Thursday, January 2, 2014

அண்ணலெம்பெருமானே அகிலத்தின் அருட்கொடையே...


ரபிய்யுல் அவ்வல்
பூத்து விட்டதோ !

அண்ணலெம்பெருமானே
அகிலத்தின் அருட்கொடையே...
மனசுக்குள்ளே
எங்களுக்கு
மகிழ்ச்சியின்
மலர் வாசம் வீசுகிறதே !

உங்கள் கஸ்தூரி வாசனையை விட
வேறெந்த மணமும் மேலானதில்லை !
அதை ...
சுவனத்தில் நாங்கள்
சுவாசிப்பதற்காக
உங்கள் முஹப்பைத்தை
இங்கே நாங்கள்
வாசிக்கிறோம் !

உங்கள்
விரல் அசைவு இல்லையென்றால்
இந்த அடிமைக்கு
விமோச்சனமில்லை..
எந்த அடிமைக்கும்
விடுதலையில்லை !

நீங்கள் பிறந்த சேதியைச் சொன்ன
அடிமைப் பெண்ணை
சுட்டுவிரல் நீட்டி
விடுதலையாய்
விட்டு விட்ட
அபுலஹபுக்கும்
நரகத்தில் கூட
சொர்க்கத்தின் சுனைநீர்
சுரக்கிறதாம்
தாங்கள் பிறந்த
திங்கள்தோறும் !

ஒவ்வொரு பாங்கிலும்
உங்கள்
திருப்பெயர் கேட்டு
விரல்களால்
கண்களில்
முத்தமிட்டுக் கொள்ளும்
எங்களுக்கு
உங்கள்
சுட்டுவிரல்
சுவனத்தை
சுட்டாமலா போய்விடும் ?
சொர்க்கத்தின்
சுவைச் சாறுகளை
சொட்டாமலா போய்விடும் ?

நாயகமே ...
இருலோகத்திற்கும்
எங்களுக்கு
வழிகாட்டும்
ஆதாரமே...
உங்களை வாழ்த்துவதால்
வாழ்கிறது
எங்கள் உள்ளம் !

மணக்கோலத்திலும்
நாங்கள்
மலர் மாலைகளைச் சூடி
மகிழ்பவர்கள் !

நாங்கள்
பிணக்கோலம் ஆனாலும்
கண்மணியே நாயகமே
உங்கள்மீது
நாங்கள் சூட்டிய
புகழ் மாலைகள்
எங்கள்
மண்ணறையையும்
மணவறையாக்கட்டும் !

Abu Haashima Vaver

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails