Sunday, May 9, 2010

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த ஷா ஃபைசல்!

முன்மாதிரி கஷ்மீரி முஸ்லிம்கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பள்ளி ஆசிரியரின் மகனும் காஷ்மீர் ஸ்ரீநகரைச் சேர்ந்த MBBS டாக்டரான இருபது வயதான ஷா ஃபைசல், சிவில் சர்வீஸ் UPSC-2010 தேர்வில் இந்தியாவிலேயே முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். கடந்த வியாழன் (06-05-2010) அன்று இந்திய UPSC தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், Union Public Service Commission (UPSC) exam சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றியும் பெற்று முதலிடம் பிடித்த முதல் காஷ்மீரி என்ற பெருமையையும் சுதந்திர இந்தியாவில் நான்காவதாக முதலிடத்தைப் பிடித்த முஸ்லிம் என்ற கூடுதல் பெருமையையும் இவர் தட்டிச் செல்கிறார். (இதுவரை முதலிடம் பெற்ற பலர் தமது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றதில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது)
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் "என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை!" என உற்சாகத்துடன் குதூகலிக்கிறார் ஃபைசல்.
"பெரிதாக எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற வெறி ஃபைசல் மனதில் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கும்!" என்கிறார் ஃபைசலின் தாய் முபீனா. இவர் காஷ்மீரில் ஒரு பள்ளி ஆசிரியை.
ஷா ஃபைசல் மற்றும் UPSC-2010 -  ஒரு பார்வை!
இவர் Jhelum Valley மருத்துவக் கல்லூரியின் 2008 ஆம் வருடம் பட்டம் பெற்றவர்.

2009 க்கான சிவில் சர்வீஸ் தேர்வுக்காக விண்ணப்பித்த 409,110 மாணவர்களில் - 193,091 மட்டும் ஆயத்த நிலை தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து வெளியான முடிவுகள் மூலம் 12,026 மாணவர்கள் மட்டுமே பிரதானத் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.


கடந்த மார்ச்-ஏப்ரல் 2010 இல் நடந்த சிறப்பியல்பு தேர்வு (பர்சனாலிட்டி டெஸ்ட்) க்காக 2,432 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


கடந்த 2009 ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 875 மாணவர்களில், 680 பேர் ஆண்கள் மற்றும் 195 பேர் பெண்கள்.
Rank
Roll No.
Name
1 025085 Shah Faesal
55 080934 Mohammed Y Safirulla K
74 271879 Mohd Shahid Alam
80 275973 Yunus
"இச்செய்தி எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் சேர்த்துள்ளது" கண்களில் நீர் கசிவதைத் தடுக்க இயலாமல் நா தழுதழுக்கிறார். தன் மகன் ஃபைசல் ஓய்வு நேரங்களை சமூக நலப் பணிகளிலும் தினசரிப் பத்திரிகைகளில் எழுதவும் கூடியவர் என தெரித்தார்.
கடந்த 2002ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தன் கணவர் குலாம் ரசூல் ஷாவை நினைவு கூர்கிறார்.
குடும்பத்தில் இவ்வாறு இழப்புகள் காஷ்மீரில் மிகவும் சகஜம். முபீனாவின் சகோதரர் இர்ஷாத்-தும் இதேபோன்ற ஓர் இராணுவ வீரரின் துப்பாக்கிக் குண்டிற்கு இரையானவர்.

"நான் வெற்றி பெற்றதாக அரசு அறிவித்துள்ள இந்நேரத்தில் என் தந்தையை மிகவும் எண்ணிப் பார்க்கிறேன்" என்கிறார் ஃபைசல்.

இந்திய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியடைந்து, காஷ்மீர மக்கள் நடத்தும் போராட்டங்கள் பற்றிய முழுமையாக அறிந்து வைத்துள்ள சமூக சேவகரான ஃபைசல், இந்திய அரசுக்கும் தமது காஷ்மீர மக்களுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட்டு - இதுநாள்வரை விரிசல் விட்டுப் போயிருந்த பிணைப்பினை வலுப்படுத்துவேன் என்று கண்களில் நம்பிக்கை பளிச்சிடும் உறுதியான குரலில் பேசுகிறார்.
வெற்றி பெற்ற செய்தி வெளியாகத் துவங்கிய நிமிடத்திலிருந்து மீடியாக்களின் வளையத்தை விட்டு வெளிவருவதற்கு திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் ஃபைசல், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் சிறிய பகுதியை சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
மீடியா: இந்தச் சாதனையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?
"என்னுடைய சமுதாயத்தின் மீது அழுத்தமாக சுமத்தப்பட்டுள்ள தவறான கருத்தாக்கத்தை என் சாதனை உடைத்தெறிய இந்த வெற்றி பெரும் உதவியாக இருக்கும்" என்கிறார் பைஸல். "காஷ்மீர் மக்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் வாழ்வு சிறந்த முன்னோடியாகத் திகழ்வேன். மேலும் என் மக்கள் அதிகமதிகம் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கலந்து கொள்ளவும் அவர்கள் வெற்றி பெறவும் கடுமையாக உழைப்பேன்"
"காஷ்மீரின் பிரச்னைகளை சரியாகப் புரிந்துள்ளவனும் நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளவன் என்ற நிலையில் என்னுடைய குறிக்கோளில் முதன்மையானதாக IAS இருக்கும் அடுத்ததாக IPS மற்றும் lFS என்கிறார்.
மீடியா: இந்த வெற்றிக்குக் காரணமாக யாரைக் குறிப்பிட விரும்புகிறீர்கள்?
நான் எந்த ஒரு பிரத்யேக பயிற்சியையும் எவரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை.
பயிற்சி நிலையங்களோ, கல்வி நிறுவன அமைப்புகளோ என்னுடைய புகைப்படத்தைக் காட்டி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள இயலாது. என்னுடைய மிகப் பெரிய ரோல் மாடலாகத் திகழ்ந்தவர் என்னுடைய தந்தை. எனவே என் தந்தையும் அவரைப் பறிகொடுத்து விட்ட அந்தச் சூழலிலும் எனக்கு உறுதுணையாக இருந்த தாயுமே இத்தனை வெற்றிக்கும் உரியவர்கள்.
மீடியா: அடிப்படையில் நீங்கள் ஒரு மருத்துவர். சிவில் சர்வீஸ் தேர்வுகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்ப முடிவு செய்தது எப்படி? எப்போது?
காஷ்மீரில் மருத்துவர்களுக்குத் தேவை அதிகமிருப்பதால் நான் மருத்துவப் படிப்பினைத் தேர்வு செய்திருந்தேன். Sher-I-Kashmir Institute of Medical Sciences இல் என்னுடைய பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றிருந்தேன். இருப்பினும் சவாலான துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. MBBS முடித்த கையோடு, டெல்லியில் இருந்தபடியே சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து விட்டேன்.
மீடியா: இந்த வெற்றியை எவ்வாறு கொண்டாடப் போகிறீர்கள்?

நாளை என்னுடைய குடும்பத்தினரைச் சந்திக்க ஸ்ரீநகர் திரும்புகிறேன். என்னுடைய இத்தனை வெற்றிகளுக்கும் காரணமான என்னுடைய தாயைக் கட்டித் தழுவி என் நன்றியை முதலில் தெரிவிப்பேன் என்கிறார் ஃபைசல்.

Source : http://www.satyamargam.com/1447 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails