Sunday, May 30, 2010

வணங்காமுடி பதில்கள் (23-05-2010)


கசாப் - கசாப்பு கடைக்காரனா? பலி ஆடா? -மன்சூர்
சட்டப்படி கசாப்புக்காரனே! நீதிமன்றம் அவனுக்குத் தண்டனை வழங்கிவிட்டதே!

பலி ஆடாகவும் கொள்ளலாம்.. பாகிஸ்தான் கொடுத்த பலி.


கருணாநிதியிடம் தங்களுக்கு பிடித்தது எது?-ராஜேஷ்

ஓய்வில்லா உழைப்பு.

தளர்வில்லாத் தன்னம்பிக்கை.

தோல்விகண்டு துவளா உறுதி.

அரசியல் அனுபவம்.



வீரப்பன் இருக்கும் வரை ஹொகேனக்கல் பிரச்னையை கர்நாடகம் கிளப்பவில்லை என்கிறாரே இயக்குநர் சீமான்? -வலசை முகைதீன்

தமிழ்த் தேசீய அரசியல் பேச்சு.

அப்போது தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் வீரப்பன் மட்டுமே பிரச்சனை.
அது ஓய்ந்ததால் அடுத்தது முளைத்துள்ளது..

வாட்டாள் நாகராஜ் தலைமையிலான சிறு கூட்டம், கன்னடர்கள் மீது தமக்கு மட்டுமே அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்வது போல் இவர்களும் தமிழர்கள் மீது தங்களுக்கு மட்டுமே அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்கின்றனர்.

அரசியல்...அரசியல்...


மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை அருந்ததிராய் போன்றவர்கள் ஆதரிக்கும் நோக்கம் என்ன? - அறிவழகன்

அரசே ஒப்புக் கொண்டது போல மலைமக்களுக்கு நலவாழ்வுத் திட்டங்கள் சென்றடையாததே!

லாலுப்ரஸாத் யாதவின் கருத்தையும் சேர்த்துக் கொள்க!

தீவிரவாதத்தை ஒழிக்க அதன் வேரைத் தேட வேண்டும்.

எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது தானே அடங்கிவிடும்.



கேரளாவில் நடிகர்கள் அரசியலுக்கு வரத் தயங்குவது ஏன்? - ரவி

தனித் தன்மையை இழக்க விரும்பாததால்..

மக்களும் நடிகர்களை நடிகர்களாகவே பார்க்க விரும்புகின்றனர்.

நடிகர் தேவன் ஒரு கட்சி ஆரம்பித்தார்; மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை மறைந்த நடிகர் முரளி மார்க்ஸிஸ்ட் கட்சி சார்பாகத் தேர்தலில் போட்டியிட்டார்; வெல்லவில்லை.


அடுத்த முதல்வராக குஷ்பு??? - ராகேஷ்

நோ சான்ஸ்! எம்ஜியார் துவக்கிய அ.இ.அ.தி.மு.க ஜெயலலிதாவின் கைகளில் வந்து விழுந்ததைப்போல ஒரு வாய்ப்பு, குஷ்புவுக்குக் கிடைக்கவில்லையே!


மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் சீனாவைப் போல் இந்தியா முன்னேறவில்லையே. ஏன்? - அப்துல் காதர்

குறைவான மக்கட்தொகை கொண்ட ஜப்பான் முன்னேறியது எப்படி?
முன்னேற்றத்துக்கு மக்கள் தொகை மட்டும் காரணமில்லை.

சீன மக்களின் வாழ்க்கை முறை, மனநிலை, உழைப்பில் உள்ள ஆர்வம் , சீன அரசின் சட்டங்கள், செயல்பாடுகள் போன்றவையும் காரணங்களாம்.


போகிற போக்கைப்பார்த்தால் wife இல்லாமல் இருந்துவிடலாம். wifi இல்லாமல் இருக்க முடியாது போலிருக்கே? - சர்தார்

அறிவியல் வளர்ச்சியால் உலகம் விரல் நுனியில்.
ஆனால் நீங்கள் சொல்வது சற்று அதிகம்.

மனைவி வாழ்க்கைத் துணை.

கம்பியில்லாத் தொடர்பு வழித்துணை.

நாளை அறிவியல் புதிதாய் ஒன்றைக் கண்டுபிடித்தால் நீங்கள் அதன் பின்னால் ஓடுவீர்கள்.

மனைவியை விட்டு ஓடமாட்டீர்கள்.


வேற்றுக்கிரக வாசிகள், பறக்கும் தட்டு எதையாவது பார்த்திருக்கிறீர்களா வ.மு? - ரகு

பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஆனால் என் இயல்பான எளிமைத் தோற்றத்தால் சில இடங்களில் /அவைகளில், சிலர் என்னை வேற்றுக்கிரகவாசியைப்போல் பார்த்துள்ளனர்.

செல்வத்தில் கொழிக்கும் சீமான்கள், கான்வெண்ட் படிப்பும் நுனிநாக்கில் ஆங்கிலமும் கொண்ட மேட்டுக்குடி மக்கள், அரசியல் அதிகாரத்தால் குவித்த பொருளாதாரத்தில் செழித்தவர்களின் குடும்பத்தார், உழைக்கும் ஏழைகளை உழைக்கும் ஏழை வகுப்பை வேற்றுக்கிரகவாசியைப்போல்தான் பார்க்கின்றனர்.


Consensual sex தவறில்லை என சொல்லும் நீதிபதிகள் விபச்சாரிகளை தண்டிப்பது ஏன்? - மரியதாசன்

சட்டம் அப்படிச் சொல்வதால்...
பதினெட்டுக்கு மேல் வயதுடைய ஓர் ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டு உடலுறவு கொள்வதைச் சட்டம் கண்டு கொள்வதில்லை. ஆனால் பெண் பதினெட்டு வயதிற்குக் கீழ் இருந்தால், இருவரும் விருப்பப்பட்டு உறவு கொண்டாலும் அது வன்புணர்ச்சி எனும் குற்றம் ஆகும்.

consensual என்பதில், premarital , extramarital , adultery, cohabitation ஆகியவை அடங்கும்.

prostitution மற்றும் rape ஆகியவை தண்டனைக்குரியவை.

ஒரு விடுதி அறையிலோ மறைவான ஒதுக்குப் புறத்திலோ ஓர் ஆணும் பெண்ணும் தனியாக இருப்பதால் காவல்துறை அவர்களைக் கைது செய்யவோ வழக்குப் போடவோ முடியாது.

சாலை ஓரங்களிலோ வழிப்பாதைகளிலோ நின்று ஆண்களை அழைப்பது, ஒரு அறையிலோ அல்லது வீட்டிலோ கட்டணம் பெற்றுக்கொண்டு பாலியல் சேவை அளிப்பது, தரகர்கள் மூலம் ஆள் பிடிப்பது போன்றவை விபச்சாரம் என்ற வரையறைக்குள் வருவதால் விபச்சாரி தண்டிக்கப்படுகிறாள்.

ஆனால் அதற்கு மருத்துவப் பரிசோதனை, விந்து மாதிரி போன்ற ஆதாரங்களும் சாட்சிகளும் தேவை.

அவளிடம் போன ஆண் சாட்சியாக மட்டுமே வழக்கில் சேர்க்கப்படுவான்.


மனதை காயப்படுத்தும் மனங்கொத்தி மனிதர்களை எவ்வாறு சமாளிப்பது? - தர்மலிங்கம்

சிலர் அப்படியே பழகி விட்டனர்.
IGNORE THEM.

எருதுப்புண் காக்கைக்குத் தெரியுமா?

உங்கள் முன்னேற்றத்தைத் தடை செய்யவே அவர்கள் முயல்கின்றனர் என்பதை உணர்ந்து கொண்டால் நீங்கள் தாமாகவே அவர்களைப் புறக்கணித்து விடுவீர்கள்.


காசு கொடுத்து கலவரம் செய்து மனித உயிர்களை பறிக்க நினைப்பவர்களுக்கு மனச்சாட்சியே இருக்காதா? - இஸ்மாயில்

இருந்தால் கலவரம் செய்ய மாட்டார்களே!

மனித வடிவில் விலங்குகள். அவைதாம் பிற விலங்குகளை வேட்டையாடும்.



கலைஞர் எஸ். வி.சேகரை நடிகவேள் எம்.ஆர். ராதாவுடன் ஒப்பிட்டிருக்கிறாரே? - அருணாச்சலம்

தாம் இறப்பது வரை, பெரியாரின் கொள்கைகளைப் பேசி, நாடகங்களின் வாயிலாய், திரைப் படங்களின் வாயிலாய் அவற்றைப் பரப்பி வந்தவர் எம்.ஆர்.ராதா.

தாம் ஒரு பார்ப்பனர் என்பதைப் பெருமையாகக் கருதிப்  பேசி வருபவர் நடிகர் எஸ்.வி.சேகர்.

எஸ்.வி. சேகர் தம் நிலையிலும் கருத்திலும் உறுதியாக நிற்கும்போது கருணாநிதி தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது.

அவர் மஞ்சள் துண்டு மட்டும் அணியத்துவங்கியபோதே அவரது பகுத்தறிவு பல்லிளிக்கத் துவங்கி விட்டது.

அவரது குடும்பத்துப் பெண்கள் கோவிலுக்குப் போவதும் நல்ல நேரம் மற்றும் சகுனம் பார்ப்பதும் சாயிபாபாவிடம் ஆசிபெற்றதும் நாடறிந்த ஒன்றுதான்.

கருணாநிதி சோதிடனின் ஆலோசனைக்கேற்பச் செயல்படுவதாக, மிக அண்மையில் செல்வி ஜெயலலிதா  கூறியதில் சிறிது உண்மை இல்லாமலில்லை.

கருணாநிதி ஒரு சந்தர்ப்பவாதி. தமக்குத் தேவைப்படும்போது பார்ப்பனன் / சூத்திரன் தத்துவத்தை உதிர்ப்பார். தேவையின்றிச் சாதியை இழுப்பார்.

எம்ஜியாரால் தாம் பெற்ற நன்மைகளையும் பயன்களையும் மறந்து எம்ஜியார் மலையாளி எனப் பிரித்துப் பேசினார்.

காவிரிப் பிரச்சனையால் கன்னடர்கள்  தமிழர்களைத் தாக்கி விரட்டிய நிலையிலும் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை "அன்புத் தம்பி" என்று பாசம்பொங்க அழைத்தார்.

தேவைப்பட்டால் "தாழ்த்தப்பட்டோரின் சம்பந்தி" என்பார்.

தேவைக்கேற்ப "ஒரு கையில் முஸ்லிம்லீக் கொடியைப் பிடித்தவன் நான்" என்பார்

ஒருமுறை ம.தி.மு.க. தலைவர் வைகோ "கருணாநிதி பிரச்சினைகளை ஊதிப் பெரிதாக்குகிறார்" என்று இயல்பாகச் சொன்னதைக் கருணாநிதி திரித்துத் தம் சாதியைக் குறிப்பிட்டு கோபாலசாமி பேசியதாகப் புலம்பினார்.

கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராயிருந்த, திருவட்டாறு தொகுதிச்  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆல்பன் இறந்து, அத்தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கியிருந்த சமயம்,  தேங்காய்ப்பட்டணத்தில் பிடிபட்ட தேங்காய் வடிவ குண்டுகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் மதத்தின் பெயர்கூறி இழிவாகத் திட்டுவதாகச் சட்டமன்றத்தில் இந்திய தேசீய லீக் உறுப்பினர் அப்துல் லத்தீப் வினா எழுப்பினார்.

காவல்துறையைக் கையில் வைத்திருந்த முதல்வர் கருணாநிதி ஒன்றில் அதை மறுத்திருக்க வேண்டும்; அல்லது "விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுப்போம்" என்று விடையிறுத்திருக்க வேண்டும்.

ஆனால் கருணாநிதியோ, இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தொகுதியின் நாடார்சாதி வாக்குகளைக் கவர " அந்த ஆய்வாளர் சிதம்பரநாதன் பிற்படுத் தப்பட்ட நாடார் சாதியைச் சேர்ந்தவர்; அவர் அப்படிப் பேசியிருக்கமாட்டார்" எனத் தேவையின்றிச் சாதியை இழுத்துப் பேசினார்.

லத்தீப், ஆய்வாளாரின்  சாதி குறித்து எவ்விதக் குறிப்பும் கொடுக்கவில்லை. இதர உறுப்பினர்களுக்கும் ஆய்வாளாரின் சாதிபற்றி அக்கறை   யில்லை .ஆனால் கருணாநிதி தம் தேவைக்காக வலிந்து சாதியை இழுத்தார். இதுதான் கருணாநிதியின் சந்தர்ப்பவாதம்.

எனவே, கருணாநிதி எஸ்.வி. சேகரை எம். ஆர். ராதாவுடன் ஒப்பிட்டுப் பேசியதில் வியப்பில்லை.
Source : http://www.inneram.com/201005238488/vanangamudi-answers-23-05-2010

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails