Tuesday, September 29, 2015

ஜமாஅத் நிர்வாகம் ஒரு அமானத் !.....



  எல்லா ஜமாஅத் நிர்வாகிகளுக்கும் அதன் மக்களாகிய நம் அனைவருக்குமான ஒரு நினைவூட்டலே இந்த பதிவு...

  மக்களினால் வழங்கப்பட்ட அமானிதத்தை ஜமாஅத் நிர்வாகம் நிச்சயம் பாதுகாக்க வேண்டும்!.. குறிப்பாக நிர்வாகத்தின் தலைவராக செயல்படுகிறவர் இதனை நன்றாக உணர்ந்து செயல்படவேண்டும் !...

“விசுவாசிகளே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைத்து விடுமாறும், மனிதர்களுக்கிடையில நீங்கள் தீர்வு கூறினால், (பாரபட்சமின்றி) நீதமாகவே தீர்ப்பளிக்குமாறும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்கிறவனாக, பார்க்கிறவனாக இருக்கின்றான்.” ( சூரத்துல் நிஸா: 58)

நமது அருமை நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அமானிதத்தின் பொறுப்பினையும், அதனை அலட்சியம் செய்வது நயவஞ்சகத்தனம் என விளக்குகிறார்கள் “எவரிடமாவது பின்வரும் நான்கு பண்புகள் காணப்படுமாயின் அவர்கள் நயவஞ்சகர்களாவார்கள். மேலும் எவரிடமாவது இந்த நான்கு பண்புகளில் ஒன்றேனும் காணப்பட்டால் அதனை அவன் கைவிடும் வரை அவனிடம் நவவஞ்சகரின் ஒரு பண்பு உள்ளது. அவையாவன, அவன் கதைத்தால் பொய் பேசுவான், வாக்குறுதியளித்தால் மீறி விடுவான், உடன்படிக்கை செய்தால் மோசடி செய்வான், தர்க்கிக்க நேரிட்டால் பிறரை அசிங்கப் படுத்தும் விதத்தில் நடந்து கொள்வான்.”அவன் நோன்பு நோற்றாலும், தொழுதாலும், தன்னை ஒரு முஸ்லிம் என்று அழைத்துக்கொண்டாலும் சரியே.”

அல்லாஹ் சூரா அஹ்ஸாப்பில் கூறுகிறான். “நிச்சயமாக நாம் அமானிதத்தை வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் மீது (அதைச்சுமந்து கொள்ளுமாறு) எடுத்துக்காட்டினோம். அப்போது அதைச்சுமந்து கொள்வதிலிருந்து அவை விளகிக்கொண்டன. இன்னும் அதை சுமப்பதிலிருந்து அவை பயந்தன. (ஆனால்) மனிதனோ அதனைச்சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன்(அமானிதத்தை நிறைவேற்றும் விசயத்தில்) பெரும் அநியாயக்காரனாக ( அதன் கடமையை) அறியாதவனாக இருக்கின்றான்.”( சூரத்துல் அஹ்ஷாப்: 72).இந்த குர்ஆன் அத்தியாயம் எம்மீது அல்லாஹ்வின் அமானிதம் சுமத்தப் பட்டுள்ளதாகவும், அதனை மனிதனோ விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. அமானிதமும், நம்பிக்கையும், சத்தியமும் செல்லாக்காசுகளாக இன்றைக்கு கருதப்படுகின்றன...தம்மீது சுமத்தப்பட்டுள்ள அமானிதங்களுக்கு மாறுதளான செயல்பாடுகளில் ஜமாஅத் நிர்வாக தலைவரும் , உறுப்பினர்களும் நடந்து கொள்வது ஊர் மக்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ரஸ}ல் (ஸல்) கூறுகிறார்கள்…“எவரொருவரிடம் நம்பகத்தன்மை இல்லையோ, அவரிடம் சத்தியம் அல்லது தீன் இல்லை. எவனொருவன் தனது வாக்குறுதியை அல்லது தான் செய்த சத்தியத்தினை நிறைவேற்ற இல்லையோ அவரிடம் தீன் இல்லை.” (அஹ்மத்)

இன்றைக்கு என்ன நடக்கிறது அமானிதத்தை அலட்சியம் செய்யும் செயல்கள் அல்லது அமானிதமாக ஏற்றுக்கொண்ட விஷயங்களை புறம் தள்ளிவிட்டு தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அமானிதங்களை மறந்து விடுகிற செயல்களை பார்க்கிறோம் அமானிதம் குறித்த இஸ்லாத்தின் கண்ணோட்டத்தையும், அதற்கு செய்யப்படும் துரோகம் முனாபிக் தனத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையையும் ஒரு முஸ்லிம் தெளிவாக புரிந்து கொள்வானாகில், அவன் அமானிதங்களை ஏற்றுக்கொள்வதை மிகவுமே பயப்படுவான். மேலும் அதனை ஏற்றுக்கொண்டு, பின் அதனை மீறுவதால் ஏற்படும் கெடுதலுக்கும் மிகவும் அஞ்சுவான்

“நீங்கள் எல்லோரும் பொறுப்பாளர்கள். உங்களுக்கு ஒப்படைக்கப் பட்ட பொறுப்புக்கள் பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். இமாம் ஒரு பொறுப்பாளர். அவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் அவரது குடும்பத்திற்கு பொறுப்பாளர். ஆவரது பொறுப்பு குறித்து அவர் விசாரிக்கப்படுவார். பெண் தனது கணவனின் வீடு (குடும்பம்) திற்கு பொறுப்பாளர். அவள் அது குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தனது எஜமானனின் பொருட்கள் குறித்த பொறுப்பாளி. அது குறித்து அவன் விசாரிக்கப்படுவான். தொடர்ந்து அந்த ஸஹாபி நான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறும் சொன்னார்கள் என நினைக்கிறேன் எனக்கூறிவிட்டு சொன்னார்கள்… தகப்பனின் பணத்தின் மீது பொறுப்பாளியான ஒரு மனிதன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நீங்கள் எல்லோரும் பொறுப்பாளிகளே. உங்களுடைய பொறுப்புக்கள் குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.” (புஹாரி)

சில சமயம் ஒரு சில கருத்து வேறுபாடுகள் நம்மிடையே ஏற்படுவதை தவிர்க்க முடியாது ... ஆதி மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே எல்லா காலகட்டத்திலும் நடந்ததுள்ளது. கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமானதாக இருந்தால் , உண்மையின் அடிப்படையில் இருந்தால் அதனால் நன்மை விளையும் ஒரு பிரச்சனையின் பல கோணங்கள், தெளிவுகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும். தவறு செய்தவர்கள் திருந்த வாய்ப்புகள் உண்டு இது பல நன்மைகளை விளைவிக்கவும் செய்யலாம் . ஆனால் வேண்டுமென்றே உண்மையுமில்லாத கருத்து வேறுபாடுகள் EGO வால் பிரச்சினைகளை உருவாக்கி குழப்பம் செய்து சுய நம்பிக்கையின் விளைவால் அடாவடியாக நடந்து கொண்டு அல்லது அவர்களுக்கென்று ஒரு பிரிவாரைச் சேர்த்துக் கொண்டு சண்டைகளை பந்தி போட்டு சந்தி சிரிக்க செய்து விடுகிறார்கள் ...

உத்தம சஹாபாக்கள் காலத்திலேயே கருத்து வேறுபாடுகளால் எதிரும், புதிருமான இருந்த இரு தரப்பினரும் அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கே உரிய பிரச்சினைகளுடனும், அவர்களுக்கே வழிமுறைகளுடனும் அமானிதத்தை பேணி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கூட இருந்த நபித்தோழர்களுக்கே ஃபிக்ஹு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதே போல் 'இஜ்திஹாது' செய்யும் முஜ்தஹிதீன்களிடமும் கருத்து வேறுபாடுகள் நிலவின.ஆனால் கண்ணியமிக்க நபித்தோழர் களோ, மதிப்புமிக்க முஜ்தஹிதீன்களோ அவைகளைச் சண்டைகளாக மாற்ற வில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபட்டார்கள். ஆனால் அவர்களிடையே நிலவி வந்த அன்பையும் அரவணைப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. அவைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் பொன்னொளி மேல் மின்னியது..

ஆகவே எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே !... அமானிதங்கள், பொறுப்புகளை விலகிச்செல்வதிலிருந்து தவிர்ந்து அதனை நம்மால் முடிந்தவரை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அதிகளவில் நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் சமுதாய மக்கள் அமைதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ வழி செய்ய வேண்டும் இதில் ஜமாஅத் தலைவருக்கு முக்கிய பங்குண்டு அதன் நிர்வாகிகள் , மக்கள் என எல்லா தரப்பினரும் தங்கள் அமானிதத்தை உணர்ந்து முஸ்லிமாக செயல்பட வேண்டும் இன்ஷா அல்லாஹ் ....

முக்கிய குறிப்பு : ஜமாஅத் தலைவர் அவரின் தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான நான் அறிந்த சில நல்ல கருத்துக்கள் இப்பதிவின் முதல் பின்னூட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.. ஜமாஅத் தலைவர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இது சென்றடையும் என்றும் நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ் ....


தக்கலை கவுஸ் முஹம்மத் - தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails