Saturday, April 17, 2010

தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள்

தமிழ முஸ்லிம் அறிவியல் கலைக் கல்லூரிகள்   
இஸ்லாமியா கல்லூரி வாணியம்பாடி

வட ஆற்காடு மாவட்டம் வாணியம் பாடி முஸ்லிம்கள், 'வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம்' என்ற அமைப்பை 1903ம் ஆண்டு தொடங்கினர். சர் சையத் அஹமத்கானின் கருத்துகளால் உண்டான எழுச்சியே இவ்வமைப்பின் தோற்றத்திற்குக் காரணமாகும். 1905ம் ஆண்டு வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் பதிவு செய்யப்பட்டது. இஸ்லாமியா தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. ஜனாப் டி.ஹாஜி பத்ருதீன், ஜனாப் மலங் ஹயாத் பாஷா, ஜனாப் டி.அமீனுதீன், ஜனாப் மலங் அஹமது பாஷா ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் தொடக்கப்பள்ளி 1912ம் ஆண்டு இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது.

1916-ம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரிக்கு பெண்ட்லேண்ட் பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது. நவாப் சி. அப்துல் ஹக்கீம் போன்ற கொடையாளிகளின் உதவியால் 1919ம் ஆண்டு இஸ்லாமியா கல்லூரி தொடங்கப்பட்டது.

புதுக்கல்லூரி சென்னை

புதுக்கல்லூரி சென்னை 1901ம் ஆண்டு தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கம் பிறந்தது. 1912ம் ஆண்டு முஸ்லிம்களுக்காக ஒரு கல்லூரி தொடங்க வேண்டும் என மியாசியின் அப்போதையத் தலைவர் நீதிபதி அப்துர் ரஹீம் தீர்மானித்தார். உஸ்மானியா கல்லூரி என்ற பெயரில் அக்கல்லூரி அமைய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மதரழ்ஸ ஆஸம் பள்ளியில் இன்டர் மீடியட் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
1948-ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமது சயித் மியாசியின் செயலாளராக இருந்தபோது, ஆடவர் கல்லூரி தொடங்க அனுமதி கோரும் ஆவணங்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டன. 1951ம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியும், இணைப்பும், கிடைத்தது. லண்டன் ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்தின் நியூ காலேஜை முன்மாதிரியாக்கி புதுக்கல்லூரி தொடங்கப்பட்டது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி

விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த கல்வியாளரும், காந்தியடிகளின் மிக நெருங்கிய நண்பருமான ஜமால் முஹம்மது, ஜனாப் என்.எம்.காஜா மைதீன் ராவுத்தர் மற்றும் மஜ்லிஸுல் உலமாவினர் இணைந்து, 1951ம் ஆண்டு புகழ் பெற்ற ஜமால் முஹம்மது கல்லூரியை நிறுவினர்.

ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி (SIET) சென்னை

தென்னிந்திய கல்விச் சங்கம் 1951ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமத் சயீத் அவர்களால் தொடங்கப்பட்டது. இச்சங்கத்தின் சார்பாக 1955ம் ஆண்டு நீதிபதி பஷீர் அஹமத் சயீத் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது. புகழ்பெற்ற இக்கல்லூரியில் பெரும்பான்மையாக முஸ்லிம் பெண்களும், சகோதர சமுதாயப் பிரமுகர்களின் பெண்களும் பயின்று பயன்பெறுகின்றனர்.

காதிர் முகைதீன் கல்லூரி அதிராம்பட்டினம்

எம்.கே.என்.மதரஸா அறக்கட்டளை யால் காதிர் முகைதீன் கல்லூரி துவங்கப்பட்டது. மிகப்பெரும் புரவலரான காதிர் முகைதீன் மற்றும் அவரது சகோதரர்களால் மதரஸா அறக்கட்டளைத் தொடங்கப்பட்டது. ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுத்தீன் அவர்களால் 1955ம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரி தொடங்கப்பட்டது.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் ஏழை, எளிய மக்களும், குறிப்பாக மிகப் பெரும்பான்மையாக முஸ்லிமல்லாத சமுதாயத்தினரும் கல்வி பெற்றுப் பயனடைகின்றனர்.

ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி உத்தமபாளையம்

கருத்த ராவுத்தர் என்ற பெயரால் அறியப்படும் எஸ்.முஹம்மது மீரான் இக்கல்லூரியை நிறுவினார். 1956ம் ஆண்டு முதலமைச்சர் காமராஜர் இக்கல்லூரியைத் தொடங்கி வைத்தார்.

சி.அப்துல் ஹக்கீம் கல்லூரி மேல்விஷாரம்

1919-ம் ஆண்டு துவங்கப்பட்ட மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கம், அதன் நிறுவனரான சி.அப்துல் ஹக்கீம் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 1965ம் ஆண்டு சி.அப்துல் ஹக்கீம் கல்லூரியைத் துவங்கியது.

முஹையத் ஷா சர்குரு வக்ஃப் வாரியக் கல்லூரி மதுரை

ஜனாப் ஹீராபாய் மற்றும் கோரிப்பாளையம் எம்.அப்துல் காதர் (எம்.ஏ.கே) ஆகியோரின் பெருமுயற்சியால் திரு. எஸ்.ஜெ.சாதிக் பாஷா அவர்கள் வக்ஃப் வாரிய அமைச்சராக இருந்தபோது எம்.எஸ்.எஸ்.வக்ஃப் வாரியக் கல்லூரி ஜூலை 25, 1968ம் ஆண்டில் தொடங்கப் பட்டது.

மஸ்ஹருல் உலூம் கல்லூரி, ஆம்பூர்

ஆம்பூர் முஸ்லிம் கல்விச் சங்கத்தால் 1969ம் ஆண்டு மஸ்ஹருல் உலூம் கல்லூரி துவங்கப்பட்டது.

டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி
அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ''அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம்'' என்று முழுமையாக‌ தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்து, 1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டது.

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திருநெல்வேலி

முஸ்லிம் சமுதாயத்தில் அறியாமை இருளை அகற்ற ஆர்வம் கொண்ட முஸ்லிம் ஆர்ஃபனேஜ் கமிட்டி நிர்வாகிகளும், சமுதாயப் புரவலர்களும் இணைந்து, ஜூலை 1, 1971ம் ஆண்டு நெல்லை பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியைத் தொடங்கினர்.

காயிதேமில்லத் கல்லூரி மேடவாக்கம், சென்னை

காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையால் 24.07.1975ல் சென்னை மேடவாக்கத்தில் காயிதே மில்லத் கல்லூரி தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மக்களும், பெரும்பான்மையாக முஸ்லிமல்லாதோரும் இக்கல்லூரியால் பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் கலைக்கல்லூரி திருவிதாங்கோடு
1981-ம் ஆண்டு உருவான முஸ்லிம் கல்விச் சங்கத்தின் முயற்சியால் 1982ம் ஆண்டு திருவிதாங்கோட்டில் முஸ்லிம் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது

தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, கீழக்கரை

சீதக்காதி அறக்கட்டளையால் 1988ம் ஆண்டு தாஸிம் பீவி மகளிர் கல்லூரி துவங்கப்பட்டது. பெண்கள் உயர் கல்வி பெற இக்கல்லூரி பெரிதும் உதவுகிறது.

முஹம்மது சதக் கலை அறிவியல் கல்லூரி, சோழிங்கநல்லூர்- சென்னை
1973-ம் ஆண்டு உருவான முஹம்மது சதக் அறக்கட்டளையால் 1991ம் ஆண்டு சென்னை சோழிங்கநல்லூரில் முஹம்மது சதக் கல்லூரி தொடங்கப்பட்டது.

ராஜகிரி, தாவூத் பாட்சா கலை, அறிவியல் கல்லூரி லி பாபநாசம்

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாட்சாவால் துவங்கப்பட்ட இக்கல்லூரி, தரமான உயர்கல்வியை மாணவர்களுக்குத் தந்து வருகிறது.

ராபியாம்மாள் மகளிர் அறிவியல் கலைக்கல்லூரி, திருவாரூர்

திருவாரூரில் ராபியாம்மாள் அறிவியல் மகளிர் கலைக்கல்லூரி ஆடிட்டர் மிஸ்கீனின் முயற்சியில் இயங்கிவருகிறது.

மேற்கண்ட கலை, அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாமல், ஏராளமான பொறியியல் கல்லூரிகளும், தொழில் நுட்பக் கல்லூரிகளும் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்கண்ட நிறுவனங்களால் அனைத்து சமுதாய மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர்.

கலை, அறிவியல் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் எனப் பல்வேறு கல்லூரிகளை முஸ்லிம்கள் நடத்திய போதும், மருத்துவக் கல்லூரி மட்டும் ஒரு நெடுநாள் கனவாகவே இருந்து வருகிறது.

www.nidur.info

2 comments:

Ahamed irshad said...

நல்ல தொகுப்பு அருமை....

RAJ said...

VERY INFORMATIVE ARTICLE

LinkWithin

Related Posts with Thumbnails