Sunday, June 13, 2010

திமுகவில் சாமிகள் இணைவதால் மகிழ்ச்சி : கருணாநிதி!


முத்துசாமி, சின்னசாமி போன்ற ஈ.வே. ராமசாமியின் வழியில் வந்த சாமிகள் திமுகவில் இணைவதால் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். முன்னாள் அமைச்சர் முத்துசாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அவர்களை வாழ்த்தி கருணாநிதி பேசியதாவது:

திராவிட முன்னேற்றக்கழகம் மேலும், மேலும் வளருகிறது என்பதைவிட- வலுப்பெறுகிறது என்பதற்கு அடையாளமாக இந்நாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. முத்துசாமி என்றைக்கோ இந்த இயக்கத்திற்கு வந்திருக்க வேண்டியவர் என்று நம்முடைய என்.கே.கே.பெரியசாமி இங்கே குறிப்பிட்டார். ஈரோடு மாவட்டத்தில் - அந்நாள் ஈரோடு மாவட்டத்தில் - திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்ப்பதற்கு, இந்த கழகத்திற்கு செல்வாக்கு சேர்ப்பதற்கு, வலிமை தேடுவதற்கு என்றிருந்த எண்ணற்றோரில் நம்முடைய முத்துசாமியும் ஒருவர் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், ஏதோ ஒரு வெளியிட முடியாத நிலைமை தடையாக இருந்து, இத்தனை நாள் அவரையும், நம்மையும் பிரித்திருக்கிறது என்பதை மாத்திரம் உணர முடிகிறது. அது என்னத் தடை என்பதையெல்லாம் இங்கே நான் விளக்க விரும்பவில்லை, அவரும் விளக்கவில்லை. விளக்கமாட்டார். விளக்கக்கூடாது என்பதால்!

அவர் இங்கே பேசும் போது எத்தகைய பண்பாடு, எந்த அளவுக்கு அரசியல் நாகரிகம் என்பதையெல்லாம் அவர் பேசிய நேரத்தில் நீங்களும் கண்டீர்கள், நானும் கண்டு வியந்தேன். ஏன், யார் யாரோ பேசுகிறார்கள், அதையெல்லாம் கேட்டு எத்தகைய பண்பாடு, எத்தகைய அரசியல் நாகரிகம் என்றெல்லாம் சொல்லாத நீங்கள், முத்துசாமியின் பேச்சைக் கேட்டு மாத்திரம் எத்தகைய அரசியல் பண்பாடு, நாகரிகம் என்று சொல்கிறீர்களே, என்ன காரணம் என்று கேட்பீர்களேயானால், அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்கள் அத்தனை பேரும் - இத்தகைய நாகரிகத்தோடு, இத்தகைய பண்பாட்டோடு நம்மிடத்திலே வந்துசேரவில்லை.

நேற்றைக்கு - நேற்றைக்கு முன்தினம் - அதற்கு முன்தினம் - அல்லது சில நாட்களுக்கு முன்பு-மன்னிக்க வேண்டும்- அதற்கு பல நாட்களுக்கு முன்பு கூட அ.தி.மு.க.விலிருந்து பிரிந்து வந்து நம்முடைய இயக்கத்திலே சேர்ந்தவர்கள்-வந்த பிறகு வாழ்த்தியிருக்கிறார்கள், நான் இல்லை என்று மறுக்கவில்லை - ஆனால் வராமல் அங்கே இருந்த போது எந்த அளவிற்கு என்னையும், இந்த கழகத்தையும் வசை பாடி இருக்கிறார்கள் என்பதை நான் மறக்கவில்லை. மறக்கவில்லை என்றால் நினைத்துக் கொண்டே ஏதாவது செய்வேனோ என்று அவர்கள் கருதத் தேவையில்லை. அவைகளை எல்லாம் அப்பொழுதே மறந்து விட்டக் காரணத்தினால், அவர்களுடைய பேச்சிலே உள்ள நாகரிகத்தை, பண்பாட்டை இங்கே நான் வியந்து போற்றி அவர்களை எல்லாம் இந்த இயக்கத்திலே இணைத்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், முத்துசாமி அங்கே இருந்த போது கூட, எந்த கூட்டத்திலும், எந்தப் பேச்சிலும் தி.மு.க.வையோ, என்னையோ அல்லது நம்முடைய பேராசிரியரையோ கடுமையான வார்த்தைகளால், தடித்த வார்த்தைகளால் விமர்சித்தார் என்றில்லை. அப்படி விமர்சித்தால் தான் அங்கே இடம் என்ற அளவிற்கு அந்தக் கூடாரம் இருந்த போது, அதைப்பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வழியில், தன்னுடைய பாதையில் சென்று என்னிடத்திலே அன்றும் இதே நாகரிகத்தோடு பழகிய ஒரு தம்பி என்ற காரணத்தால் தான் இன்றைக்கு அவர் இங்கே வந்து இணைகின்ற நேரத்தில் ஒரு இனம் அறியாத அன்பு அவரிடத்திலே நமக்கு ஏற்பட்டிருக்கின்றது, அவருக்கும் ஒரு இனம் அறியாத அன்பும் உறவும் நம்மிடத்திலே ஏற்பட்டிருக்கின்றது.

அவர் பேசும் போது ஸ்டாலினை பலமுறை சந்தித்திருக்கிறேன் என்று சொன்னார். எனக்குத் தெரிகிறது - ஸ்டாலின் இப்படிப்பட்ட மாற்றுக் கட்சி நண்பர்களை அடிக்கடி சந்திக்கின்ற போதெல்லாம் நான் இப்படி சந்திப்பது தேவையா என்று கூட கருதியது உண்டு. அது தேவை தான் என்பதை இன்றைக்கு நான் உணருகிறேன். ஏதோ ஸ்டாலினை அனுப்பி அவர்களை எல்லாம் இங்கே அழைத்து வருகிறேன் என்று பொருள் அல்ல. யார் யார் அவர்கள் இருக்கின்ற இடத்திலே ஆபத்துக்கு உள்ளாகிறார்களோ, யார் யார் கொடுமைக்கு உள்ளாகிறார்களோ - இங்கே சொன்னாரே, 15 ஆண்டு காலம் தூக்கம் இல்லாமல் இருந்தேன் என்று - யார் யார் பல ஆண்டு காலம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்களோ அவர்களின் துக்கம் போக்க - அவர்களின் கஷ்டத்தை நீக்க - அவர்களை உரிமையோடு இந்த இயக்கத்தை இணைந்து நடத்த அழைக்கின்ற தம்பியாக நம்முடைய தம்பி ஸ்டாலின் பல நேரங்களில் பயன்பட்டு வருகிறார்.

அவர் சொன்னார் - நாடே திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு ஸ்டாலின் தன் தொண்டினை ஆற்றி வருகிறார் என்றார். நாடு திரும்பிப் பார்க்கிறதோ இல்லையோ - முத்துசாமி திரும்பிப் பார்த்து இன்றைக்கு நம்மோடு இணைந்திருக்கிறார். அதற்காக ஸ்டாலினையும் பாராட்டுகிறேன், ஸ்டாலினின் பார்வைக்கு பொருள் புரிந்து கொண்ட முத்துசாமியையும் பாராட்டுகிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கம் உடைந்து விடக் கூடாது, பிளவு பட்டு விடக்கூடாது, அப்படி பிளவுபடுவதால், உடைவதால் மெலிந்து விடக் கூடும். அந்த மெலிவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஏற்படுமேயானால், அது யாருக்குப் பயன் உடையது?. திராவிடர் அல்லாதோருக்கு, திராவிடர் இயக்கத்தின் பகைவர்களுக்கு தான் அதனால் மகிழ்ச்சி.

ஏழை எளிய மக்களுக்காக சாதாரண மக்களுக்காக, சமான்ய மக்களுக்காக, அடித்தட்டு மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக-ஒதுக்கப்பட்ட மக்களுக்காக நாம் ஆற்றியிருக்கிற பணிகள் எல்லாம் நம்முடைய எண்ணத்திலே உதித்தவை அல்ல. இதையெல்லாம் தந்தை பெரியார் சுட்டிக்காட்டி, அண்ணா வகுத்து கொடுத்து, அவர்களுடைய கட்டளைப்படி நாம் நிறைவேற்றியிருக்கின்ற பணிகளை தான் இன்றைக்கு ஆற்றியிருக்கிறோம். அந்த பணிகளை தான் தம்பி முத்துசாமி பேசும்போது இங்கே சுட்டிக்காட்டி, இவைகள் எல்லாம் என்னை கவர்ந்தவை என்றார்.

நான் அவரை இங்கே வரவேற்கிற இந்த மாபெரும் கூட்டத்தில்-மனமகிழ்ச்சியோடு ஒன்றை சொல்லிக்கொள்வேன். முத்துசாமி அவர்களே, தம்பி உன்னை போன்ற எல்லா தம்பிமார்களையும் தி.மு.கழகத்திலே உள்ள அத்தனை உறுப்பினர்களும் வரவேற்கிறார்கள் என்பதை மறக்க கூடாது. அவ்வளவு பேரும், நெஞ்சுறுதியோடு, நெஞ்சு இனிக்க, இனிக்க, மனம் களிக்க களிக்க உங்களை வரவேற்றிருக்கிறார்கள். இந்த வரவேற்பு நீங்கள் பட்ட காயங்களுக்கு மருந்தாக அமையுமென்று நான் நம்புகிறேன். இந்த வரவேற்பு உங்களுக்கு ஏற்பட்ட புண்களுக்கு ஆறுதலாக அமையுமென்று நான் கருதுகிறேன்.

நீங்கள் சொன்னீர்கள்-நாங்கள் ஏதாவது பேச்சிலே தவறு செய்தால் நீங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று குறிப்பிட்டீர்கள். எனக்கு நம்பிக்கை உண்டு. நீங்கள் பேச்சிலே மாத்திரமல்ல-எதிலும் தவறு செய்ய மாட்டீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

நேற்று முன்தினம் ஒரு `சாமி' தி.மு.க.வில் சேர்ந்தார். கரூர் சின்னசாமி. இன்றைக்கு முத்துசாமி. நீங்கள் சேர்ந்து இருக்கிறீர்கள். இப்படி ஐந்தாறு சாமிகள் திராவிட முன்னேற்றக்கழகத்திலே அண்மைக்காலத்திலே சேர்ந்து இருக்கிறீர்கள். இதிலே வேடிக்கை என்னவென்றால் இவர்கள் எல்லாம் ஈரோடு பகுதியை சேர்ந்த ஈ.வே.ராமசாமியின் வழியிலே வந்த சாமிகள் என்பதை எண்ணும் போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த சாமிகள் உருவத்தால் வெவ்வேறு சாமிகளாக இருந்தால் கூட- எல்லாம் நம்முடைய மாபெரும் தலைவர்- நமக்கு வழிகாட்டிய தலைவர் ஈ.வெ.ராமசாமியின் வழி வந்தவர்கள் என்பதால் நான் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

நான் இங்கே நடைபெறுகின்ற இது போன்ற நிகழ்ச்சிகளில் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன். திராவிட இயக்கத்தை ஒன்று சேர்க்க வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கான முன் முயற்சியை நீ எடுக்கிறாயா என்று கேட்டால்- நான் எடுக்க தேவையில்லை- என் தம்பிமார்களே அதை உணர்ந்து அந்த முயற்சியை எடுத்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அடையாளம் தான் இந்த விழா- இந்த நிகழ்ச்சி என்பதை நான் மிக நன்றாக அறிகின்றேன்.

திராவிட இயக்கத்தை ஏன் பலப்படுத்த வேண்டும், ஏன் வலுப்படுத்த வேண்டும், ஏன் விரிவுபடுத்தவேண்டுமென்றால்- நாம் தமிழகத்திலே இன்று நேற்றல்ல- நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திராவிடர் இயக்கம் ஏதோ அரசியல் ரீதியாக கருஞ்சட்டை போட்டு கொண்டோ, சிகப்பு கொடியை ஏற்றிக்கொண்டோ, இரு வண்ணக் கொடியை பிடித்துக் கொண்டோ ஏற்பட்ட பிரிவு அல்ல. `திராவிட' என்ற அந்த இன உணர்வுக்கும் -அதற்கு எதிரான இன உணவிற்கும் இன்று நேற்றல்ல- ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்த போருக்கு- அந்த போராட்டத்திற்கு ஒரு முடிவு வரவேண்டுமென்று தான் நாமெல்லாம் எதிர்பார்க்கிறோம். அந்த முடிவினை இந்த சகாப்தத்திலே நாம் ஏற்படுத்த வேண்டும். அதை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையை- நான் இன்று நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியிலே நிச்சயமாக உணர்கிறேன். இந்த நம்பிக்கை வீண் போகாதென்றும் நான் உறுதியாக சொல்ல விரும்புகிறேன்.

ராமாயணம் -அது என்ன கதையா? புராணமா? என்று கேட்ட போது பண்டித நேரு பட்டவர்த்தனமாக எழுதினார்- ராமாயணம் திராவிடர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நடந்த போராட்டம் என்று நான் அல்ல-தந்தை பெரியார் அல்ல-பண்டித நேருவே அவர் எழுதிய வரலாற்று புத்தகத்திலே-ராமாயணம் ஆரிய திராவிட யுத்தம் என்று குறிப்பிடுகிறார்.

அந்த யுத்தம் இன்னும் முடியவில்லை. அது முடியாத காரணத்தினால் தான் திராவிடர்களின் படைக்கு மேலும் மேலும் வலு சேர்க்க முத்துசாமி போன்றவர்கள் இங்கே இருக்க வேண்டுமென்று நான் சொல்லுகிறேன்.

முப்பதாயிரம் பேர் இன்றைக்கும் இந்த இயக்கத்திலே சேருகிறார்கள் என்றால், இணைகிறார்கள் என்றால் அது சாதாரண விஷயமல்ல.

ஆனால், நாளைக்கு நீங்கள் பத்திரிகைகளிலே பார்த்தால்- இந்த பெரிய விஷயத்தை, மிக சாதாரணமாக வெளியிட்டிருப்பார்கள். நான் எல்லா பத்திரிகைகளையும் சொல்லவில்லை. இந்த இயக்கம் இருக்கக்கூடாது என்று எண்ணுகின்ற பத்திரிகைகள் எவையெவையோ- அந்தப் பத்திரிகைகளிலே மிகச் சாதாரணமாகத் தான் இதை வெளியிட்டிருப்பார்கள். அதற்காக யாரும் கவலைப்படக்கூடாது.

நாளைக்கு பத்திரிகைகளை வாங்கிப் பார்த்துவிட்டு- முத்துசாமியின் பேச்சு பெரிதாக வரவில்லை என்று கவலைப்படக் கூடாது. அல்லது நான் பேசிய பேச்சு பெரிதாக வெளியிடப்படவில்லையே என்று நினைக்கக் கூடாது. அண்ணாவே சொல்லியிருக்கிறார்-என்று தான் அந்தக் காலத்திலே பத்திரிகையிலே வெளியிட்டார்கள். அப்படி வெளியிட்ட காலத்திலிருந்து அண்ணா முதல்-அமைச்சராக ஆகி, அவர் பேசிய உரைகளையெல்லாம் முதல் பக்கத்திலே வெளியிட்ட காலத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஆகவே, இன்றைக்கு நம்மை இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றால், இருட்டு அதிகமாக, அதிகமாகத் தான் வெளிச்சத்துக்கு மதிப்பு. ஒளி எப்போது மேலும் பிரகாசமாகத் தெரிகிறது என்றால், இருளில் தான் ஒளி பிரகாசமாகத் தெரிகிறது. ஒளியிலே இன்னொரு ஒளி பிரகாசமாகத் தெரியாது. ஒரு ஒளி பிரகாசமாகத் தெரிவதற்கு காரணம் இருள். அந்த இருள் சூழ்கின்ற நேரத்தில் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எண்ணிக்கொள்ளுங்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த- இதை மறைக்க- எவ்வளவு இருள் சூழ்ந்தது-அப்படி சூழ்ந்த இருளையெல்லாம் நீக்கிக்கொண்டு-இன்றைக்கு தகத்தகாயமாக மக்களை சந்திக்கின்ற- மக்களுக்காகப் பாடுபடுகின்ற- மக்களுக்காகவே இருக்கின்ற- மக்களுக்காகவே உழைக்கின்ற- மக்களுக்காக தியாகம் செய்கின்ற- மக்களுக்காகவே இருக்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம். அப்படிப்பட்ட இயக்கத்திலே இன்றைக்கு வந்து இணைந்துள்ள முத்துசாமியும்-வந்து இணைகிறாரே என்று பெருமூச்சுவிடாமல் அவரை மகிழ்ச்சியோடு-நல்ல உணர்ச்சியோடு, நல்ல இதயத்தோடு வரவேற்றுள்ள நம்முடைய கழகத்தின் மாமணிகள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அய்யோ, இவர் வருகிறாரே என்று நினைப்பவர்கள் யாரும் இல்லை. ஆகா அவர் வருகிறாரா என்ற மகிழ்ச்சி அடைபவர்கள் தான் இந்த இயக்கத்திலே ஏராளமாக இருக்கிறார்கள். வந்தீர்களா என்பதற்காக கவலைப்படுபவர்கள், வருந்துபவர்கள் யாரும் இல்லை. உங்களை வா, வா என்று அழைப்பவர்கள் இங்கே ஆயிரக்கணக்கானவர்கள், அந்த ஆயிரக்கணக்கானவர் இருக்கின்ற இந்த வெள்ளத்தோடு வெள்ளமாக நீங்களும் சேருங்கள், வீணையின் நாதமாக ஆகுங்கள் என்று உங்களையெல்லாம் கேட்டு கொண்டு வாழ்த்தி வரவேற்று அமைகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails