Sunday, June 14, 2015

ஞானம் இங்கேயும் கிடைக்கும் ..

ரொம்ப அருமையான தம்பதிகள் அவர்கள்.
ரொம்பப் பாசம் .
மனமொத்த வாழ்க்கை.
கணவனின் திருப்தியில் இறைவனின் திருப்தியைக் கண்ட பெண் அவர்.
மனைவியின் முகம் வாடப் பொறுக்காத கணவர் அவர்.
இதயங்கள் ஒன்றாகி இரு தேகங்களாக வாழ்ந்தவர்கள்.
அவர்களுக்குக் கல்யாணமாகி கொஞ்ச வருஷங்களே ஆகி இருந்தது.
குழந்தைகள் இல்லை.
இறைவன் நாட்டத்தில் பொருத்தம் கொண்டு பொறுமையோடும் இனிமையோடும் வாழ்ந்தார்கள்.
ஒருநாள் கணவரின் உள்ளத்தில் ஒரு எண்ணம் உதயமானது.
இல்லறத்தில் இருந்து கொண்டே இறை இன்பத்தை பெற முயற்சித்தால் என்ன ?
எண்ணத்தை மனைவியிடம் சொன்னார்.
மணாளன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத மனையாள் அப்படியே ஆகட்டும் என்றார்.
இருவரும் தொழுகை நோன்பு இபாதத் என்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.
ஆனாலும் அவர்களால் அதில் முழு இன்பம் பெற முடியவில்லை.
இறைவனைப் பெரும் பேரின்பத்தை அடைய முடியவில்லை. இறை ஞானத்தின் துளியைக் கூட பருக முடியவில்லை.
காரணம்...

அவர்களை சுற்றி இருந்த சுற்றமும் நட்பும் உலக சம்பந்தமான உறவு சம்பந்தமான விஷயனகளை பேசிக் கொண்டும் அதில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொண்டும் இருந்தததால் உலக மாயையிலிருந்து அவர்களால் விடுபட முடியவில்லை.
அதனால் அவர்கள் ஊரை விட்டே போய் விடுவது என ஒரு முடிவெடுத்தார்கள்.
அதுவும் மனிதர்கள் யாருமே இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குச் சென்று இறைவனை தொழுதே வாழ்க்கையை கழிப்பது இறை ஞானத்தை அடைவது என்று தீர்மானித்தார்கள்.
ஒரு நள்ளிரவு நேரத்தில் கணவனும் மனைவியும் வீட்டை விட்டுப் புறப்பட்டு யாரும் காணாத இடம்தேடி பயணித்தார்கள்.
காடு மேடெல்லாம் கடந்து சென்று கொண்டே இருந்தாலும் அவர்கள் மனதுக்கு உவப்பான இடம் இன்னும் கண்ணில் அகப்படவில்லை.
ஒருநாள் கணவன் முன்னே செல்ல மனைவி சற்று தூரத்தில் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தார்.
கணவனின் கண்களிலே வைரம் போன்ற ஒரு பொருள் தட்டுப்பட்டது. குனிந்து அதை எடுத்துப் பார்த்தார். வைரம்தான். வழிப்போக்கர்கள் யாரோ தவறவிட்டுச் சென்ற வைரத்துண்டு.
இதை மனைவி கண்டால் அவள் மனது பேதலிக்குமோ என்று அவர் அச்சப்பட்டார்.
அதனால் மனைவி அருகில் வருவதற்கு முன்னால் அந்த வைரதுண்டை எடுத்து மண்ணிற்குள் புதைத்து வைக்க ஆரம்பித்தார்.
ஆனால்... அதற்குள் மனைவி அருகே வந்து விட்டார்.
" இங்கே என்ன செய்கிறீர்கள் ?"
பொய் சொல்ல விரும்பாத கணவர் ...
" ஒரு வைரக்கல் வழியில் விழுந்து கிடந்தது. அதைக் கண்டால் உன் மனம் இறை வழியிலிருந்து மாறுமோ என்று நினைத்து அதை அப்புறப்படுத்தினேன் " என்றார்.
மனைவி கணவனைப் பார்த்து பொறுமையாகக் கேட்டாள் ...

" கல்லுக்கும் வைரத்திற்கும் இன்னுமா உங்களுக்கு
வித்தியாசம் தெரிகிறது ?"

பெண்கள் ஆசைப்படுவதில் மட்டுமல்ல
ஆசையைத் துறப்பதிலும் தீவிரமானவர்கள் !

இறைவனை பற்றிய ஞானத்தைத் தேடிப் புறப்பட்ட கணவருக்கு அப்போது ஞானம் பிறந்தது.
தன்னைவிட தன் மனைவி ஞானத்தை பெற்றுவிட்டார்.
அவரே தனக்கு ஞானம் கற்றுத்தரும் தகுதியுள்ளவர் என்பதை உணர்ந்து பயணத்தை முடித்து மனைவியோடு தங்கள் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்
.Abu Haashima

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails