
சுட்டெரிக்கும் சூரியன் – அவர்
பட்டு மேனியைச்
சுட்டுவிடுமோ என்று
நடைபயின்ற நாயகத்தை
குடைபிடித்த மேகத்தை
இடை மறித்து கேளுங்கள்
விடையைக் கூறும் !
* * *
யார் இவர்?
வானில் உலாவரும்
வண்ண நிலாவை
வழிமறித்துக் கேளுங்கள்
தன்
தேகத்தையே இருகூறாய்
வகிர்ந்துக் காட்டும் ..
பிளந்துக் காட்டியதே – அந்த
பெருமான்தான் என
பெருமை கொள்ளும் !
* * *
யார் இவர்?
எச்சிலை வலையாய்ப் பின்னி
எதிரிகளிடமிருந்து
ஏந்தலைக் காப்பாற்றிய
எட்டுக்கால் பூச்சியை
எதிர்க்கொண்டு கேளுங்கள்
அந்த
ஈருலக அரசர்
யாரென்ற உண்மையை
பாரறிய பறைசாற்றும் !
* * *
எந்தத்
திருப்பெயரை செவிமடுக்கையில்
பெருவிரலின் நகக்கண்கள்
இருகண்களில் முத்தம் பதிக்குமோ
அந்தப் பெயருக்குச்
சொந்தக்காரர் இவர்
மதுரமான இப்பெயரை
அதரங்கள் உச்சரிக்க
சதுரமெலாம் பூரிக்கும்
இந்த
வீரிய விதை
பூமியில் விழுந்ததால்
இசுலாமெனும் ஆலமரம்
விசுவரூபமெடுத்து
விருட்சமாகியது
இவர்
கால் பதித்த இடமெல்லாம் – இன்று
கனிம வளம்
பாதம் பட்டதினால்
பாலைவனமெல்லாம்
சோலைவனம்
* * *
இரத்தினக் கற்களை
ஆபரணமாக்கி
ஆடம்பரமாய் வாழ்ந்த
அரசர்களுக்கு மத்தியில்
பாடாய்ப்படுத்திய
பசியைப் போக்க – வயிற்றில்
பாரக்கற்களை கட்டிக்கொண்ட
பரந்த தேசத்து பேரரசர் இவர்
* * *
இவர்
செங்கோல் செலுத்திய
ஆட்சியின் மாட்சியை
ஏட்டில் வரைத்திட
எழுதுகோல் காணாது
எடுத்துரைக்க
எஞ்சியுள்ள வாழ்நாளும்
எமக்குப் போதாது
சரித்திர நாயகர்களில்
இவருக்குத்தாம்
முதலிடம்
வரலாற்று பக்கங்கள் -
வரிந்து வந்து
திறந்த நெஞ்சில் – இவரது
வாழ்நாட் சாதனையை
பச்சை குத்திக் கொண்டதோ?
* * *
ஒரு விடியலைத் தந்த
குளிர் நிலவு இது
இறைவனின் தூது
இவரால்தான் நிறைவு
இவரது
அரியாசனத்திற்கு
சரியாசனம் .. ..?
ஊஹும் ..
எதுவும் கிடையாது
அண்டவனின்
அருள் மழையில்
அருட் கொடையாய்
வந்த மழைத்துளி
அகிலமே இதில் நனைந்தது
ஆதாயம் தேடி
இவரது உபதேசம்
சென்றடைந்தது பலதேசம்
இவரது இறைபோதம்
பாவக்கறைகளை
போக்கிவிடும் சவுக்காரம்
* * *
பாரசீக சல்மானையும்
ரோம நாட்டு சுஹைலையும்
அபிசீனிய பிலாலையும்
அன்பால் ஈர்த்த
ஐக்கியப் பேரவையின்
அதிபர் இவர்.
சர்வதேச பேரவையின் – இந்த
சர்தாரின் விரலசைப்பிற்கு
சகல உடமைகளையும்
சத்திய வழியில்
தியாகம் செய்தனர்
திண்ணைத் தோழர்கள்.
“இறைவனும்
இறைவனின் தூதரும்
இருப்பது போதும்” என்று
இருந்த செல்வம்
எல்லாவற்றையும்
ஈந்து மகிழ்ந்த அபூபக்கரின்
ஈடற்ற அன்புக்கு
உரித்தானவர் இவர்
எந்தப் பல் வீழ்ந்ததென்று
ஏதும் அறியாது – தன்
சொந்தப் பல் அத்தனையும்
ஒவ்வொன்றாய் தகர்த்துக்கொண்ட
உவைசுல் கர்னியின்
உண்மையான அன்புக்கு
உவப்பான மனிதரிவர்
* * *
அழுது அழுது
பழுதான கண்கள்
தொழுது தொழுது
துவண்டுப்போன கால்கள்
படைத்தவனுக்கு முன்
பதைபதைத்த – இந்த
பரிசுத்துவானின்
பயபக்திக்குமுன்
பாவமூட்டைகளைச் சுமக்கும்
நம் இறையச்சம் எம்மாத்திரம்?
“பகலவனை ஒருகையில்
பால்நிலவை மறுகையில்
பகிர்ந்தெமக்குத் தந்தாலும்
பற்றியுள்ள கொள்கையினை
சற்றும் விடமாட்டோம்” என்று
சூளுரைத்த சீலர்
* * *
எஃகைக் காட்டிலும்
இறுக்கம் கொண்ட
ஈமான் பலம் கொண்ட
கோமானின் நெஞ்சம்
இலவம் பஞ்சைக் காட்டிலும்
இலகிப்போன உள்ளம்.
ஆருயிர் சிறிய தந்தை
வீரமிகு ஹம்ஸாவின்
மாரைப் பிளந்து
ஈரற்குலையை எடுத்துருவி
ஆரமாக்கி அணிந்து
ஆனந்தக் கூத்தாடிய
அல்லிராணி ஹிந்தாவை
அன்போடு மன்னித்த
அண்ணலாரின் இதயம்
அகிலமே வியக்கும் அதிசயம் !
* * *
ஹீரா குகை தவசி
சீறா புகழ் குறைஷி
வாராது வந்த மாமணி – இந்த
பாருலகம் போற்றும் மாமுனி
இறைமறைக்கு
விளக்கவுரை
எழுத நினைத்த இறைவன் – அதை
இரத்தமும் சதையாக்கி
இரசூலை அனுப்பினான் போலும்.
* * *
ஆறடி அகலம்
ஏழடி நீளம்
அரபகம் ஆண்ட இந்த
அண்ணலாரின் உறைவிடம்
உடுத்த ஒரு அங்கி
உலர்த்த ஒரு அங்கி
ஒட்டுத்துணி உடுப்பு
ஒன்றோ இரண்டோதான்
இவரது வஸ்திரம்
காலடியில்
பொக்கிஷங்கள் கிடந்தபோதும்
காய்ந்த ரொட்டிதான்
இவரது வஜீபனம்
ஓலைப்பாயே இவரது
சிம்மாசனம்
பள்ளிவாயிலே
தலைமைச் செயலகம்
வீட்டுத் திண்ணையும்
ஈச்ச மரத்தடியும்தான்
நாட்டை ஆண்ட இம்மன்னரின்
கோட்டை கொத்தளம்
தானே துணிதுவைத்து
தானே தையலிட்டு
தானே பால் கறந்த
தானைத் தலைவரை
நானிலமே வியக்கிறது !
பாதுகையை செப்பனிட்ட
பாதுஷாவை
படித்ததுண்டோ வரலாற்றில்?
எளிமையே இனிமையென
இன்பம் கண்டவர்
இவர்போல் எவருளர்?
கவிதை யாத்தவர் அப்துல் கையூம்
நன்றி : http://nagoori.wordpress.com **************************************************************************
No comments:
Post a Comment