ்சினீயரிங்கில் பட்டம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.



ஆனால், பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது 3-வது ஆண்டு உஸாமா கல்லூரியிலிருந்து வெளியேறியதாகவும் தகவல் உண்டு. மார்க்கரீதியான காரியங்களில் உஸாமா மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒரு கவிஞராகவும் உஸாமா திகழ்ந்தார். பல்கலைக்கழகத்தில் பயிலும் பொழுது உஸாமா எகிப்தை மையமாகக் கொண்டு செயல்படும் இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். இஸ்லாமிய சித்தாந்தங்கள் மற்றும் கலாச்சாரத்தில் மிகுதியான அறிவை அவர் இக்காலக்கட்டங்களில் பெற்றார்.

1979-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்தது. சோவியத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த போராளிகளுடன் உஸாமாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஆயுத போராட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார். சவூதி அரேபியாவின் ஜித்தா பல்கலைக் கழகத்தில் உஸாமாவின் பேராசிரியராக பணிபுரிந்த அப்துல்லாஹ் ஆஸம் அவர்கள், பாகிஸ்தானின் பெஷாவரை மையமாகக் கொண்டு சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக ஆப்கான் முன்னணி படைக்கான தந்திரங்களை தயாராக்கியிருந்தார்.

1979-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய உஸாமா, அப்துல்லாஹ் ஆஸத்துடன் இணைந்தார். 1984-ஆம் ஆண்டு ஆஸம்-லேடன் கூட்டணி மக்தப் அல் கதாமத் என்றதொரு இயக்கத்தின் மூலமாக இஸ்லாமிய போராட்டத்தை பிரகடனப்படுத்தினார்.

1980-ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யாவை எதிர்த்து ஆப்கான் போராளிகள் நடத்திய தீரமிக்க போராட்டத்தில் உஸாமா உத்வேகத்துடன் ஈடுபட்டார். இவ்வேளையில் அமெரிக்கா சி.ஐ.ஏ மூலமாக உஸாமாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த சோவியத் ரஷ்யா என்ற எதிரியை எதிர்ப்பதற்கு ’எதிரிக்கு எதிரி நண்பன்’ பாலிசியை உஸாமா கடைப்பிடித்திருக்கலாம்.

ஆப்கானிஸ்தான் போராட்டத்தில் உஸாமாவுக்கு உதவிய அமெரிக்கா பின்னர் அவரை தீவிரவாதியாக சித்தரிக்க ஆரம்பித்தது. 1988-ஆம் ஆண்டு உஸாமா அல்காயிதா இயக்கத்தை துவக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து உஸாமாவுக்கும், ஆப்கானை ஆட்சிபுரிந்த தாலிபான்களுக்கும் நெருக்கம் அதிகமானது. தாலிபானுக்கு தேவையான ராணுவ, பொருளாதார உதவிகளை உஸாமா அளித்தார்.

1997-ஆம் ஆண்டு எகிப்து கூட்டுப் படுகொலை, யெமனில் குண்டுவீச்சு ஆகியவற்றின் பின்னணியில் உஸாமா செயல்பட்டார் என அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது. 1998-ஆம் ஆண்டு அமெரிக்க தூதரகம் குண்டுவீசி தாக்கப்பட்டதற்கு உஸாமாவின் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதனை தொடர்ந்து அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஏவுகணை தாக்குதலுக்கும் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உத்தரவிட்டார்.

2001-ஆம் ஆண்டு உலகினை நடுங்கச்செய்த நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு உஸாமா பின் லேடன் காரணம் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இதனை தொடர்ந்து உஸாமாவை பிடிப்பதற்காக ஆப்கானிஸ்தான் என்ற சுதந்திர தேசத்தை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய படைகள் ஆக்கிரமித்தன. இன்றுவரை அந்நாட்டி அப்பாவி மக்களை கொன்றொழித்ததை தவிர வேறு எதனையும் சாதிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

உஸாமாவுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர்’ என பிரகடனப்படுத்தியது அமெரிக்கா. இறுதியாக உஸாமாவை பாகிஸ்தானில் வைத்து கொலை செய்ததாக அறிவித்துள்ளது.

உலக வல்லரசான அமெரிக்காவின் நெஞ்சை பிளந்த 2001 நியூயார்க் இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டது யார்? என்பது குறித்து தற்போதும் மர்மம் நீடிக்கும் வேளையில் உஸாமா பின் லேடன் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார். ஆம், சத்தியம் என்ன என்பது குறித்து வெளிக்கொணராமலேயே உஸாமாவின் இறுதி பயணம் அமைந்துவிட்டது.

அ.செய்யதி அலீ
Source : http://muthupet.org/யார் இந்த உஸாமா?

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails