Monday, April 19, 2010

கவிதை : சொல்ல மறந்த கவிதை

வெள்ளைப் புன்னகையால்
என் மனதில்
கனவுகளின் நிறம் ஊற்றிய
சின்னப் புறாவே.
புன்னகை மின்னலால்
என்
இதய வானத்தில்
வெள்ளை வேரிறக்கியவள்
நீ.
இதயத்தின் ஒருபாகம்
இருண்டு தான் கிடந்தது
உன்
வெள்ளிக் கொலுசுகளின்
வெள்ளை மணிகள் தான்
அதை
துலக்கிவைத்துப் போயின.
தரை மோதும் முன்
முகம் மோதும்
ஓர்
பனித்துகளின் மென்மை
உன் புன்னகையில்.
நிறம் மாறா
அடர் வெண்
மேகத்தின் மென்மை
உன் கன்னங்களில்.
கவலைக் குவியலில்
கூட
வெள்ளைப் பூக்களை
விளைவிக்க
உன்னால் எப்படி முடிகிறது ?.
என்
கருப்பு இரவுகளில்
தினம் தினம்
பௌர்ணமியாய் உலவ
உன்னால் மட்டுமே முடிகிறது.
உன் கண்களில்
தூண்டில்கள் இல்லை,
ஆனாலும்
மாட்டிக் கொள்ளவே
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்.
உச்சந்தலையில்
ஒற்றை விரல் கோடிழுத்து
மூக்கு வரை
வரும்போதே
நான்
மூச்சிழந்து போகின்றேன்.
உதடுகளைத்
தீண்டும் வரை
உயிர் வாழ விழைகின்றேன்.
கனவுகள் அகல,
விரல்கள் விலக
வெயில் வந்து தாக்குகையில்
சுள்ளெனச் சுடுகிறது
சொல்லாத காதல்.
வருகிறது
காதலர் தினம்.
அப்போதேனும் சொல்வேனா ?
இல்லை
கனவுகளில் மட்டுமே வெல்வேனா ?
கவிதை : சொல்ல மறந்த கவிதை 
நன்றி : http://xavi.wordpress.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails