Wednesday, June 16, 2010

இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனது வாழ்வினதும் திருப்புமுனையாக அமையும் நிகழ்வாகும். திருமணம்தான் சமூகக் கட்டுக்கோப்பினதும், சமூக உணர்வினதும் அடிப்படையாகும். இந்தத் திருமணம் எனும் வாழ்வின் திருப்புமுனை அம்சம் சர்வ சாதாரணமான தற்காலிக உணர்வுகளுக்குத் தீனியாக மட்டும் சிலரால் நோக்கப்படுகின்றது. இது தவறாகும். இந்த ஆக்கத்தில் திருமணக் கனவில் மிதக்கும் மணப் பெண்களுக்கான சில வழிகாட்டல்களை வழங்க விரும்புகின்றோம்.
1. கற்பனையை விட்டு விட்டுக் கையேந்துங்கள்!
திருமண வயதை எட்டிய எல்லாப் பெண்களுக்கும் தனது எதிர்காலக் கணவன் பற்றிய ஆசைகளும், கனவுகளும், கற்பனைகளும் இருப்பது இயல்புதான். வீட்டில கல்யாணப் பேச்சு அடிபடும் போதே அவள் கனவுகளில் மிதக்க ஆரம்பிக்கின்றாள். கணவனது உடல் அமைப்பு, உருவ அமைப்பு, உடை-நடை-பாவனை, பேச்சு என அனைத்தையும் பற்றிக் கற்பனை பண்ணி, தானே தனக்கென ஒரு கற்பனைக் கணவனைப் படைத்து வைத்துக்கொள்கிறாள். திருமணத்தின் பின்னர் தனது கணவன் தனது எதிர்பார்ப்புகளுக்கும், எண்ணங்களுக்கும் மாற்றமாக இருக்கும் போது ஏமாற்ற உணர்வையும், வாழ்வின் இலக்கை அடையாத உணர்வையும் பெறுகின்றாள். எனவே திருமணக் கனவில் மிதக்கும் கன்னியரே! உங்கள் கற்பனையைக் களையுங்கள். ஒரு ஸாலிஹான கணவனை வேண்டி ஐவேளைத் தொழுகையிலும், தஹஜ்ஜத் வேலையிலும் அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.
(குடும்பத்தையும், சமய-சமூகக் கட்டுப்பாடுகளையும் மீறித் தாமே தமக்குரிய கணவனைத் தேடிக் கொண்டு ஓடிச் செல்லும் பெண்கள் பற்றியோ, சினிமாக் கதாநாயகர்களைக் கற்பணைக் கணவர்களாக நினைத்துக் கொண்டுள்ள பெண்களைப் பற்றியோ இங்கு நாம் குறிப்பிடவில்லை என்பதைக் கவனத்திற்கொள்க!)
2. வலியின் துணையுடன் வாழ்க்கைத் துணையை அடையுங்கள்!
ஆண்கள்தான் பெண் பார்க்க வேண்டும். மணப்பெண்ணைத் தேட வேண்டும், இதுதான் முறை. அதற்கு மாற்றமாகப் பெண்ணே தனக்கென வாழ்க்கைத் துணையைத் தேடும் நிலை நீங்க வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை அவர்களது ‘வலீ’ எனும் பொருப்பாளர்கள் தேடுவதில் குற்றமோ, குறையோ கிடையாது. ஒரு தந்தை அல்லது சகோதரன் தனது மகளை அல்லது சகோதரியை மணம் முடித்துக் கொள்வீர்களா? என மார்க்க ஈடுபாடுடைய ஒருவரிடம் கேட்பது குறை அல்ல. அல்லது ஒரு பெண்ணின் தந்தையிடமோ அல்லது சகோதரனிடமோ உங்கள் மகளை அல்லது சகோதரியை எனக்கு மணமுடித்துத் தருவீர்களா? என்று கேட்பதும் குற்றமில்லை. உமர்(ரலி) அவர்களது மகள் ஹப்ஸா(ரலி) அவர்களது கணவன் மரணித்ததன் பின்னர் தனது மகளை மணமுடித்துக் கொள்வீர்களா? என உமர்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அவர்கள் அப்போது மணமுடிக்கும் எண்ணம் இல்லை என்றதும், அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களிடமும் கேட்டார்கள்.
பெண்ணின் கண்ணியமும், கற்பும் காக்கப்படவும் அவளது வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கவும் சமூகக் கட்டுக்கோப்புக் களையாமல் இருக்கவும் ஒரு பெண் தனக்குரிய வாழ்க்கைத் துணையைத் தானே தேடிச் செல்லாமல் ‘வலீ’ எனும் தனது பொருப்பாளரின் துணையுடன் வாழ்க்கைத் துணையைத் தேடிச் செல்வது அவசியமாகும்.
3. தகவல் அறிந்து, தரம் அறிந்து தாரமாகுங்கள்!!
உங்களைப் பெண் கேட்டு வந்தவரது உடை-உடல்-தோற்றத்தை மட்டும் பார்க்காது, அவர் பற்றிய முழுத் தகவல்களையும் பெற்று நிதானமாக முடிவு செய்யுங்கள்! உங்களைப் பெண் பார்த்தவரின் தொழில் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள்! மூட்டை சுமப்பதென்றால் கூட ஹலாலான உழைப்பு என்றால் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. ஆனால் ஹறாமான உழைப்பாக இருந்தால் நீங்களும், உங்களது குழந்தைகளும் ஹறாத்தை உண்டு, ஹறாத்தை அணிந்து, ஹறாத்தைக் குடித்து ஹறாத்திலேயே வாழும் ஆபத்து உள்ளதல்லவா?
உங்கள் பெண் கேட்டவரின் குண-நலன்கள் என்ன? மார்க்க ஈடுபாடு என்ன? என்பது குறித்து தீர விசாரியுங்கள்! சில பெற்றோர்கள் கூட இதில் பொறுப்பற்று நடந்துகொள்கின்றனர். திருமணம் முடித்த பின்னர்தான் மாப்பிள்ளை இன்னொரு இடத்தில் மணமுடித்துப் பிள்ளைகள் இருக்கும் செய்திகளும் தெரிய வருகின்றது.
சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டு ‘மாப்பிள்ளை லண்டனில் சிடிசன்; கலியாணம் முடிந்ததும் மகளையும் அங்கு அழைத்துப் போவார்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கின்றனர்.
திருமணம் முடித்ததும் மாப்பிள்ளை போய் விஸா ஏற்பாடு செய்வதாகக் கூறிச் செல்கின்றார். பின்னர்தான் அவர் அங்கு மணமுடித்திருப்பதும், பெற்றோரைத் திருப்திப் படுத்துவதற்காகச் செய்த திருமணம்தான் இது என்பதும் தெரிய வருகின்றது.
சிலர் வரதட்சணை பெறுவதற்காகவும், வெளிநாடு செல்வதற்கு ஏஜென்ஸிக்குப் பணம் கட்டுவதற்காகவும் மணமுடித்து விட்டு கை விட்டு விடுகின்றனர். நாம் பலதாரமணத்தைக் குறை கூறவில்லை அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவோர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே விளக்கியிருக்கின்றோம்.
எனவே இது வாழ்க்கைப் பிரச்சினை. அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு அவதிப்பட முடியாது எனவே நிதானமாக முடிவு செய்ய வேண்டும். தீர விசாரித்துக்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக ஒருவர் பற்றி விசாரிக்கப்ட்டால் அவரது குறையைச் சொல்வது இஸ்லாத்தில் ஆகுமானதாகும். அது புறம் பேசுவதில் அடங்காது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
4 ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுங்கள்!
திருமணம் முடிப்பதற்கு முன்னர் கணவன்-மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது சுன்னத்தாகும். சிலர் தான் நல்ல பிள்ளை என்று காட்ட ‘நீங்களே பார்த்து முடிவெடுங்கள்!’ என்று கூறி விடுகின்றனர்.
‘பார்க்க வேண்டும்!’ என்று சொன்னால் என்ன நினைப்பார்கள்? என்று சிலர் நினைத்து, பெண்ணுக்கு மாப்பிள்ளையைப் பார்க்க இருக்கும் உரிமையை மறுக்கின்றனர். இது தவறாகும். ஒரு பெண், ‘நான் மணம் முடிக்கப் போகும் ஆணைப் பார்த்துத்தான் முடிவு செய்வேன்!’ என்று கூறப் பூரண உரிமையுடையவள். அதைப் பெற்றோர்கள் மறுக்கக் கூடாது; அங்கீகரிக்க வேண்டும்.
5. இஸ்திஹாராச் செய்யுங்கள்!
உங்களைப் பெண் பார்த்தவர் பற்றி விசாரித்து அறிந்ததுடன் மட்டும் நின்று விடாமல் இஸ்திஹாராத் தொழுகை தொழுது அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டுங்கள்! அல்லாஹ்வின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்!
6. பெற்றோரின் சிரமத்தை உணருங்கள்!
வரதட்சணைக் கொடுமை மாப்பிள்ளை வீட்டாரால் மட்டும் நடப்பதில்லை. சிலபோது பெண் பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டங்களை உணராது நடந்துகொள்கின்றனர்.
ஒருவன் தனது மூத்த மகளுக்குப் பணம் கொடுத்திருப்பார்; நகை கொடுத்திருப்பார்; வீடு கொடுத்திருப்பார். இளைய மகளுக்குத் திருமணத்தின் போது மாப்பிள்ளை ‘சீதனம் வேண்டாம்!’ என்று கூறினாலும் ‘மூத்த சகோதரரிக்கு கொடுத்தது போல் எனக்கும் வேண்டும்!’ என நிர்ப்பந்திக்கும் பெண்கள் உள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் கூட ‘தாத்தாவுக்கு வீடு கொடுத்தாங்க! நீங்க மட்டும் கஷ்டப்பட்டு வீடு கட்ட வேண்டுமா?’ எனத் தந்தையின் கஷ்டத்தை உணராது தன் கணவன் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணும் பெண்கள் உள்ளனர். உங்களுக்குத் திருமணம் தொடர்பான பல கனவுகள் இருக்கலாம். அதை நிறைவேற்றும் சக்தி உங்கள் பெற்றோருக்கு இல்லாது இருக்கலாம்.
எனவே, மணப் பெண்களே!
உங்கள் குடும்பம், பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து நடந்துகொள்ளுங்கள்!
7. அறிந்துகொள்ளுங்கள்!
திருமணத்திற்கு முன்னரே திருமணம் தொடர்பான சட்டங்களையும், விளக்கங்களையும் அறிந்துகொள்ளுங்கள்! குடும்பத்தில் பெண்ணின் பொறுப்பு, கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், கணவனின் உரிமைகள் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள்! இதே வேளை, கணவனின் குடும்பத்தினருடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற விபரத்தையும், தெளிவையும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள்! உங்கள் இல்லறம் இனிமையாக அமைய இது பெரிதும் உதவும்!
திருமணந் தொடர்பான சரியான தெளிவு இல்லாமல் தொலைபேசி மூலம் தொடர்பு, பேனா நண்பர், ‘ஃபேஸ்புக்’ தொடர்பு, இணையத்தில் அரட்டைத் தொடர்பு என்பவற்றை மட்டும் வைத்துக் கூட இன்று திருமணங்களும், திருட்டுத் திருமணங்களும் நடக்கின்றன. இவை இஸ்லாமிய நடைமுறைக்கும், குறித்த பெண்களின் வாழ்க்கைக்கும் பாரிய சவாலாக அமைந்து விடுகின்றன.
எனவே, திருமணங் குறித்த தீர்க்க சிந்தனையும், நிதானமான பார்வையும் வளர்க்கப்பட வேண்டும்!
Source : http://www.islamkalvi.com/portal/?p=4858இல்லற வாழ்வில் இணையும் முன்னர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails