Tuesday, June 15, 2010

பாபா.. எங்கள் பழனி பாபா...


பாபா...
மனிதநேயத்தை
எங்களுக்கு
அறிமுகம் செய்து
வைத்த ஆசானே!
மத நல்லிணக்கத்தை
மதிக்கச்சொன்ன மகானே!

மனிதரில் புனிதனே!
மங்காத சுடரொளியே!
பகுத்தறிவை எமக்கு
போதித்த அறிவொளியே!

உண்மைக்கு
குரல் கொடுத்தாய்!
உரிமையைக் காக்க
உயிரையே கொடுத்தாய்!

நீ
மொழியால் தமிழன்
இனத்தால் திராவிடன்
தேசத்தால் இந்தியன்
மார்க்கத்தால் முஸ்லிமென்றும்

என்னைச்
சிறையில் அடைத்தாலும்
சிலுவையில் அறைந்தாலும்
சித்திரவதை செய்தாலும்
சீரான மார்க்கம் விட்டு
சிறிதளவேனும் மாறேனென்று
மார்தட்டிச் சொன்னாயே!

எங்களுக்கு
தளபதியாய் முன்னின்று
களம் அமைத்துக் கொடுத்தாய்!
கலங்கரை விளக்காக
நலம் பல புரிந்தாய்!

நாங்கள் உன்னை
பாபா.. பாபாவென்றே
பாசத்துடன் அழைப்போம்..!
நீ எங்களை
அத்தா.. அத்தாவென்றே
அன்பொழுக அழைப்பாய்!

நூற்றி இருபத்தாறு முறை - நீ
சிறை சென்றாய்;
அத்தனை முறையும்
நீதான் வென்றாய்!
சட்டம் உன்னிடம் மட்டும்
சரண் அடைந்தது!

நான்
சிறையில் உன்னைச்
சந்தித்த நாளை
மறக்கவே இல்லை!
பழங்கள் கொண்டு வந்தேன்..
பணியாரம் செய்து வந்தேன்...
வெளிநாட்டிலிருந்து
வாசனை திரவியமும்
வாங்கி வந்தேன்!

ஆனால் நீயோ...
செடிகள் கொண்டு வா
பறவைகள் வாங்கி வா
சிறையின் அறையைச்
சுத்தம் செய்திட
சுண்ணாம்பு கொண்டுவா என்றே
ஒவ்வொறு முறையும்
ஒவ்வொன்றாய் கோட்பாய்...!

எத்தனைச் சிறைகள்...
அத்தனையிலும் நீ
பதியம் வைத்த
கன்றுகளெல்லாம் - இன்று
மரங்களாய்...
விருட்சங்களாய்...
உன் நினைவுச் சின்னங்களாய்...
நிழல் தருகின்றன...!

உன்னை வரவேற்க
ஒவ்வொரு சிறையும்
ஆவலாய்க் கத்திருக்கும்!
ஆம்...!
அவைகளுக்குள் - நீ
அடைபடும் நாள் - அவைகளுக்கு
போகிப் பண்டிகை நாள்!
அதற்கு அடுத்தநாளில் - வெள்ளைச்
சுண்ணாம்புச் சட்டையை
சுவர்கள் போட்டுப் பார்க்கும்!

கிழவனின் பொக்கை வாயாய்ச்
சிரிக்கும் தரையின் குழிகளைச்
சிமெண்ட் கலவையால்
சரிசமம் செய்வாய்!
உனக்குத்தான் - எதையும்
சரிசமம் ஆக்குவதில்
சலிப்போ வராதே!

பழையன கழிந்திடவும்
புதியன புகுந்திடவும்
பாதை அமைத்துத்
தந்தவர் நீங்கள்!
சிறைச் சாலையில் - உன்
அதிகாரம் எப்போதும்
கொடிகட்டிப் பறக்குமே!

வெளியில் நீ பேசினால்
கருஞ் சட்டைப்படை
ஆவலாய் கேட்கும்!
உள்ளே பேசினால்
காவலர் படையும்
ஆவலாய் கேட்கும்!

கைதிகள், காவலர்கள்
பார்வையாளர்கள் என்ற
பாகுபாடு பார்க்காது
போதனைகள் செய்வாய்!

நீ
பாடம் எடுக்கும்
பாணியே அலாதிதான்!
கழுவும் மீனில்
நழுவும் மீன்போல
பொடி வைத்துப் பேசுவாய்!
வெடியாய் வெடிக்கும் - உன்
வார்த்தைகளுக்கு
விடை தெரியாத
விலங்குகள் கூட்டம்
வெறிப்பேச்சு என்றே
விளக்கம் கொடுக்கும்!

கலவரம் வருமென்றே
காவிக்கூட்டமும்
காக்கிக் கூட்டமும்
ஊரையே மிரட்டும்...
உளுத்தரைக் கூட்டும்...!

உன்னால் கலவரம்
வந்ததே இல்லையென்ற
உண்மை விவரம்
உலகே அறியும்!

எங்களுக்காக...
எவரையும் எதிர்ப்பாய்..!
எங்களைக் காக்க
உன்னையே கொடுப்பாய்!

எங்களை எதிர்க்க
எவருக்கும் பயம்..!
அது
அந்தக்காலம்..!

சிறைகளை நாங்கள்
சந்தித்து உண்டு!
வெளியெ நாங்கள்...
உள்ளே நீ...!

ஆனால் - இப்போது
உன் தம்பிகள் யாவரும்
உள்ளே... சிறைக்குள்ளே...
நம் தலைவர்கள் (?) யாவரும்
உல்லாசமாக... எதிரிகளோடு
சல்லாபம் செய்தபடி...
சந்தோசமாக...

போனால் போகட்டும்...
போய்த் தொலையட்டும்..
பிணம் தின்னும் கழுகுகளாலே
பயனொன்றும் இல்லை...
பேடிகள்.. கேடிகள்..
பிழைத்துப் போகட்டும்.. பாபா...!

பாபா...!
உன்னை
வீழ்த்தி விட்டதாய்
வெகுசிலர் நினைக்கலாம்!
ஒலி, ஒளிப் பேழைகளில்
ஒலித்துக் கொண்டும்
எங்கள் நெஞ்சில்
வாழ்ந்து கொண்டும் - நீ
இருக்கின்றாய் என்பதை
எத்தனைப் பேர் அறிவர்?

துக்கம் தொண்டையை
அடைக்குமு போதும்...
தூங்கிட உயிர்
மறுக்கும் போதும்...

கோழைகளைக் கண்டு மனம்
ஒல்தித்தெழும் போதும்...
நன்மை செய்ய
நினைக்கும் போதும்...
உண்மையைச் சொல்லி
விளக்கும் போதும்...

உந்தன் நினைவுகள்
எந்தன் நெஞ்சினில்
ஒவ்வொரு நாளும்...!
ஒவ்வொரு நாழிகையும்...!

பாபா...
வீரனாக வீழ்ந்து
வெற்றிக்கு வழிகாட்டினாய்..!

பாபா - நீ
விளைவித்த
விதைகள் நாங்கள்!
வீரமிக்கவர்கள்..
வீரியமிக்கவர்கள்...
விவேகமிக்கவர்கள்...!

பாபா - நம்
பசும்பொன் சொன்னாரே!
"விவேகமில்லாத வீரம்
முரட்டுத்தனம்!
வீரமில்லாத விவேகம்
கோழைத்தனமென்று!"

வீரத்துடனும் விவேகத்துடனும்
உன் வழிப்பாதையில்
வீழ்வது நாங்களெனினும்
வாழ்வது நன் சமுதாயமாக இருக்கட்டும்!

விரைவாய் வருவோம்..
விரைவில் வருவோம்...
வெற்றிக்கனியைப் பறித்துக்கொண்டு!

விண்ணும் மண்ணும் அதிர...
வானவர்கள் வாழ்த்தொலி முழங்க...
வரவேற்கத் தயாராய் இரு பாபா...!

ஜனவரி 28, 2002 அன்று பழனிக்கு அருகில் உள்ள புது ஆயக்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பழனி பாபாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது மண்ணறையில் அமர்ந்து இனியவன் ஹாஜி முஹம்மதுவால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதாஞ்சலி

-நன்றி இனியவன்

1 comment:

ராஜவம்சம் said...

சொல்லவார்த்தை இல்லை

LinkWithin

Related Posts with Thumbnails