Wednesday, July 21, 2010

குருட்டுக் கழுதை

by: nagoorumi
போபாலில் விஷவாயுக் கசிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் இறந்தும் — 15000 என்று சொல்லப்படுகிறது — போய் 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அந்த பாதிப்புக்குக் காரணமாக அல்லது அதைக் கண்டு கொள்ளாமல் இருந்த குற்றவாளிகள் என்று ஏழு பேரை நீதிமன்றம் முடிவு செய்து அவர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இன்று வரை விஷ வாயுக் கசிவினால் கற்பனைக்கு எட்டாத அளவிலான பாதிப்புகள் இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கும்கூட ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தில் கைவிடப்பட்டுக் கிடக்கும் 390 டன் எடை கொண்ட பல விஷ வாயுக்கள் இன்றளவும்கூட கசிந்து கொண்டு சுற்றுப் புறச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்திக்  கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
விஷ வாயு ஏற்படுத்திய பாதிப்பைவிட அதிகமான வலியை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பு குற்றத்திற்குப் போதுமானதாக, அதாவது proportionate-ஆக இல்லை என்று முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூட நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
அடுத்தது காலதாமதம். (எட்டாவது குற்றவாளி தீர்ப்பு வருமுன் இறந்தே போய்விட்டார்). ஒரு கணத்தில் நிகழ்ந்து விடும் துன்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமான குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு வழங்க பல யுகங்கள் எடுத்துக் கொள்வதன் பின்னணிதான் என்ன? சட்டத்துக்கு கண்தான் இல்லை, ஆனால் மனசாட்சியுமா இல்லை? Justice delayed is justice denied என்பதுதான் எவ்வளவு அழகான உண்மை!
பாபர் மசூதி இடிக்கப்பட்டு ஒரு மாமாங்கத்துக்கும் மேல் போன பிறகு 68 பேரைக் குற்றவாளிகள் என்று லிபர்ஹான் கமிஷன் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது?
ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றும் நடக்கவும் போவதில்லை.
மும்பை தாஜ்மஹால் ஓட்டல் வன்முறையில் பிடிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு அஜ்மல் கசாப்புக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட்ட போது ஒரு தொலைக்காட்சியில் மக்களை அது பற்றி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது, அவன் கை, கால்கள உடைத்து, கண்னை நோண்டி எடுத்துவிட்டு, ரயில்வே ப்ளாட்ஃபார்மில் விட்டுவிட வேண்டும். அதுதான் அவனுக்கு சரியான தண்டனையாக இருக்கும் என்று ஒரு பெண் கூறினார்.
அந்த நீதியுணர்வை, நாட்டுப் பற்றை நான் மதிக்கிறேன். ஒரு சாதாரண இந்தியப் பெண்ணுக்கு இருக்கும் நியாய உணர்வுகள்கூட நீதிபதிகளுக்கும், நீதியரசர்களுக்கும் இருக்காதா? அல்லது இருக்கக் கூடாதா?
சட்டப்படி இவ்வளவுதான் செய்ய முடியுமென்றால் சட்டத்தை முதலில் மாற்ற வேண்டியது அவசியம்.
ஜனநாயகம் என்ற குருட்டுக் கழுதையின் மீது இன்னும் எவ்வளவு காலம்தான் பொறுமையாக சவாரி செய்து கொண்டிருக்க வேண்டும்? கழுதை எப்போது பார்வையுள்ள குதிரையாகும்!
Source : http://nagoorumi.wordpress.comகுருட்டுக் கழுதை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails