Sunday, December 5, 2010

பாலஸ்தீன் நாட்டிற்கு பிரேசில் அங்கீகாரம்!

பாலஸ்தீனை அதன் 1967ஆம் ஆண்டின் எல்லைப்படி தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. பிரேசிலின் இந்த அறிவிப்பிற்கு இஸ்ரேல் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன அதிபர் அப்பாசுக்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா எழுதியுள்ள கடிதத்தில், 1967ஆம் ஆண்டின் எல்லைகளின் படி பாலஸ்தீனை தனி நாடாக பிரேசில் அங்கீகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 24ஆம் தேதி பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் இதுதொடர்பாக விடுத்த வேண்டுகோளை அடுத்து இம்முடிவை அறிவித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறுத்துறை அமைச்சகத்தின் இணையதளம் கூறியுள்ளது.

மதிப்பிற்குரிய அப்பாஸின் வேண்டுகோளை பிரேசில் அரசு பரிசீலனை செய்ததில் இந்த வேண்டுகோள் பாலஸ்தீன் பிரச்சனையில் பிரேசிலின் கொள்கைகளுக்கு உட்பட்டு இருந்ததை அடுத்து, 1976ஆம் ஆண்டின் எல்லைகள் படி பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரித்துள்ளதை இந்தக் கடிதத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் என்ற நாட்டுடன் நல்லுறவைப் பேணும் அதேவேளை தங்களின் பாதுகாப்பு, ஒற்றுமை, ஜனநாயகம் மற்றும் பொருளாதார மேம்பாடு இவற்றிக்கு தனி நாடு வேண்டும் என்ற பாலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான விருப்பத்தை ஒட்டி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

1947 முதல் 2000 வரை பாலஸ்தீன வரைபடம்
1947 முதல் 2000 வரை பாலஸ்தீன வரைபடம்
பிரேசிலின் இந்த முடிவு தங்களுக்கு கவலை அளித்திருப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளது. பிரேசில் அதிபர் தன்னுடைய பதவியில் விலகுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் எடுத்துள்ள இந்த முடிவுக்கு தன்னுடைய வருத்தத்தையும் விருப்பமின்மையையும் தெரிவித்துக் கொள்கிறது எனறு இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்  சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீன் என்றொரு நாட்டை அங்கீகரிப்பது, 1995ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசுக்கும் பாலஸ்தீன அதாரிட்டிக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முறிக்கும் செயல் என்றும் இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீன் என்றொரு நாட்டை பேச்சுவார்த்தைகள் மூலமே உருவாக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீன் மக்களின் குடியிருப்புகளை இடித்துவிட்டு அங்கு யூதக் குடியிருப்புகள் அமைக்கும் பணிகளை இஸ்ரேல் நிறுத்தும் வரை தாம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று பாலஸ்தீன அதிபர் அப்பாஸ் கூறியுள்ளார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails